செவ்வாய், செப்டம்பர் 30, 2014

காயாத ஒற்றை ரத்தத் துளி..

*
பிடித்தங்களின் குறுவாள் 
பாய்கிறது 
நினைவின் அடிவயிற்றில் 

இன்னும் காயாத 
ஒற்றை ரத்தத் துளியாகிறது 
நழுவிய 
கடைசி வாய்ப்பு  

**** 

விட்டுக்கொடுத்தலின் நடைபாதை வெறுமை

*
திரும்புதலின் எல்லை வரை  
நடக்கத் தூண்டுகிறது 
உரையாடலின் ஒவ்வொரு இறுதிச் சொல்லும் 

ஓர் அர்ப்பணிப்பை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் 
என்ற கட்டாயம் ஏதுமில்லை 

விட்டுக்கொடுத்தலின் நடைபாதை வெறுமை 
ஒருபோதும் இசைப்பதில்லை 
அதன் தனிமையை 

யாவற்றையும் 
ஒருங்கிணைக்கும் மையத்தில் எரிகிறது 
ஓர்  அணையாவிளக்கு 

திரும்பதலின் எல்லைவரை 
துணை வரும் வெளிச்சமாகவும் 
அல்லலுற வீசும் இருளாகவும் 

****

சலிக்காமல்..

*
முற்றுப்பெறா
கவிதையொன்றின் பக்கம்வரை
சலிக்காமல்
புரட்டிக்கொண்டிருக்கிறது
ஜன்னல் காற்று

***

கொஞ்சமேனும்..

*
நான்
நிச்சயமாய் கொஞ்சம் கொஞ்சமாக
செத்துக்கொண்டிருக்கிறேன்

எப்போதும் போல் இப்போதும் வந்து சேர்வதற்கு
நேரம் கடத்தாதே

நான்
எரியூட்டப்படுவதற்கு
ஐந்து நிமிடத்திற்கு முன்னாலாவது
வந்துவிடு

ஓர்
எளிய நம்பிக்கையின் சிறு விதைக்குள்
கொஞ்சமேனும் நீயிருக்கிறாய் என்பதை
நிரூபிக்கும் பொருட்டு

****

ஒன்றன் பின் ஒன்றாக..

*
நான் 
வந்த பிறகும் 
இன்னும் பகிரப்படாமலே உருகத்  தொடங்குகிறது
நீ ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம்

அடக்கமான வெளிச்ச விளிம்புக்கு
பின்னிருக்கும் நிழலில்
புதைந்திருக்கிறது உன் முகம்

தாமதத்துக்கான
ஒவ்வொரு காரணங்களையும்
ஒன்றன் பின் ஒன்றாக
ஒரு மெழுகுவர்த்தியைப் போல
இந்த மேஜையின் மீது ஏற்றி வைக்கிறேன்

கூடுதலாகிப்போன சொற்ப
பிரகாசத்தில்
முதலில் வெளிப்பட்டது ஒரு
வளைந்த புன்னகை

பிறகு ஒரு சொல்

****

அதீத தனிமையின் நுனி விரல்..

*
என்னைக் கொஞ்சம்
அணைத்துக்கொள் என்றாள்

அதீத தனிமையின் கேவலோடு

விழுதுகளின்
நுனி விரல் கொண்டு
அவளைத் தொட்டுத் தொட்டுத்
தொட்டுக்கொண்டேயிருக்கிறது

ஆலங்காற்று

***

இலை இலையாக உதிரத் தொடங்கும் சொல்லின் சருகுகள்..


*
சொல்லை வைத்து ஆடிய சூதில்
ஓர் அவனை வென்றேன்

இழந்த அவனின் வெற்றிடத்தை
அபகரித்துக்கொண்ட சொல்லைக் குறித்து
விசாரிக்கத் தொடங்கினான்
பயண நெடுவழி தோறும்

ஓய்வாய் உட்கார்ந்துவிட்ட மர நிழலில்
பாடலொன்றை பாடியது களைப்புத்தீர
அச்சொல்

குறிப்புகள் எடுத்துக்கொண்டான்

சொல் ஓய்ந்து அயர்ந்தபோது
மரத்தின் இலைகளை எண்ணிக் கொண்டிருந்தான்

தொடர்ந்த பயணத்தில்
தர்க்க வாதம் பண்ணினான் அதனிடம்

நடக்க நடக்க பாதையெங்கும் இலை இலையாக
உதிரத் தொடங்கிய
சொல்லின் சருகுகள் ஒவ்வொன்றும் நிறம் மாறின
வேறு வேறு சொல்லாக

நான் அவனாகிப் போன சூதில்
என்னை வென்ற சொல்
பெருங்காடாகியது

***

வற்றிவிட்ட இதயத்தின் மரவுரி..


*
ஒளித்துகள் சரியும் பள்ளத்தாக்கில்
துளிர் விடுகிற இரவை பறிக்கிறது
உன் என் அவன் விலா எலும்பு


செரித்த விதைகளின் தோட்டம்
மலரச் செய்கிறது
ரத்தம் ருசிக்கும் கூர் பற்களை
விஷ வால் சுழலும் நைச்சியத்தை பழிக்கிறது
தொடக்கக் கால அசரீரி

குற்றத்தின் முன் மண்டியிடும் பாவங்களை
முகமூடிகளாகத் தயார் செய்து தரும் தச்சன்
எனது தோழன்

அவனுக்கொரு காவியுடையை நெய்து
தருவதாக எழுதி வைத்த சத்தியத்தை
சுவர் மீது தின்று திரிக்கிறது கரையான் கூட்டம்

ஈரப்பதம் வற்றிவிட்ட இதயத்தின் மரவுரியை
தரித்திருப்பினும் ஊடுருவும் குளிர்
குத்துகிறது விலாவை

நூற்றாண்டுகளில் உளுத்துப்போய்
ஒத்துக்கொள்வதாக முனகுகிறது அசரீரி

ஆமென்

****

ஒரே ஒரு முறை மட்டும்..


*
முதன் முதலாக
நீயுன் இரவை ரகசியமாய் திறந்தது ஏன்

முதன் முதலாக
வெட்டுப்பட்ட விரலில் இருந்து கசியும்
ரத்தத்தை ருசித்தது ஏன்

முதன் முதலாக
உனது ப்ரியத்துக்குரிய உதட்டில் முத்தமிட
துணிந்தது ஏன்

முதன் முதலாக
ஒரு கெட்டவார்த்தையை உச்சரித்துப் பழக
முயன்றது ஏன்

முதன் முதலாக
வெளிச்சம் குறைந்த கதவடைக்கப்பட்ட அறைக்குள்
கிடந்து கதறி கதறி அழுதது ஏன்

முதன் முதலாக
பாடையொன்றை தோளில் ஏற்றி வைத்தபோது
தெருவில் சிதறும் மலர்களுக்காக வருத்தப்பட்டது ஏன்

முதன் முதலாக
நேசத்திற்கினிய தோழி தொடர்ந்து அழைத்தும்
அழைப்பை ஏற்காமல்
செல்போனை தண்ணீருக்குள் விட்டெறிந்தது ஏன்

முதன் முதலாக
ஓர் அந்நிய உடல் மீது உருக்கொண்ட வேட்கையை
என்ன பெயரிட்டு அழைக்கலாம் என யோசித்தது ஏன்

முதன் முதலாக
விருப்பப்பட்டு வாங்கிய நாய்க்குட்டியை
நெரிசல் மிகுந்த சாலையோரம் கைவிட்டது ஏன்

முதன் முதலாக
கைக்கு வந்து சேர்ந்த ஒரு நீண்ட காதல் கடிதத்தை
ஒரு முறை மட்டும் வாசித்து முடித்து நெருப்பிட்டு
எரித்தது ஏன்

முதன் முதலாக
காமத்தை அனுபவிக்க நேர்ந்த இரவில்
வேட்டை மிருகத்தின் தீப்பிழம்பு கண்களை
நினைத்துக் கொண்டது ஏன்

முதன் முதலாக
ஒரு துரோகத்தின் நிழலிலிருந்து மீளத் தெரியாமல்
முகத்தை மடியில் புதைத்துக்கொண்டு
தற்கொலைப் பற்றி யோசித்தது ஏன்

முதன்முதலாக துளிர்த்த
இன்னொரு காதலுக்குள் அவ்வளவு சிலிர்த்தது ஏன்
அந்த முத்தம் அத்தனை இனித்தது ஏன்
ததும்பிய காமத்துக்குள் இருள் குழையக் குழைய மிதந்து ஏன்

முதன் முதலாக
உனது ரகசியத்தை நேசிக்க கிடைத்த வாய்ப்பை
பெய்து முடித்த மழையின் கடைசி சொட்டுக்குள்
ஒளித்து வைத்தது ஏன்

*****

துளி நட்சத்திரம்

*
செம்மண் மீது 
விழுந்து 
நட்சத்திரமாகிறது 
சிவந்துபோய் 
முதல் மழைத்துளி 

***

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

அழைக்கும் குரலில் கூடொன்றை முடையும் பறவை..

*
ஒடை மரத்துக்குள் புதைந்த நிலவை 
மீட்கத் தெரியாத இரவின் விரல்களைச் 
சுற்றிக் கொண்டுபடபடக்கிறது காற்று 

பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து 
அழைக்கும் உன் குரலில்  
கூடொன்றை முடைகிறது துயரப் பறவை 

நானற்ற வானின் நட்சத்திரக் குவியல்களை 
அபகரித்துகொள்ளும் சொல்லின் செதில்  
உப்புக்கரிக்கிறது நினைவில் 

****

நட்சத்திரங்கள் மீது எனக்கு புகார்கள் இல்லை..

*
என்னை நீ பேசவிடாமல் செய்துவிட்டாய்
மறுக்கவோ மீறவோ மனமற்று நிற்கிறேன்

உன்னை ஆள்வதில் நான் கொள்ளும் கர்வத்தை
உனக்குப் பரிசளிக்க விரும்பியே காத்திருக்கிறேன்

என் சொற்கள் நேற்று இரவின் நிலாப் பொழுதில்
தொலைந்து விட்டன
நட்சத்திரங்கள் மீது எனக்கு புகார்கள் இல்லை

தயங்கியபடி நகர்ந்த மேகங்களுக்கு பின்னே
உன் குரலின் மந்தகாசம் மிதந்ததை
குறுஞ்செய்தியாக்கி அனுப்பியிருந்தாய்

வரிசையாக முத்தமிட்டபடி வந்துகொண்டிருந்த
மஞ்சள் நிற புன்னகைகள் மூலமாக
நீ என்னை பேசவிடாமல் செய்துவிட்டாய்

குறுகுறுவென அதிரும் இந்த செல்போனை
எனது உடலின் ரகசிய இடம் தேடி
ஒளித்து வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்

பெருகும் காதலோடு நீயென்னை சீண்டும் கணத்தை
தொடர்ந்து தந்தபடி மேலும் மேலும்
அந்த அதிர்வு
என்னைப் பேசவிடாமல் செய்யட்டும்

*****

பக்குவம் பிசகிவிடும்போது சரடாகி மின்னும் மௌனம்..

*
எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

இனி பறிப்பதற்கு பூக்கள் மிச்சமில்லை
என்றபோதும்
செடி இருக்கவே செய்கிறது

ஓர் அனுமதியின் இறுதியில் உருவாகும் எதிர்பார்ப்பு
அனுசரணை மட்டுமே என்றாலும்
ஒத்துவராத பட்சத்தில்
வெளியேறிவிட வாசல்கள் உண்டு

காயங்கள் மீது பூசப்படும் அன்பை
சொற்கள் கொண்டு குழைக்கும் லாகவத்தில்
பக்குவம் பிசகிவிடும்போது
துளிர்க்கும் கண்ணீரைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்

எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

ஒரு முத்தம் தொடங்கும் நொடியில்
மௌனம் சரடாகி மின்னும் போது
அவ்வளவு கலக்கம் கொள்ளத் தேவையில்லை

இறுக அணைத்துக்கொள்ள தோன்றும் சூழலை
தேர்வு செய்யவோ கையாளவோ முடியாமல் போவதின்
இறுக்கத்தை
விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை

மிக அருகிலிருந்து பார்க்க நேர்ந்த ஒரு மரணத்துக்குப் பிறகு
ப்ரியமானவளை புணரத்தூண்டும்
ஹார்மோன்களை
நொந்துக்கொள்ள வேண்டியதில்லை

எப்போதும் போலவே
அப்போதும் இருக்கலாம்

ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான வித்தியாசங்களின்
இடைவெளிக்குள்
சஞ்சரித்து தவிக்கும் மௌனத்தை எதிர்கொள்ளும்
அசௌகரியம்
என்பது

எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம்

****

மையப் பிழை

*
மரணத்தின் 

மையப் பிழையில் சுழல்கிறது 
வாழ்வெனும்
சிறு காற்று

***

கடைசி கை குலுக்கல்..

*
எப்போதும் 

ஒரு கடைசி கை குலுக்கலில் 
மிஞ்சி விடுகிறது 
சொல்ல மறந்த ஏதோ ஒன்று

***

ஜன்னல் திரையின் மலர் நுனி

*
இரவின் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது பனி
பனியை நனைத்துக் கொண்டிருக்கிறது 

துருப்பிடித்த தெருவிளக்கின் 
மஞ்சள்நிற ஒளி

ஊளையிடும் நாயொன்றின் வால் அசைவை
அகலக்  கண்களால் 
மொழிபெயர்க்கிறது  
வேற்ற தேசத்து ஆந்தை  

இயங்கும்  உடல்களை  பெயர்  பொருத்தி 
உச்சரிக்கின்றன  சுவர் பல்லிகள்
கடிகாரத்தின்  டிக் ஒலி 
தீண்டுகிறது  ஜன்னல் திரையின் மலர் நுனியை 

இரவின் மீது பனி இறங்கிக்கொண்டிருக்கிறது 

****

வேறோர் ஆமாம்..

*
ஓர் ' ஆமாம் ' - க்கும்
இன்னோர் ' ஆமாம் ' - க்கும்
இடையில் வேறோர் ஆமாம் இருந்திருக்கிறது.

அதை ஒத்துக்கொள்வது அத்தனை சுலபமாயில்லை
ஆனால்
அது இங்கு இப்போது இருக்கிறது

வெளிப்படுவதில்
நிறைய ஆமாமும்
அதனுள் கொஞ்சம் இல்லையும் இருப்பது குறித்து
எந்த ' ஆமாம் ' க்கும் பிரக்ஞையில்லை

இல்லை என்பதின் ஆமாமில்
ஆமாம் என்பது இல்லை

****

ஓடும் நதியிலிருந்து..

*
கூழாங்கல் போல் நழுவும் வாழ்வின் 

கரையில் நின்று
ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீரள்ளிக் 

குடித்தப் பின் 
நானும் நதியானேன்

***

மேற்கொண்டு..

*
' ஒரு சொல்லில் என்ன இருக்கிறது..? ' - என்றான்

' ஒரு சொல்லில் ஒரு சொல் மட்டுமே இல்லை..' - என்றேன்

கோபமாய் கிளம்பிவிட்டான் 

மேற்கொண்டு சொல்லவிருந்த அத்தனை சொற்களையும் 
தன்னோடு கொண்டு..

***

காரணங்களின் மிச்சம்

*
செத்துப் போவதற்கான
அத்தனைக் காரணங்களையும்
சுய அலசல் செய்து முடித்தாயிற்று

ஆனாலும் 


மிச்சமிருக்கிறது

செத்துப் போதல் 

*****

துளி நீரென..

*
அயர்ச்சியின் முதுகுத்தண்டில்
ஒரு துளி நீரென

இறங்குகிறது

உன்
வரவு

***

நசுங்கும் மகரந்தங்களின் குரல்வளை

*
மரண வளைவை செதுக்கிட
சொற் சரிவில்
இறங்குகிறாய்

நசுங்கும் பூக்களின் மகரந்தங்களில்
குரல்வளை அறுந்துத்
தொங்குகிறது
அர்த்தத்தின் வனம்

****

தவிக்கும் கதைகளின் உரையாடல்கள்

*
காதுள்ள சுவர்கள் அழுகின்றன
தன்னோடு இருத்திக் கொள்ள முடியாமல்
தவிக்கும் கதைகளின் உரையாடல்கள்
அவைகளைத் தூங்கவிடுவதில்லை

மிகவும்
ஆதுரத்துடன் நிரடும்
தனிமை விரல்களின் ரேகைகளில்
தட்டுப்பட்டுவிடுகிறது
கொஞ்சம் ஈரம்

****

பாசாங்கு செயும் புன்னகையின் விளிம்பில்

*
பட்டென்று உடையும் கண்ணாடியை
என் புறம் திருப்புகிறாய்

அழுவதாக பாசாங்கு செய்யும்
புன்னகையின் விளிம்பில்
உச்சரிக்கத் தவிக்கும்
ஒற்றை
சொல்லும்

பட்டென்று உடைகிறது

***

சுவர்கள்

*
சிரித்து அடங்கிய பிறகும்
எதிரொலிக்கிறது சுவர்

சிரித்த வாக்கியமும்
அடங்கிய மௌனமும்
வேடிக்கைப் பார்க்கிறது

அவ்வொலியை

****

அசை போட்டு நகரும் பகல்

*
அவமானத்தின் படல் தள்ளி
மெல்ல நுழைகிற
ஆட்டின் வால் அசைக்கிறது கணத்தை

தாடை நெரிய
அசை போட்டு நகர்த்தும் பகல் மீது

கீச் என்று எழுதிப் போகிறது

பொறுமையிழந்த
ஒரு குருவி

****

வலிப் பூச்சிகள்

*
வாதையின் காட்டிலிருந்து அடர்ந்த இருள் மரங்களின்
அதிகபட்ச உயரத்தைக் கடந்து பறக்கும் 

வலுவற்று
மெல்லிய சிறகு உதிர வீழ்கின்றன
வலிப் பூச்சிகள்

ஈரச் சதுப்பு நொதியும் நனவிலித் துளையில்
ஊற்றுக்கண் திறக்கிறது
உப்புத்துளி

****

அலை ஏறி மிதக்கும் குமிழ்..

*
எட்டிப் பிடித்தலில் நழுவிடும்
அர்த்தங்களை
நீந்த அனுமதிக்கும்
கண்களைக் கொண்டிருக்கிறாய்



கரை வந்து மோதும் அலை ஏறி 
மிதக்கும் 
குமிழ் மீது உடைகிறது 
சொல்லின் ஒலி 

****

இருப்பின் மீது மெழுகும் சிரிப்பு..

*
மறுப்பேதும் சொல்வதற்கில்லை என்கிறாய்
ஆடும் மெழுகுவர்த்திச் சுடரை
கை குவித்து அடக்குகிறாய்

என் இருப்பின் மீது
மெழுகும் வெளிச்சத்தில்
சிரிக்கிறாய்

வந்து நிற்கும் ரெஸ்டாரன்ட் சிப்பந்தியிடம்
மேலும் இரண்டு புன்னகைகளை
ஆர்டர் செய்

****

அத்தனை நெருக்கத்தில் வேண்டாம்

*
தொலைதூர பஸ் பயணத்தில்
நீ அருகில் இருக்க வேண்டியதில்லை

மென் அலை வீசும் குளக்கரைப் படியில்
கால் நனைக்க நீ துணை நிற்க வேண்டாம்

தோள் உரச உன் கைக்குள் கை நுழைத்து
தடுமாறி தடுமாறி சிரித்து 

வரப்பில் நடக்க
அத்தனை நெருக்கத்தில் வேண்டாம்

வான் பார்த்து மல்லாந்து கிடக்கும்
என் வெட்டவெளி அருகண்மையிலும் வேண்டாம்

தட்டும் கதவு சத்தம் கேட்டு 

நிதானமாய் திறக்கும்போது
வாசலில் நீ நின்றுக்கொண்டிருந்தால் போதும்

****

குழம்பும் நிலவைத் தழுவும் கேவல்..

*
இரவு பூசிய தனிமைக் 

கிணற்றடி
உள்ளங்கையில் தாங்கிய முகம்
 

குலுங்கும் முதுகு
குழம்பும் நிலவைத் தழுவும் 
முகில்

ஒரு கேவலின் எத்தனிப்பில்
யார் முதலில் அழுதால் என்ன

சட்டென்று
கீழிறக்கியது அவள் முதுகு நோக்கி
தன் முதல் துளியை

****

வார்ப்பின் ருசி

*
முதல் பசியைத் தூண்டும் சொல்லில்
வார்ப்பின் ருசியை 

சுடச்சுட பரிமாறும் அர்த்தக் கொதிப்பில்

குமிழ் விட்டு ஊதிப் 

பெருகுகிறது 
மௌனக் காற்று

****

துயர் பயணத்தில்..

*
பழகிப்போன பாதையின் 

துயர் பயணத்தில்
இசை மட்டுமே துணையாகிறது

***

உன் அகாலங்களின் வெளிச்சத்தில்..

*
உன்னோடு பேசிய ஒவ்வொரு இரவும்
விளக்கொளியின் கீழ் பரவும் நிழல் பூசிக் கிடந்தது

உனக்கென எழுதிய அனைத்து வரிகளிலும்
இரவு மழையின் ஈரம் துளிர்த்திருந்தது

சொற்கள் பூத்த சிலிர்ப்பில் உனக்கான புன்னகையின்
இசையை அர்த்த இழையென கேட்க முடிந்தது

நான் ஒதுங்கும் கூரையாக மாறியது
உன்னை எழுதும் கடிதப் பத்தி அனைத்தும்

உன் அகாலங்களின் வெளிச்சத்தில்
யாருமற்ற நெடுஞ்சாலை இரவின் தனித்த இருப்பில்
சிறு தூறல் ஆனோம் இருவரும்

என்னோடு என்றென்றும் பயணிப்பாய்
என் இனிய நண்பனே

****

( 2013 -ல் ஒரு நவம்பர மாதத் தனிமை இரவில் நண்பன் எம். ரிஷான் ஷெரிப்புடன் பகிர்ந்து கொண்ட மழைப்பொழுதின் ஈரம் )

ரகசியமற்ற கண்கள்..

*
கை விரித்து அழைக்கும் சிற்பத்தின்
புன்னகை முனை நொறுங்கி
இருந்தாலும்

ரகசியமற்ற அதன் கண்கள்
வெளிச்சமில்லா மங்கிய இருளில்
தீர்க்கமாய் பார்க்கிறது


தனக்கென
ஒரு நேர்க்கோட்டை

****

ஆளுக்கொரு தேநீர் கோப்பை

*
முடிவுகள் எளிதாக எடுக்கப்படுவதும்
கை குலுக்கல் சுலபமாக முடிந்து போவதும்

ஆளுக்கொரு தேநீர் கோப்பை
பரிமாறப்படுவதற்கு முன்

இளஞ்சூடு வார்த்தைகள் நடுங்க
காத்திருக்கத்தான் வேண்டும் என்பதாக

இந்த அமைதி

***

வேறு ஒரு மழைப்பொழுது

*
பிழையோடு வாழ்தலின் காயம்
தனிமைச் சுவர் ஊறி வளரும் கரையான்
உதிரும் செம்மண் ஈரத்தின்
மழைப் பொழுது
பற்றிக் கொண்டு உறிஞ்சுகிறது
ரகசியத்தை

****

பள்ளத்தாக்கு மடியெங்கும்

*
மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது
இது ஒரு மலையுச்சி

அதனால் என்ன
எட்டிப்பார்க்கும் கணத்தில்
கண்ணில் படுகிறது

பள்ளத்தாக்கு மடியெங்கும்
பசுமை

****

விரல் நுனி ரேகை உரசும் வரி

*
அழுது வீங்கிய கண்ணில்
சூல் கொள்கிறது பறவை

உயிர் திறக்கும் முட்டையிலிருந்து
சிறகு உரிக்க
விரல் நுனி ரேகை உரசும் வரியில்
பிசுபிசுக்கிறது
மேலும் ஒரு வரி

****

திரும்பி வரும்போது..

*
சொல் அறுந்து விழும் 

பாதையில் காத்திருக்காதே

திரும்பி வரும்போது பொறுக்கிக்கொள்வோம் 

அது 
மேலும் கொஞ்சம் வளர்ந்திருக்கும் 
பழைய நிழல் தாங்கி

**** 

இரவை திறந்து வை..

*
இத்தனை அமைதி கூடாது 

விடியல் தான் வேண்டும் 
என்பதில்லை 

கொஞ்சமாக இரவை 
திறந்து வை 
சொற்பக் காற்றாவது வரட்டுமே

***

ஏற்கனவே செத்துப்போன ஒரு பழைய காயம்..

*
என்னை ஒருத்தி காயப்படுத்தினா.
அந்தக் காயத்தை என்ன பண்ணுறதுன்னு புரியாம உட்கார்ந்திக்கிட்டு இருந்தேன்.


அப்போ அந்தக் காயம் என்கிட்ட வந்து இரண்டு சிறகுகள் கேட்டுச்சு.

கொஞ்சம் யோசிச்சேன்.

ஏற்கனவே செத்துப்போன ஒரு பழைய காயத்தோட சிறகுகளை எடுத்து இந்த புது காயத்துக்கு கொடுத்தேன். 


அது என்னை விட்டுப் பறந்து போயிடும்ன்னு நினைச்சேன்.

ஆனா -

அது அந்தப் பழைய சிறகுகளைப் பொருத்திக்கிட்டு என் தனிமை வெளி மீதே பறக்கத் தொடங்கிருச்சு. அதனோட நிழல் இந்த வெளியெங்கும் அலைந்தபடியே இருந்துச்சு.

இப்போ நல்லா இருட்டின பிறகும் அந்த நிழல் என் மீது பட்டுக்கிட்டே இருக்கு.

****

எங்காவது..

*
இப்படியாகத்தான் தொடங்குகிறது 

எந்த பசியும்

எங்காவது 

கையேந்தி நிற்கும் பொருட்டு

***

தனிமையின் வெளிச்சம்

*
மௌனத்தின் 

மீது 
ஊரும் எறும்பின் நிறம் 
தனிமையின் வெளிச்சத்தை 
மயங்கச் செய்கிறது

***

மௌன வெயில்

*
ஆயுள் வேரின் நுனியில் குவிகிறது 

வாழ்வெனும் அபத்தம்

மௌன வெயில் வந்து குடிக்கும் வரை 

வரம்

அத்தனிமை 

***

சிறகசையும் இசை..

*
மூதாதையரின் எலும்பைப் பற்றுகிறேன்
அதிலிருந்த

இசையொன்று 
சிறகசைத்து பறக்கிறது

***

அசயும் செதில்கள்..

*
ஆழ்ந்துவிடுதலின் அவசரத்தில் 

சுவாசிக்க அசையும் 
செதில்களைக் கொண்டிருக்கிறது 
நிதானம்

***

வெப்பக்காற்று வீசும் நிழல்..

*
ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் 

இளைப்பாற 
வெப்பக்காற்று வீசும் நிழலோடு 
இருக்கும் அர்த்தங்கள் 

***

இசையென..

*
இசையென மீட்ட முனைந்த நொடி
பட்டென்று அறுகிறாய்
நீயாகி

***

திசையற்ற சொல்

*
ஒரு தயக்கம் 

தன்னிலிருந்து இழை பிரிந்து 
நுனி படர
திசையற்ற சொல்லில் ஆடுகிறது


*** 

நினைக்கும்போது

*
விரையும் உரையாடலை 

பின்தொடர்ந்து
முற்றும் போட நினைக்கும்போது 
திணறச் செய்கிறது
முற்றுப்புள்ளி 

***

குதிரைகள்

*
ஒரு மௌனத்துக்குள் பூட்டப்பட்ட 

கோபம் நிதானம் 
இரட்டைக் குதிரைகள் 

இரண்டிற்கும் 
தாளம் பிசகா ஒரே குளம்பொலி 

****


 

பாதங்களுக்கு கீழ்..

*
கணக் கச்சிதமாக உதித்திருக்கும் சொல்லை 

ஏறிட்டு பார்க்கும் நொடியிழையில் 
பாதங்களுக்கு கீழ் உறுத்தத் 
தொடங்கிவிடுகிற
அதன் அர்த்தங்கள்

**** 

அர்த்தப் பறவையின் நிழல்

*
ஆழ்ந்த பொருள் தேடுவதாக 

பாவிக்கும் 
அர்த்தப் பறவையின் 
நிழல் 

காயப்பட்ட சிறகுகளோடு 
ஒடுங்கி படுத்துக்கிடக்கிறது 
சொல்

***

சிறு பறவையின் இறகு

*
தனிமைப் பெருங்குரல் மீதிறங்கும் 

சிறு பறவையின் இறகு 
உன் வாஞ்சை

***

வந்து போவோரின் இறுதி இசை

*
மனநோய் வளாகத்தின் நுழைவாயிலென 

திறந்து கிடக்கிறது 
இந்நகரம்

வந்து போவோரின்  
இறுதி இசை  

எழுதுகிறது காற்றை  

****

மௌனத்தின் காடு..

*
உள்ளங்கையில் முகம் பொத்தி 

அழும் சத்தத்தில் 
காடு வளர்கிறது

அடைகாக்கும் 

மௌனம் நடுங்குகிறது

****

கரையோர மௌனத்தின் வெயில்

*
நதியலை மீது மிதக்கும் 

இலைச் சருகின் கன்னத்தில் வெயில்

கரையோர கூழாங்கல் மௌனத்தில் 

நீளும் மர நிழல்

****

ஓர் அபத்த கணத்தில்..

*
யாரோடும் யாரும் இல்லாமல் போகும் 

ஓர் அபத்த கணத்தில் 
மைக்ரோ புதிரென இருந்துவிடக்கூடும் 
யாரோ பற்றிய 
ஏதோ ஒன்றாவது

****

மௌனக் கோப்பையில்..

*
அழையா விருந்தாளியின் 

மௌனக் கோப்பையில் 
நிரம்புகிறது 
கூட்டத்தின் தனிமை

****

நடுவே..

*
ஒரு மௌனத்துக்கும் 

இன்னொரு மௌனத்துக்கும்
நடுவே 
வளர்வதாக இருக்கிறது 
சொல்லின் சிறகு 

**** 

இறங்கும் வளையங்களின் கரை..

*
பைத்திய கணத்தின் மையத்தில் விழுந்த கல்

குழிந்து மனத்துக்குள் 
இறங்கும்போதே 
வளையங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது 
கரை என்று நம்பிவிடும் 
ஒரு சொல் நோக்கி

**** 

நினைவு காக்கைகளின் அணில்..

*
பசித்த கனவுகளின் மிச்சத்தைக் கொத்துகின்றன 

நினைவு காக்கைகள்
மருள மருள 

வேடிக்கைப் பார்க்கிறது
மன அணில்

***

முனை பிரித்து..

