வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அடைப்பட்ட ஒற்றைக் கதவு..


சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில்
நீயொரு பாதையாக இருப்பதில்லை

பயணத்தின் தீர்மானமற்ற
முதல் புள்ளியை வரைபடமாய்
காகிதத்தில் மடித்துத் தந்தாய்

இளைப்பாறுதலுக்கான
உனது எளிய விதிமுறைகளை
கையாளுவதில் உருவாகும் தயக்கம்
பழுத்த ஓர் இலையைப் போல உதிர்கிறது
என் நிழலில்

திசைகாட்டியின் முள்
துருவங்களை இழந்ததோடு
அறிவிப்புப் பலகையொன்றை தயார் செய்கிறது
உன் குரலென
தன் அடையாளங்களைத் திரட்டி

மீளாத் துயரின் அடர்த்தியுள்
மூச்சுத் திணற நடந்த பின்னும்
ஒரு வெளிச்சமோ
அடைப்பட்ட ஒற்றைக் கதவோ
கனத்த பூட்டோ
உனது சாவியோ
எதுவும் தென்படவில்லை

நீயொரு பாதையென
சுலபமாக உன்னைக் கடந்து
போகும் வகையில் நீ இருப்பதேயில்லை

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 29 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16790&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக