செவ்வாய், செப்டம்பர் 27, 2011

எட்டாவது நிறம்


ஏழு வர்ணப் பென்சில் கொண்டு
வரைந்து காட்டிய வானவில்லோடு
எட்டாவது நிறமாக
ஒட்டிக் கொள்கிறது
பாப்பாவின்
வளைந்த குட்டிப் புன்னகையொன்று

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 23 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_23.html

வெயில் மங்கும் எழுத்துக்கள்..

*
கண் மூடித் திறந்த ஒரு நொடியில்
இருள் வந்துவிட்டது
அடுத்த நொடியில் மீண்டது
பகலின் நிழலென பரவும் இரவின்
நிழலென பரவும் பகல்

வாசிக்க முடியாமல் மங்கும்
எழுத்துக்கள் மொத்தமும்
புத்தகத்திலிருந்து கொட்டுகிறது
நிழலை இரவை இழுத்துக் கொண்டு

பால்கனியில் வெயில் பட வைத்திருக்கும் தொட்டியில்
ஊற்றி வைத்திருக்கிறேன் இரவை
செடியின் காம்பில் ஊர்கிறது
எழுத்துக்களை சுமந்தபடி
எறும்புகள்

வெயில் பட்டுப் பட்டு
ஒரு வசந்தத்தில் பூக்கத் தொடங்குகிறது
ஒவ்வொரு எழுத்தாய் எல்லா பகலும்
வாசிக்கத் தோதாய் எல்லா இரவும்

*****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 21 - 2011 ) 
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_2752.html

சற்று முன்..

உரையாடல் முடிந்தது
நீ சென்ற பிறகும்
சொட்டிக் கொண்டிருக்கிறோம்
நானும்
சற்று முன்
ஓய்ந்த
மழையின் துளியும்
 
*****
 
நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 18 - 2011 ) 
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_8748.html

பிளாஸ்டிக் நதி


எந்தவொரு நதியின் மீதும்
புகார் சொல்வது
முடியாது என்றபடி அதன்
கழுத்தைத் திருகுகிறேன்
பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது
என்
தாகம்

*****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 16 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_5461.html

துண்டு நிழல்

*
ஜன்னல் வழிக் காற்றில்
சுழலும் மின் விசிறியின் நிழல்
துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த அறையை
என்
தனிமையை

****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 16 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_16.html

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..


மழையைக் கொண்டு வந்து சேர்கிறது
உன் சொற்கள்
அதன் ஈரத் திவலைகள் சிதறி
முளைக்கிறது என் மௌனம்

காரைப் பெயர்ந்த நம் சுவரின்
சுண்ணாம்புச் செதிலில்
விரல் வரைந்த கோடுகளாகி
பாசிப் படர்கிறது
கரும் பச்சை நிறமாகும் பெயர்கள்

விட்டுக் கொடுத்தல்களோடு
முடிந்து போகும் உரையாடல்களை
காலக் காகிதத்தின் கசங்கியப் பக்கங்களில்
சேமித்து வைத்திருக்கிறேன்

அதிலிருந்து புறப்படும் இசைக் குறிப்புகள்
ஜன்னல் கடந்து விரையும் காற்றோடு
போய் சேர்கிறது
கிளையிலமர்ந்திருக்கும்
பறவையிடம்

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலையில்
குறுஞ் செய்தியொன்றை தாவிப் பிடிக்கிறது
கண்கள்
மழையைக் கொண்டு வந்து
சேர்பிக்கிறது உன் சொற்கள்..

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( செப்டம்பர் - 14 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/09/blog-post_1125.html

தீண்டும் விரல்..

*
தீப்பிடித்து எரிகிறது
உன் தூரிகை

வர்ணங்கள் நெளியும் கேன்வாஸில்
தீட்டிக் கொண்டிருக்கிறாய்
இரவு பகல் மறந்து
நம் உரையாடலை

நிழல் வெளிச்சம் மாறி மாறிப்
படரும் மௌனச் சாயல் குழைகிறது என் முகத்தில்

தீண்டும் விரலின் நடுக்கத்தில்
எழுதுகிறாய் உதடுகளின் மீது
ஒரு
முத்தத்தை..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 30 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16834&Itemid=139

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அடைப்பட்ட ஒற்றைக் கதவு..


சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில்
நீயொரு பாதையாக இருப்பதில்லை

பயணத்தின் தீர்மானமற்ற
முதல் புள்ளியை வரைபடமாய்
காகிதத்தில் மடித்துத் தந்தாய்

இளைப்பாறுதலுக்கான
உனது எளிய விதிமுறைகளை
கையாளுவதில் உருவாகும் தயக்கம்
பழுத்த ஓர் இலையைப் போல உதிர்கிறது
என் நிழலில்

திசைகாட்டியின் முள்
துருவங்களை இழந்ததோடு
அறிவிப்புப் பலகையொன்றை தயார் செய்கிறது
உன் குரலென
தன் அடையாளங்களைத் திரட்டி