*
நீங்களோ நானோ அல்லாத விளையாட்டின்
விரும்பாத அங்கமொன்றின் மரண விளிம்பு என
மடித்துத் தரப்படுகிற சத்தியத்தின் முனை
பிரித்து நீட்டுகிறது
கடந்து வந்துவிட்டதாக நம்பும்
ஒரு காலத்தை

****

துரு வாடை வாசல்

*
நீள அகலங்கள் கடந்து

இறங்கும்
பாதாளத்தின் முடிவில் 
துரு வாடை அடர்ந்த இதயத்தின் வாசல் 
இறுகிக் கிடக்கிறது

**** 

பெயரற்ற புன்னகை..

*
பலங்கொண்டு தள்ளிவிட நினைக்கும் 

மனத்தின் சரிவில் 
பெயரற்ற புன்னகை பூக்கின்றது 
ரகசிய மலரென

***

பிறழ்ந்த ரேகை..

*
முத்தச் சில்லு பட்டு தெறிக்கும்
இதழ் ரேகையில்
தடம் பிறழ்ந்து சுழலும்
மௌன கிரகம்

*****

நட்சத்திரங்களும்..

*
இரவை
பாடையில் வைத்து
சூரியன் தூக்கியபோது
பின்னாலேயே
நட்சத்திரங்களும் போய்விட்டன

****

வியாழன், ஜூலை 31, 2014

கூடு முடையும் சம்பவங்கள்

*
வருந்திச் சொல்வதற்கு தவிப்பின் மனம் 
கிளை வளர அனுமதித்து 
கூடு முடையும் சம்பவங்களுக்கு 
மத்தியில் 
இட்டு வைக்கிறது 
அடைகாக்க 
புதிர் ஒன்றை 

****

தன்னைக் கொஞ்சமாக..

*
ஒரு 
சிறிய புன்னகையின் 
வழியே 
தன்னைக் கொஞ்சமாக 
விடுவித்துக் கொள்கிறது
நாள்பட்ட 
மௌனம் 

****

விரல் நெருட வளரத் தொடங்கும் சிறகுக்கான முதல் அடுக்கு..

*
ஒற்றை எழுத்தின் ஒலிக்குறிப்பை சுமந்தபடி நீளும்
உரையாடலை பொறுமையற்று உள்வாங்கிக்கொள்ளும்
இரவின் தொடர் அலைவரிசைக் கம்பியின் மீது
வந்தமர்கிறது
தூக்கம் தொலைந்த குருவி ஒன்று

கோதும் அதன் சிறகுகளின் அடுக்குக்குள்ளிருந்து
சின்னஞ்சிறு அலகுப் பிளவால்
பற்றியிழுக்கிறது
எண்ணற்ற உரையாடல்களின் முடிவற்ற வரிகளை

'க்வீச்.. க்குயிச்' என்ற சப்தக் குறிகளை
முத்தமாக்கிக் கொண்ட காதல் உதடுகளை மன்னித்து
மீள் நினைவென ஏற்றுக்கொள்கிறது
குருவிகளின் உலகம்

அரூப வெளியின் அடர்நீலத்தில் சுக்கிலம் நீந்திப் பிறக்கும்
மனிதக் குருவிகளின் விலா அருகே
விரல் நெருட வளரத் தொடங்கும் சிறகுக்கான முதல் அடுக்கில்
ரத்தம் தோய்ந்த மாம்ச வாசனை

ஒலி மற்றும் சப்தக் குறிப்புகளின்
உரையாடல் கட்டுமானத்தோடு எழும்பும் உலோக டவர்களின்
வெளிச்சக் கண்கொண்டு
இரண்டாம் உலகின் வாசற்கதவு ஓர் ஒளியாண்டுத் தொலைவில்
திறந்து கிடப்பதை நோக்கி
நீந்துகிறது
வால்முனை சிதைந்த விந்துத்துளி

'ம்' எழுத்தின் மீது மிதக்கும் ஒற்றைப் புள்ளியாகி

*****

தவளையின் குரலாகிப் பெருகும் இரவின் நிறம்..

*
இரவை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த
தவளையொன்றை கண்டேன்

அசைந்துத் துடிக்கிற அதன் தாடை வேகங்கண்டு
அதிரத் தொடங்கியது மழை பெய்து தேங்கிய
நிலத்தின் நீரில் மிதக்கும் உதிர்ந்த வேப்பம் பூக்கள்

வசப்பட்டுவிட்ட இருளின் அர்த்தங்கள் மின்னும்
அதன் கண்களில் பரவுகிற வெளிர் மஞ்சள் நிற பிம்பமானேன்
அரைக் கணம்

எனது கைவிரல்களும் இதயத்துடிப்பும் சொற்களாய் உருமாற்றமாகி
தவளையின் குரலாகப் பெருகிய நொடியில்
கனத்து விழுந்த ஒற்றை மழைத்துளி
உச்சந்தலையில் மோதிச் சிதறியது

சிதறலின் மைக்ரோ நீர்ப்புள்ளி கிரீட நுனிகள்
பிரதிபலித்தன எண்ணற்ற தவளைக் கண்களை

ஏந்திய கை நிறைய காளானாக முளைத்துவிட்ட
சொற் குடைகளின் வனத்தை தவளையிடம் காண்பித்தேன்

அது தன் பசையுள்ள நாவை நொடியிழையில் நீட்டி
காளான்களை அபகரித்துக் கொண்டபடி
தொடர்ந்து
மொழிபெயர்க்கிறது இந்த இரவை

****

பாதையற்ற புறவாசலின் சுற்றுச்சுவர்

*
தொலைந்து போவதற்குரிய பாதையொன்று
மனத்தின் புறவாசலில் கிளை பிரிவதாக நியூரான் பின்னுகிற செய்தி
மீள் சூட்சும எழுத்தின் கோடுகளில்
அதன் நெருக்கக் கணங்களை ஸ்கேனர் சிகப்பொளியின்
இடவல ஓட்டமாக்கி அரூபக் குறிப்பெழுதுகிறது

கவனத்தில் கொள்ளத்தக்க காரண அடுக்குகளின்
புழுதிச் சிதறலில்
முளைவிடுவதாக இல்லை திரும்புதலுக்கான வரைப்படம்

யந்திர கூட்டிணைவின் இயக்க முரண்களை முடுக்கும்
பஸ்ஸர் ஒலி
துரத்துகிறது அவ்விடத்தின் வெளியை வெற்றாக்கிட

பாதையற்ற புறவாசலின்
சுற்றுச்சுவரில்
வேர்ச் சுற்றி வளர்கின்றன உலோக வரைப்படங்கள்

****


நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

சொல் மீது பரவும் சத்தியத்தின் ரத்தக் கசிவு

*
இயந்திரத்தைப் புரிந்து கொள்வதோடு
தொடர் இயக்க முறைமைகளின் ஏற்ற இறக்கமாகிறது
மொழி நெறி அடையாளமென குறுகும் அர்த்தங்களின் தோற்றம்
கட்டுமான அடுக்கங்களின் நெடிதுயரும் படி வழியே
அழைத்துப் போகும் ரகசிய புன்னகை

சொல் மீது பரவும் சத்தியத்தின் ரத்தக் கசிவை அடைத்துவிட
பயன்படுவதாக நீட்டப்படும் துருவேறிய ஆணி
கோளாறுகளை சரி செய்துவிடும் உத்தி கொண்டிருப்பது
செய் நேர்த்தியின் மீள் மௌனம்
உள்வயக் கொடூரங்களை முடுக்குதல்களின் குறிப்புகள் அடங்கிய
பக்கங்கள் வீசுகிற நீச நெடி

