வெள்ளி, ஏப்ரல் 27, 2012

உப்பு நதி..

*
கைகுலுக்கி இறுகப் பற்றிக் கொள்கிறாய்
வியர்வையெனப் பெருகும் நிமிடங்களை
இடது புறங்கை நரம்பில் துடைத்துக் கொண்டே இருக்கிறேன்

இந்த நடைபாதையில்
பெயர்ந்துக் கிடக்கும் சதுரக் கற்களில்
புதைந்தபடி
ஒரு மின்கம்பம் இருக்கிறது

அதன் உடைந்த கண்ணாடிக் கூட்டுக்குள்
பெயரற்ற பறவைக் கூடொன்றின்
மெலிந்து துருத்தும் கிளையில் ஒரு இலை
வெயிலைத் தடுத்து

அதன்
நிழல்
என் மீது அசையாமல் கிடக்கிறது

பற்றிக் கொண்டிருக்கும் கைகளுக்குள்
நெளிந்தபடி நழுவுகிறது
உப்பு நதி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக