ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்..

*
சலுகையோடு நீட்டப்படும்
கரங்கள் 
பெற்றுக் கொள்கின்றன 
ஒரு கருணையை 

மரணத்தை ஏந்திச் செல்லும் 
கால்கள் 
அடையத் துடிக்கின்றன 
இறுதி தரிசனத்தை 

இருப்புக்கும் இன்மைக்குமான 
பெருவழியில் 
சுவடுகளாகிறது
திரும்புதலின் பாதையும் 
காத்திருந்து எரியும் தெருவிளக்கும் 

***** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 28 - 2011 )

புதன், ஆகஸ்ட் 24, 2011

சின்னஞ்சிறிய இலைகள்..

*
பிளவுண்ட கரிய அலகில்
இரைப் பற்றுதல்
துள்ளத் துடிக்க இறுக்குகிறது
உயிரை

உயிர் வடிவம்
கனமெனவோ கனமற்றோ
அசைகிறது
பசியின் வயிற்றில்

மரக்கிளையில் துடிக்கும்
சின்னஞ்சிறிய இலைகள்
மெல்ல மெல்ல இழக்கின்றன
தம் நிறத்தை..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 21 - 2001 )

வாக்குறுதியின் நகல்..

*
ஒரு
வாக்குறுதியின் நகல்
தன்னகத்தே எழுதிப் போகும்
சொற்களின்
இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை

அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை
நீட்டும் உள்ளங்கைககள்
ஏந்திப் பெற விரும்புவது

ஒரு சின்னஞ்சிறிய
அறிமுகத்தை
மட்டுமே

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 14 - 2011 )

அதிர்ஷ்ட மீன்


*
ஆறடி நீளம்
இரண்டடி அகல கடலுக்குள்
கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய
மீனுக்கு
தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக
உணவு உருண்டைகளின் மீது பூசிக்
கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை

நீள் பாதை நோக்கி மட்டுமே
சப்பையாய் வளர முடிந்ததில்
ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க

மாதம் இரண்டு முறை வந்து போகும்
மன அழுத்த டாக்டர்
நிவாரணி ஊற்றிச் செல்கிறார்

அம்மீனுக்குத் தெரியவில்லை

தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும்
தன் மன அழுத்தத்தால்
அந்த டாக்டரின் மன அழுத்தம் கொஞ்சம்
நீங்கும் என்றும்

அடுத்த முறை வரும் டாக்டரிடம்
நிச்சயம் கேட்க வேண்டும்
' இந்தக் கடலை மீறி வளர
நான் என்ன செய்ய வேண்டும்..?'

****** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 7 - 2011 )

செதில்களின் பெருமூச்சு..


பிடித்து உலுக்கும் கனவின் திரையில்
அசைகிறது உன் நிழல்

நீயுன் தூண்டில் வீசிக் காத்திருக்கிறாய்
என் உரையாடலின் உள்ளர்த்தம்
சிக்குவதற்கு

மரப்பலகைகள் வேய்ந்த பாதையில்
ஈரம் மின்னும் அந்தியின் இளமஞ்சள் நிறம்
இந்த அறையெங்கும் பரவிய
ரகசியத்தின் சங்கேதக் குறிப்புகளை
தேடிச் சலிக்கிறேன்

மூழ்குகிறது அகாலம்..

சின்னஞ்சிறிய நோக்கும் கூர்மையில்
கசியும் கானல் குட்டையில்
நீந்துகிறது நமது கண்கள்

யாவுமே செதில்களின் பெருமூச்சென
எழுதித் தருகிறாய்
இந்த மௌன இரவில்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 1 - 2011 )

நிழல் திசை

*
வெயிலின் அழைப்பு வந்ததும்
விரைகிறது நிழல்
எல்லா திசையிலிருந்தும்
எல்லா திசைகளுக்கும்
ஒரு
பட்ட மரம்
நிற்கிறது
சாட்சியாக

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 29 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4719

அமைதியாக அடங்கிப் போகும் வெளிச்ச விளிம்பு..

*
குறைவான அவகாசம் தான்
கொடுத்திருக்கிறாய்
ஒரு முடிவை எடுப்பதற்கு 

இதுநாள் வரை
வாழ்ந்த நிமிடங்களின் மீது
இறுதியாக
ஒரு தீர்மானத்துக்கு வர முடிவதில்லை

தூக்கமில்லாமல்
விம்மித் தவித்த இரவுகளின் நிழல்கள்
படுக்கையறை சுவரெங்கும்
திட்டுத் திட்டாய்ப் படிந்திருக்கிறது 

நெடுநாளாய் எழுதி வந்த
பேனாவின் மெல்லிய கூர்மைக் கொண்டு
அவைகளை
சுரண்டியெடுப்பதில் நம்பிக்கையில்லை

புரிந்துக் கொள்ள முடிந்ததாக
நினைத்திருந்த
நவீன ஓவியமொன்றின் வர்ணத் தீற்றல்கள்
வேறொன்றாகக் கரைகிறது
இந்த அகாலத்தில்

குறைந்த ஒளியை உமிழும்
குமிழ் விளக்கின் கீழ்
அமைதியாக அடங்கிப் போகும் 
வெளிச்ச விளிம்பில் மெல்ல
நகர்ந்து கொண்டிருக்கிறது
என் பார்வை

ஆயினும்
உன் எளிய கடிதத்தின் மூலம்
குறைவான அவகாசம் தான் கொடுத்திருக்கிறாய்
ஒரு முடிவை எடுப்பதற்கு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 29 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4719

துருப்பிடித்த ஒலிகள்..

*
அடர் மௌனத்தின்
தாழ்கள் நீங்கிக் கொண்டு
துருப்பிடித்த கீல்களின் ஒலியென
வெளியேறுகிறது
மரணத்தின்
பெருமூச்சு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 22 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4694

உடையும் சொற்களின் ஈமச் சடங்கு

*
அவன் வரத் தவறிய பாதையின் பூக்கள்
இதழ்ப் பறத்துகின்றன
நிழல் தோறும்

தங்கிப் போதல் சாத்தியம் தானென
பிதற்றுகிறான் கையில் கிடைத்த
தாளின் நுனி மடக்கி

உடையும் சொற்களின் ஈமச் சடங்கை மட்டும்
கண்ணீர்ப் படித்துறையில் கணுக்கால் நனைய
மீன்களுக்கு இட்டப் பொரியென
உப்பச் செய்கிறான்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 22 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4694

வடிவங்களை அறுத்து அடுக்கும் கோட்பாட்டுப் படிகள்..

*
நமக்கிடையே
இறக்கை முளைத்தும்
பறக்க இயலாத
உரையாடல் குஞ்சுகளை

தன்
பசிக்கிரையாக
கொத்திச் செல்ல
புராதனக் கட்டிடத்தின் கூரைப் பொந்தில்
தருணம் பார்த்துக் காத்திருக்கிறது
பருந்து ஒன்று

வட்டம் சதுரம்
நீள்சதுரம்  நீள்வட்டமென
வடிவங்களை அறுத்து அடுக்கிய
கோட்பாட்டுப் படிகளில் ஏறியோ இறங்கியோ
கடக்க நேரிட்ட மனிதர்கள்

வர்ணம் பூசிக் கொள்ளும்படி
சிபாரிசு செய்கிறார்கள்
நம்
இறக்கைகளுக்கு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 22 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4694

வரலாற்றின் உலோகக் கிண்ணங்கள்..

*
கைகளில் ஏந்தி நிற்கும்
வரலாற்றின் உலோகக் கிண்ணங்களில்
ஊற்றிப் போகிறார்கள்
என்
மூதாதையரின் ரத்தத்தை

நினைவுகூற மறந்துவிட்ட காயங்களை
துக்கம் தொலைந்த இரவுகளின் வெம்மையை
அதன் இருண்ட நிறத்தை
தனிமைப் புலம்பலை
ஊற்றிப் போகிறார்கள்
கிண்ணங்களில்

பருகியபோது சிதறும் துளிகள் யாவும்
மீண்டும் மீண்டும் துளிர்த்தபடி
ஓயாது பிரசவிக்கிறது
போர்களை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 10 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16047&Itemid=139

நிலுவையில் இருக்கும் மௌனங்கள்..