கையகப்படுத்திட நிந்திக்கும் நவீனப் போர்க்கள கேடயங்கள் தருவித்து
தற்காத்துக்கொள்ள கற்றுத் தரும் வாழ்வின் பொத்தல்களில்
பொருந்தும்படி இயங்கும் இயந்திர சொற்கள்
மேலும் இரைச்சலாய் வளர்கின்றன
நகரத்தைத் தின்றபடி

*****

நன்றி : ' யாவ ரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

குளிர்ந்த உடலைக் கடந்து வெப்பத் தீவை அடைதல்

*
தாவரப் பச்சமை சுழிக்கிறது காதல் முத்தமொன்றின் கசந்த உதடுகளின் ஊடே
மலர்களைக் கனவு காண்பதாக புரளும் வேர்களின் ஈரக் கசிவை
இமை தாழ்ந்து மீளும்போது காண முடிந்தது

நறுமணம் நுகர்தல் பிழை என்பாய்

புலன்களின் காதுகளை அடைத்தபடி கேட்கப் பழகிய முனகல் இசை
இரவின் மீது படர்ந்தபடி பசலை வளர்க்கிறது

குளிர்ந்த உடலைக் கடந்துவிட அணைத்துக்கொள்
வெப்பத் தீவை அடையும்வரை படகைச் செலுத்து

படபடக்கும் பாய்மரத்தின் துடிப்பில் கனிகள் காய்க்கின்றன

புசிக்கத் தீண்டும் நாவில் பதியனிட்ட சொற்கள் சுரக்கும் பாலில்
சுவை கூட்டுகிறது முத்தத் திரவத்தின் ஊற்றைப் பிளந்து
கூரையை வெறித்து ஒரு மயக்கம்

அழுந்த பிதுங்கி கிளைப் பரத்தும் விரல்களில் வரைகிறாய்
வேறோர் உலகின் கதவை

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

கருவளையத்தை விட்டு கீழிறங்கித் திறந்து கொள்ளும் இரவு

*
சென்று அடைகிற காயங்களை சுவாசிக்கும் முன்
காத்திருக்கும்படி வந்து சேர்ந்த உத்தரவு அழைப்பை கையில் வைத்திருக்கிறாள்

மனத்தில் இருத்துவதற்குரிய ரகசியங்கள் யாவும் தீர்ந்துவிட்டதை
கடந்துவிட்ட பகல் சாட்சியம் சொல்வதாக ஒப்புக் கொண்டுவிட்டது

அதன் வெப்பச் சூடு கண்களின் கருவளையத்தில் சற்றேனும்
ஓய்ந்து தூங்கட்டும்
என விட்டு வைத்திருக்கிறாள்

சாபத்தின் சிறகுகளில் ஒட்டடை படிந்திருக்கிறது
முக்காலத்தை வலைப்பின்னும் சொற்களின் எட்டுக்கால்களும்
வலுவேறிவிட்டதாக நம்பத் தொடங்கிவிட்டாள்

அறையின் கிழக்கு மூலையில் இரவு திறந்து கொள்கிறது

படியேறி வரும் காலடிச் சத்தங்கள்
இழந்துவிடக்கூடாத நிதானத்தின் கடைசிப் பக்கத்தை
ஒரே ஒரு முறை நினைவுப்படுத்துகிறது

கருவளையத்தை விட்டு கீழிறங்கும் சொற்கள்
சாபத்தின் சர்ப்பப் பறவை பிளந்த நாவிலிருந்து
கொடிய நஞ்சின் இரண்டொரு சொட்டுகளை இரவல் பெற்று
அவள் கையில் திணிக்கிறது

அது ஒரு ஞாபகமூட்டல்
அது ஒரு பரிந்துரை
அது ஒரு போர்த் தந்திரமும் கூட

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகடு

*
வன்மம் கொப்புளித்து வெடிக்கும் குருதி சூட்டில்
மனத்தின் மூர்க்கம் பூசிக்கொள்ளும் முகத்து தசைகள்
கோணுகின்றன

கைப்பற்றி முறுக்கிட தீரும் அவஸ்தையின் சொற்கள் கூட்டம்
வெளியேறுகிறது ஒற்றை அசௌகரியத்தை
முற்றிலும் நொறுக்கி

நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகட்டிலிருந்து
நழுவி வீழ்கிறது ஒப்பந்த வாக்குறுதிகள்
குற்றஞ்சாட்டி அடையாளங்காண பயணப்படும் பாதங்களை
கொடிச்சுற்றிக்கொள்ள பிரயத்தனமாகிறது
தனிமையொன்றின் அகாலம்

நீர்மைப் பொழுதுகளை மௌனக்கோப்பை தளும்ப
ஊற்றி பரிமாறுகிறேன் யாருமற்ற மேஜையின் விளிம்பில்

'சியர்ஸ்' சொல்லும் ரகசிய குரல் ஒன்று
இருள் மூடிய சூழல் பாதையின் அடர்த்தியிலிருந்து கசிகிறது
என்னை நோக்கி

எட்டிப் பிடிக்கும் ஆவலற்று வெறுமனே காயும் பகல் வெப்பம் குறித்து
கனவு காண்கிறேன்
காணுதலுக்கும் அடைதலுக்குமான கால வித்தியாசத்தில்
சுண்டிவிடப்படும் தருணங்களை
எனக்கென உயர்த்திய கோப்பைக்குள் ஊற்றுகிறேன்

அனுபவம் கிறங்கி உரைத்த வெயிலை மீண்டும்
பருகிட பரிந்துரைக்கிறீர்கள்

வன்மம் கொப்புளித்து வெடிக்கும் குருதி சூட்டை
அறை கூரைக்குள்
வரைந்து வைத்திருக்கிறேன்

நெஞ்சதிர இறைஞ்சிய மன்றாடலின் அசௌகரியத்தைப் பற்றி
விவாதிக்கும் மாலை நேரம்
அத்தனை வெதுவெதுப்பாய் இனங்கண்டு கொள்கிறது

மனத்தின் மூர்க்கத்தை
முகத்து தசைகளின் கோணல்களை
செத்துவிட்ட ஒரு ப்ரியத்தை

****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

உறைந்துவிட்ட பொய் நதி..

*
அனைத்தின் மீதான புகார்களையும்
சற்றே ஒத்தி வைக்கலாம்

ஓர் எளிய நம்பிக்கையை
அணுகுதல் குறித்து விவாதிக்கலாம்

எதிர் எதிர் துருவங்களில் வீசுகிற காற்றின்
அளவுகோலுக்கென
ஒரு பழுத்த இலையைப் பறிக்கலாம்

மாறுதலுக்கு உட்பட்ட நடத்தைகளை
குறிப்புகளாக
ஆவணப்படுத்திக் கொள்ளலாம்

சந்தேகத்தின் ஆணிவேரை கசடுகள் நீக்கி
முத்தமிடலாம்

உறைந்துவிட்ட பொய் நதியின் போக்கில்
வெறுங்கால்களுடன்
நடந்து போகலாம்

குழந்தையின் கண்களில் படரும் உலகின்
கண்ணித்திரையை
விரல் ரேகை உரசப் பிரித்து எடுக்கலாம்

இது -

மனநோய் விடுதியொன்றின் பட்டியல் என
நம்பத் தொடங்கும் நிமிடத்தின் முதல் நொடியில்
தடம் புரள்கிற எழுத்து

என்ற முனகலோடு

சற்றே
ஒத்தி வைக்கலாம் அனைத்தின் மீதான புகார்களையும்

*****

மிகுந்த அயர்வின் இறுதியில்..