மீளாத் துயரின் அடர்த்தியுள்
மூச்சுத் திணற நடந்த பின்னும்
ஒரு வெளிச்சமோ
அடைப்பட்ட ஒற்றைக் கதவோ
கனத்த பூட்டோ
உனது சாவியோ
எதுவும் தென்படவில்லை

நீயொரு பாதையென
சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில் நீ இருப்பதேயில்லை

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 29 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16790&Itemid=139

எரிந்து விழும் துயர்

*
நதியின் கண் திறந்துக் கொள்கிறது
நீலம் தோய்ந்த அலையில்

எரிந்து விழும் விண்கற்கள்
முணுமுணுக்கின்றது
என் துயரை

அதில் கவியும்
இந்தத்
தனிமையை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

எதிர்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்

*
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாத
அசௌகரியங்களைக்
கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது
இந்த இரவு

கடக்க முடியாத எல்லைக்கோடல்ல 
உன் வாதம்
நான் விரும்பாத வரைப்படம் அது

எதிர்பார்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்
சுலபமாய் மறந்து விடுவது
மூடியிருக்கும் என் ஜன்னல்களை

வரையறைகளை நிரப்பித் தரச் சொல்லி
நீட்டப்படும் படிவத்தில் எதை நிரப்ப
எதை விட்டுவைக்க

கையெழுத்தை மட்டும் கிறுக்கி வைக்கிறேன்
புலம்பு உன் விமர்சனத்தை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

குரலின் சாயல்..


தொடர்ந்து கேட்கும் குரலின் சாயலை
வரைந்து காட்டுகிறேன்
அடையாளம் தெரியவில்லை உங்களுக்கு

அது
அகாலத்தின் இருளை பூசிக்கொண்டு
ஒரு பறவையின் தொண்டைக்குள்
இறங்கியிருக்கும் என்கிறான் ஒருவன்

பின்ஜாமத்தில்
அழைக்கும் தொழிற்சாலை சங்கொலி தான்
குரலாகிப் போய்விட்டது
என்கிறார்  ஒருவர்

இரவை மையமிட்டு எரியும்
விளக்கின் சுடர் அலைவு தான்
அந்தக் குரல் என்கிறாள்
உடல் சக்கையாகும்  தோழி ஒருத்தி

வீரிட்டழும் ஒரு குழந்தையின் குரலை
கூரையில் பதுங்கி பதுங்கி நகரும்
பூனையொன்று திருடிப் போகிறது

நெஞ்சு விம்மி வெடித்து எழும்
ஓர் ஒப்பாரியில்
பொங்கி வழிகிறது இரவும்
அதன் இருளும்

தொடர்ந்து கேட்கும் குரல்களின் சாயலை
சுண்ணாம்பு உதிர்ந்த
காம்ப்பவுண்ட் சுவரில்
வர்ணங்கள் மங்கிய ஒரு போஸ்டராக
ஒட்டி வைத்திருக்கிறேன்
உங்கள் வாசலில்

அடையாளம் தெரிவதில்லை
உங்களுக்கு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

கோட்பாடுகளின் எளியச் சித்திரங்கள்

*
மற்றுமோர் இரவு தழல் மூண்டு
சரிகிறது நினைவில்
தருவிக்கப்பட்ட காகிதங்கள்
மேஜைப் பரப்பில் இறைந்து கிடக்கிறது

ஒவ்வொரு சொற்களும் எழுந்து நிற்கின்றன
மல்லுக்கட்டும் அர்த்தங்களோடு

கோட்பாடுகளின் எளிய சித்திரங்கள்
கை கால் முளைத்து வெளியேறுகின்றன
முரண்களைக் கையகப்படுத்தி

பேசாத இடைவெளிகளை
நிரப்பும் பிரயத்தனத்தில் எழுத முனையும்
உரையாடலை
முடித்து வைக்கிறது ஒற்றைக் கடிதம்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 19 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4797

டுவிங்க்...

*
சின்னஞ்சிறிய பரிதவிப்போடு
பறக்கிறது குருவி

வேகமாய் ஓடத் தெரியாத
கரப்பான் பூச்சியை கொத்திச் சிதிலமாக்கும்
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
'டுவிங்க்.. டுவிங்க்..'
என்று துடிக்கும் அதன் வாலின்
சங்கேத மொழியை
ஆபீஸ் கீ போர்டில்
டைப் அடித்துக் கொண்டிருக்கிறேன் 

கிர்ரக் கிர்ரக்... என்ற
கரப்பான் பூச்சியின் மரண ஒலியை
சன்னமாய் பிரிண்ட் அவுட் செய்கிறது
காகிதத்தை தொடர்ச்சியாய்
தின்றுப் பழகிய மெஷின்

வங்கிக் கணக்கில்
மாதா மாதம் சேகரமாகும் பணத்தை
மீட்டுத் தரும் பிளாஸ்டிக் அட்டை
பராமரிக்கிறது
என்
கூட்டை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 19 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4797