நீயொரு சமரச உடன்படிக்கையோடு
துயரத்தின் வாசலில்
உட்கார்ந்திருக்கிறாய்

நிலுவையில் இருக்கும் மௌனங்களை
பட்டியலிடுவதில் தொடர்கிறது
இந்த மாலையும்
அதன் தனிமைக் கோப்பையில்
ஊற்றப்படும் மதுவும்

நுரைத் தளும்ப பொங்கும்
பிழையின் நீர்மையில்
மையமிட்டுக் குமிழ்ந்து மொக்குடைகிறது
அத்துயரத்தின் வாசலில்
நிர்க்கதியாய் உன்
புன்னகை

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 9 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16005&Itemid=139

தனிமையைக் கைப்பற்றுதல்

*  
ஒரு
தனிமையைக் கைப்பற்றுதல்
என்பது
கானலாகிக் கரைகிறது

கான்க்ரீட் நகரின்
நிமிடங்கள் சதா துருப்பிடிக்கின்றன

அதன்
தூய்மைக் கணத்தை தரிசிப்பதற்குள்
எத்திசையிலிருந்தாவது
துப்பப்படுகிறது
அதன் மீது ஓர்
எச்சில்

தனக்கானத் தனிமையைக்
கைப்பற்றுதல்
என்பது
வளரும் சுவர்களுக்கு நடுவே
அசையாத பல்லியின் கீற்றுப்
பார்வையை ஒத்துப்
பெருகுகிறது
 
இந்நகரெங்கும் கைவிடப்பட்ட
குறுகலான
சந்துகளைப் போல்
 
*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 6 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15979&Itemid=139

மஞ்சள் பட்டாம்பூச்சி..

*
மொட்டை மாடியில் காயும்
பாப்பாவின் பச்சை நிற பிராக்கில்
ஒரு
மஞ்சள் பட்டாம்பூச்சி
ஈரம் சொட்டக் காத்திருக்கிறது

தன்
சிறகுகள் உலர..

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 4 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15940&Itemid=139

நிரம்பித் தளும்பும் கானல்..

*
சுவரில் தொங்கும்
ஓவியப் பறவைகளின் சிறகுகள் நிழல்
பரத்திய நிலத்தில்
நடக்கும் வழிப்போக்கன்

தொலைவில் நெளியும் கானல்
இந்த அறையில்
வரவேற்பாளினி புன்னகையில் வழிந்து
நிரம்பித் தளும்புகிறது
கண்ணாடி டீபாயிலும்

ஆங்கில தினசரியின் தலைப்புச் செய்தியில்
இரண்டாய் உடைந்த ரயில் பெட்டியை
கொத்தித் தூக்குகிறது அப்பறவை
அசையும் மின்விசிறியின் சிறகுகள் கொண்டு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 1 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4606

அலகுகள் முடையும் கூடு..

*
கிரெடிட் கார்டு பேங்க் லோன்
நகைக் கடன் கந்து வட்டி
இன்ஜினீயர்
மேஸ்திரி
இரவு பகல்
வெயில் மழை
பார்வைக் குத்தும் வாடகை வீட்டின்
மோட்டுவளை
சொந்த வீடு கட்டும் கனவின் மீது
சதா மணல் தூறல்

துடைப்பத்தின் ஈர்க் குச்சி
தளர்ந்த சனல் துண்டு
நெளிந்த கட்டுக் கம்பி
சல்லி வேர்
பிளாஸ்டிக் நூல்
பிளவுப்பட்ட மரக்கிளையில்
இரவு பகல்
வெயில் மழை
காற்று மற்றும் பலத்த காற்று
கனத்த முட்டை ஓட்டுக்குள்
தன் உயிர் மற்றும்
ஏமாந்த முட்டைக்குள் குயில் கரு
பூமி நோக்கி வெறித்தபடி
சதா இலைகளின் சலசலப்பு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 1 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4606