*
ஒரு பிரார்த்தனையின் வழியாக
நிறைவேற்றிவிட முடியும் எனத் தோன்றவில்லை
உனது இருப்பை

நீ
இல்லாமல் போகும் நிமிடங்களைக் கடப்பது என்பது
அத்தனை எளிதல்ல என்பதாக
நிகழும் சம்பவங்களின்
ஆரம்பப் புள்ளிகளை
எனக்குப் பரிசளிக்கிறது அத்தருணம்

அது

ஒரு கணித சமன்பாடு போல
ஆய்வுக் கூடத்தின் பிரத்யேக ரசாயனத் தன்மையாக
விவாதக் கூட்டத்தொடரின் கடைசி வரிசை மேஜை என
மிகுந்த அயர்வின் எல்லையில் வழங்கப்படும்
ஒரு சொட்டுத் தேன்துளியை எண்ணி
காத்திருப்பதாகவும்

அத்தனைக் கடினம் எனத் தோன்றவில்லை உனது இருப்பு

மேலும்..

அதனைக் கடப்பதற்கான நிமிடங்களை
வழங்கிட முடியாது
ஒரு பிரார்த்தனையால்

*****

இரவற்ற பகல்களின் கண்ணி..

*
மொத்தமாய்
விட்டொழிக்க முடிவதில்லை
கண்ணியின் மீது
ஊன்றி
நிற்கப் பழகிய
கால்கள் இருக்கின்றன

****

தனிமைக்கு என்று ஓர் அறையை நிறுவுதல்..

*
அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

சொல்ல விரும்பாத பொய்யை சொல்லிவிட்ட பின்
செய்ய நேர்ந்த துரோகத்தை செய்துவிட்ட பின்
திருட்டுத்தனமாய் இருளில் முத்தமிட்ட பின்
காத்திருந்த தருணத்தின் நோக்கத்துக்குப் பின்

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

கை நீட்டி அடித்தாயிற்று
உறவை ஒரேயடியாக துண்டித்தாயிற்று
குற்ற உணர்வோடு அலைக்கழிந்தாயிற்று
யாவற்றையும் துறந்துவிடுவது என முடிவெடுத்தாயிற்று

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

நாம் அப்படி மருகினோம்
நம் தனிமைக்கு என்று ஓர் அறையை நிறுவினோம்
நமது மௌனத்தை புத்தகங்களுக்குள் ஒளித்து வைத்தோம்
இழப்பதற்கென்றே சேமித்து வைத்திருந்த
அமைதிக்கு வேலியிட்டோம்

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

எடுத்துவிட்டதாக நம்பும் தீர்மானங்களும்
பிரயோகிக்கப் போவதாக தயார் செய்த பிரகடனங்களும்
முடிவுகளுக்குப் பிறகு நிகழப்போகும் திருப்பங்களும்
உச்சரிப்பதற்கு எனத் தருவிக்கப்பட்ட உத்தரவுகளும்
ஒரு கட்டாயம் என்றான பிறகு

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

வாஞ்சைக் கொண்டு தடவும் கைவிரல்கள்
அணைப்பின் கதகதப்பை ஊர்ஜிதப்படுத்தும் முத்தம்
காமம் ததும்ப வழங்கப்படும் ஒரு கருணை
ஒற்றைப் பார்வையின் கீழ்மை நிழல் படிந்த காதல்

இருப்பின் பெரும்பரப்பு மீது இடையறாத சூதின் பணயத்தில் விழுந்துவிடாத தாயத்தின் சந்தர்ப்பங்கள்
இப்படியான பின்

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

*****

மரணித்தல் நிமித்தம் உடன் நீந்தும் மீன்குஞ்சுகளின் கடல்..

*
இன்னும் இருப்பதற்கான அவகாசம் உண்டோ
இழுத்துக் கட்டிய பாய்மர ஓசையோடு
பயணப் படகின் துளையாகிறேன்

வெயில் துளிகள் சிதற
உடலோடு முளைத்திருக்கும் துடுப்பு அசைகிறது
கரை தென்படவில்லை

இந்த மீன்குஞ்சுகள் உடன் நீந்துகின்றன
ஆனால்
எதையோ முணுமுணுத்தபடி கடல் குடிக்கின்றன

இருள மறுக்கும் வானின் நீலம் என் மீது கரைகிறது
மயிர்க்கால் துவாரங்களில் உட்புகும் உப்பு
வேர்ச் சுற்றி உயிர் திரிக்கிறது

நான் கடலாகிறேன்

கரையோடு துப்பிய எனது நுரைக் குமிழ்கள் உடையும் முன்
பதறி ஓடும் நண்டுகளின் வலைக்குள் நுழைந்து
அதன் கண்களில் படர்கிறேன் உப்பாக

காற்றின் ஓசை இழைய முணுமுணுக்கும் குரலை
இழுத்துக் கட்டுகிறது உயிரின் பாய்மரம்
வானின் நீலக் கண்களின் கோடு வரைகிறது
நண்டுக் கால்கள்

தளும்பிக் கடலாகும் என் உடல் மீது
மோதித் தழுவும் அவகாசத்தின் நிமித்தம் நீந்தி மரணத்தில்
திறந்து மூடும் வாயின் கடல் மொழி
உனது மீன்குஞ்சு

*****

கொடுக்க விரும்பும் முத்தம்..

*
கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
அதுவரை பேசிய விஷயங்கள் சற்றே
அமைதி இழக்கின்றன

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
திரும்பமுடியாத எல்லை நோக்கி நாம்
அனுப்பப்படுகிறோம்

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
எளிதில் தீர்ந்துவிடாத ஒரு வாதத்தை
நிர்ப்பந்திப்பதற்கான முதல் புள்ளி இடப்படுகிறது

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
புரியாத பாதையின் மத்தியில் சட்டென்று
இறக்கிவிடப்பட்ட ஒரு நாய்க்குட்டியைப் போல்
மனம் திகைத்துவிடுகிறது

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
கெஞ்சுவதற்கான அனைத்துக் காரணங்களும்
தம்மை மூடிக்கொள்கின்றன

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
ஒற்றை இலையென படபடக்கும் மௌனம்
தன் நுனியைப் பழுக்கச் செய்கிறது

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
அத்தனை இறுக்கத்தை அது கொண்டிருக்கும்
என்பதை அதுவரை அறியாதவராகவே
நாம் இருந்திருக்கிறோம்

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
முற்றிலும் ஒரு புதிய சுவர் எழும்புவதை
முதல்முறையாக நாம் தெரிந்துக்கொள்ளத்
தொடங்குகிறோம்

*****

ஒற்றைக் கொடுக்கில் முடிவாகி சிமிட்டும் கசையடியின் நடனம்..

*
வெளியேறிய சொற்களின் தந்திரத்தை
இரவின் குளிர்ந்த உடல் பொத்தலிடத் தொடங்குகிறது
பொத்தல்களின் ஊடே சிமிட்டும் கண்களைக் கேட்கிறேன்

நூற்றி ஏழு கசையடிகளைக் குறித்து பேரம் பேசுகிறாய்
நிர்வாணத்தை உடைக்கும் கருவி தருவிக்கப்படுகிறது

கண் சிமிட்டல் நிற்கவில்லை

வியக்கும்படி தரவிறக்கம் ஆன உத்தரவை கையில் வைத்திருக்கிறேன்
மேலும் வியப்பதைப் பற்றி சிந்திக்கவும் தொடங்குகிறேன்

உடல் முழுக்க வீங்கும் சொற்கள்
ஒவ்வொன்றாகப் பழுத்து சிவக்கும்போது
சூரிய ஒளிப் பிசிர்கள் ரோமக்கால்களின் நுனியில்
தீப்பிடித்து எரிகின்றன

அது ஒரு நடனம்

உருளும் சிந்தனை
பாதாளத்தில் பாசி அடர திரள்கிறது

அங்கே தொப்புள் பள்ளம்

எஞ்சிய கசையடியின் மிச்சம்
அறையின் ஆணியில் தொங்குகிறது
அதிகார ரேகைகள் மாறும்போது அது துருப்பிடிக்கவும் விரும்பும்

பழுத்து சிவந்தவை வெடித்து நொதும்பிய பிசுபிசுப்பின்
தந்திர முனைப் பிளந்து நெளிகையில்
சொடுக்கும் சொற்கள் பொத்தலிடுகின்றன கண் சிமிட்டல்களை