உதடுகளில் மிதக்கும் சொற்களின் இளமஞ்சள் வெளிச்சம்

*
நிதானத்தை இழந்து விடாதே
என்றொரு அறிவிப்பை உள்ளடக்கிய சூழலை
உன் அழைப்பின் வழியே
உருவாக்குகிறாய்

வரவேற்பு கைக் குலுக்களுக்குப் பின்
மீட்டுக் கொண்ட உள்ளங்கையில் ஒளிர்கிறது
கூரை விளக்கின்
இளமஞ்சள் வெளிச்சம்

அதைப் பருகத் திணறுகிறது
என் நிழல்

மூச்சு முட்டும் சொற்களை
உதடுகளோடு கட்டுப்படுத்த
கைக்குட்டையை உபயோகிக்கிறேன் நாசூக்காய்

இறக்கை முளைத்து புறப்படும் உன் புன்னகை
எல்லா திசையிலும் சிறகடிக்கிறது
உன் உதடுகளின்
வர்ணத்தை சொற்பமாய் உதிர்த்தப்படி

நீட்டப்பட்ட
கண்ணாடிக் கோப்பையின் தளும்பும் மதுவில்
ஓசையின்றி மிதக்கவிடுகிறேன்
பத்திரப்படுத்திக் கொண்டு வந்த
என்
மௌனத்தை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 19 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4797

படர்ந்து கிளைக்கும் மெல்லிய நரம்பின் சினம்..

*
ஒரு
கடுமையான மழை இரவில்
மறுதலிக்கப்பட்ட சஞ்சலங்கள்
முளை விடுகிறது
நஞ்சு நிலத்தில்

அதன் தளிர் இலைகளில்
நுனி சிகப்பில்
படர்ந்து கிளைக்கும்
மெல்லிய நரம்பின் சினம்
அண்ணாந்து நோக்கும்
வானின் வெறுமையில்
சூல் கொள்கிறது மேகமென

கனத்து கருக்கும்
சாம்பல் பொதியாக மிதந்து நகர
வீசும் காற்றில் உடைந்து
கீழிறங்குகிறது முதல் துளியென
மறுதலிக்கப்பட்ட சஞ்சலம்

நிலமெங்கும் அடர்ப் பச்சை

ஒரு கடுமையான
மழை இரவென்று மட்டுமே
முடிவு செய்யமுடியாத
இருள் சிடுக்காக பெருகுகிறது நஞ்சு

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16614&Itemid=139

அங்கொன்றும் இங்கொன்றுமாய்..

*

ஒற்றைப் புன்னகையின்
வளைவில்
கள்ளத்தனமாய்
எட்டிப் பார்க்கும்
பல்லில்
பதுக்கி வைத்திருக்கிறாய்
இந்தப் பகலை

பின்னிரவின்
அடர் நீலம் தோறும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
முளைக்கிறது
உன்
பிரியம்

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 15 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16580&Itemid=139

மந்திரச் சொல்லோடு வந்த வழிப்போக்கன்

*
ஒரு மந்திரச் சொல்லோடு
வந்து சேர்ந்தான்
உன்னைக் கடந்து வந்த
உன் வழிப்போக்கன்

அது கதவுகளற்ற அறையின்
சுவர்களிலிருந்து புறப்பட்ட
குரலின் ரகசியமென்றான்

நூற்றாண்டு ஒட்டடைகள் படிந்த
பரணிலிருந்து
மனிதக் கவுச்சியோடு நழுவி விழுந்த
வரலாற்றுக் குறிப்பு என்றான்

கடவுளும் சாத்தானும்
கைக் குலுக்க நேர்ந்த கணத்தில்
இணைந்த ரேகைகளின் ஒப்பந்தம் என்றான்

தெருவோர இருளில் பதுங்கும்
பசித்த வயிற்றின் சுருக்கங்களிலிருந்து
இறங்கி வந்த உச்சரிப்பு என்றான்

ஒரு மந்திரச் சொல்லோடு
வந்து சேர்ந்தவனின் உதடுகள்
இறுதியாகப்
பூட்டப்பட்டிருந்தது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4778

இறுதியாக அது நிகழ்கிறது..


இறுதியாக அது நிகழ்கிறது

நம்பிக்கையோடு
தொடங்கிய பயணத்துள்
கட்டுடைந்து போன உறவின்
நெருக்கடி விரிசல்

தன்னிச்சையாக முளைவிடும்
வார்த்தைகளின்
அர்த்தப் பிழை

பறப்பதற்கென வளர்ந்த சிறகின்
இறகுகள்
ஏகாந்தத்தில் உதிரும் தருணம்

உதடுகளில் இறுகிய
ஒரு மௌனத்தின் வழியே
கசிந்து பெருகும் அமைதியின்மை

காதல் கணத்தின்
சுவை ஊற்றெடுக்கும் போதே
அதனுள் குமிழ் விட்ட
கசப்பின் ஒரு சொட்டு

இறுதியாகத் தான் நிகழ்கிறது
அது

புறந்திரும்புதல்
விட்டு விலகுதல்
அல்லது
ஒரு
தற்கொலை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 5 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4738