கையெழுத்தாகும் எண்ணிக்கை
வயிறு சிதறி
ஒற்றைக் கொடுக்கின் சிதைவிலிருந்து வெளியேறுகிறது
நூற்றி ஏழுக்கும் பிறகான கசையடியின் விஷம் தோய்ந்த ஓசைகளோடு

இரவின் குளிர்ந்த உடலிலிருந்து புறந்தள்ளிய தந்திரத்தின் நடனம்
தொப்புள் கொடியில் சுற்றிக்கொண்டு கிறங்கி
சமவெளியெங்கும் மலரும் நிர்வாணச் சிறகுகளில்
உடைந்த கருவியின் துருப்பிடித்த நிறம்

வெளியேறிய சொற்களின் தந்திரம் கொண்டு
நனவிலிச் செதிலின் தவம்

*****

திங்கள், ஜூன் 30, 2014

கொஞ்சம் பிரக்ஞை இழக்கும்படியான தனிமை

*
என்ன சொன்னாலும் 
ஏற்றுக்கொள்ளப்படும் சொல் 

என்ன செய்தாலும் 
அணைத்துக்கொள்ளும் கரம் 

எப்படியிருந்தாலும் 
பெருகிவிடும் காதல் 

கொஞ்சம் நடுங்கும்படியான 
கொஞ்சம் அச்சுறுத்தும்படியான 
கொஞ்சம் பிரக்ஞை இழக்கும்படியான 
தனிமையை 
கொஞ்சமும் எதிர்பாராத தருணத்தில் 
தந்துவிடும்போது 

பாதை முடிந்துவிடுகிறது 

****

நுனி ஈரத்தைப் பருகும் மனப்புழு

*
முற்றிலும் எரிந்து அடங்கிய பிறகு 
நீ கொண்டு வரும் மழையை 
ஏற்பதாக இல்லை எனது நிலம் 

வெந்து 
துவண்டு கிடக்கும் 
ஆணிவேரின் நுனி ஈரத்தைப் பருகும் 
இந்த மனப்புழுவைத் தான் 
என்ன செய்வதென்று தெரியவில்லை

****

நீலம் துலங்கும் சொல்

*
என்னை 
நீ வார்க்கிறாய் 

முளைத்த பிறையின் நுனியில் 
நீலம் துலங்கும் சொல்லை 
அனுப்புகிறாய் 

அலை வீசும் காற்றின் 
மேற்கு மௌனத்தோடு தொடுகிறாய் 

எழுதும் திசையை 
வாஞ்சையோடு பெற்றுக்கொள்கிறேன் 

தொடங்கி வை உன்னை 

****

நஞ்சு தீண்டிய கண்களின் சாந்தம்

*
அமைதியற்று நீளும் இரவு 
மலைப்பாதைகளின் வளைவை ஒத்திருக்கிறது 

தின்று செரிக்காத நினைவுகளின் நிழல் 
மலைப்பாம்பாகிறது   

நஞ்சு தீண்டிய கண்களின் சாந்தம் 
சொற்களை முறித்துக்கொண்டு இறுகுகிறது 
உடலாகி 

***

காற்றிலாடும் நூலாம்படை

*
மின்சார ரயில் உட்கூறை மூலையில்
காற்றில் ஆடும் நூலாம்படையில் 
தொங்கும்
சிலந்தியின் கண்களில் 

ஆடிக் கொண்டிருக்கிறோம் 

நானும் 
எனது புத்தகமும்

*** 

காற்றில் இறகென சுழன்றபடி..

*
ஜன்னலூடே 
வெயில்பட்டு தெறிக்கும் 
ஒளித் துணுக்கில் 

விரல் ரேகையின் விளிம்பு வளைவில் 
நகரத் தொடங்குகிறது 

காற்றில் இறகென
சுழன்றபடி 

உன்னை எண்ணித் தவிக்கும் 
ஒரு விம்மல் 

****

காற்றின் குரல்..

*
யாருமில்லை தானோ என்றே
தளும்பிய 
மொட்டைமாடி இரவில்

எங்கிருந்தோ குரல் கொடுக்கும் 
ஆட்டின் அழைப்பு 
அருகே வந்து உடலோடு உரசுகிறது 
காற்றைப் போல 


****

டி.என்.ஏ அடுக்கின் வளைந்த படிகள்

*
ஏழு வர்ணங்களில் டிஸைன் செய்து 
வரைந்த 
டி.என்.ஏ அடுக்கின் வளைந்த படிகளில் 
 
மெல்ல 
இறங்கிக் கொண்டிருக்கிறது 
ஓர் ஆதி மிருகம்  

****

அந்தவகையில்..

*
மனங்கொள்ளத்தக்கதாக
பேசச் சொல்லவில்லை

வெறுமனே 

இந்த கைகளை மட்டும் 
பற்றிக்கொள் 

****

ஆணியறையும் நிழல் தகிப்பு

*
அடுத்தடுத்ததாக வேணும் நேற்றைய 
நிழல் தகிப்பை 

இவ்வறையின் சுவர்களில் ஆணியறைந்து 
உரிப்பதாகிறது 

பின்வரும் 
மௌனப் பகல் 

***

ஒன்றுமில்லை

*
ஒரு கைகுலுக்கல் 
ஒரு கையசைப்புக்குப் பிறகு 
ஒன்றுமில்லை 

அது 
ஒரு கைகுலுக்கல் 
ஒரு கையசைப்பு மட்டுமே 

****

அலைவரிசையைத் திருகிக் கடத்தல்

*
ஒலிக்கூட்டு கருவியின் 
பிளாஸ்டிக் குமிழ் 
திருகத் திருக 

நமக்கான அலைவரிசையைக் கடந்துவிடும் 
லாகவத்தை கற்றுத் தருகிறது 
இவ்விரவு 

***

நெஞ்சக் கூட்டின் வளர் சிறகு

*
முன்னெப்போதோ தந்து சென்ற 
முத்த ஈரத்துளி 

உறைந்துவிட்ட நெஞ்சக் கூட்டில் 
சிறகு வளர்கிறது 

பொய்யல்ல இந்த 
வனம் 

***

என்றபோதும்

*
கைவசம் 
ஒரு சொல் மட்டுமே மிச்சமிருக்கிறது 

என்றபோதும் 

உன் அவமானத்தின் மீது 
அதை எழுதிவிடக்கூடாது 
என்பதாக 

ஆமென் 

****

தவிக்கும் விரல் நுனிகளில்..

*
இதிலென்ன இருக்கிறது என்றே 
வியப்புக்குள் இழுக்கிறோம் 
நம்மை 

ஆழ்துளை இருளுக்குள் இறங்குவதாக 
திணறலாகிற மூச்சு 

பற்றிக்கொள்ள தவிக்கும் விரல் நுனிகளில் 
மணல் மணலாய் பெருகுகிறது 
தனிமைக் கடல் 

****

உறைகின்ற சொற்களின் நாளை..

*
பின் 
மெதுவாக அனைத்துக் கொண்டாய் 

உறைகின்ற சொற்கள் மீது 
கிடத்தும்படி ஆயிற்று 
நாளைக்கான 
முத்தங்கள் 

***

மனக்குதிரையின் புறவாசல் லாயம்

*
நோய் குடுவைக்குள் மௌனத்தை 
இட்டு நிரப்பிடும் மனக்குதிரை 
புறவாசல் லாயத்தில் நின்றபடி 
குளம்புகள் அசைய 
வெற்றிடம் நோக்கி அலறுகிறது 

அசரீரி சிதறும் மருத்துவ குரல்கள் 
உச்சரிக்கும் பட்டியலில் 
பயணக் களைப்போடு தள்ளும் 
நுரை எச்சில் 

**** 

விஷம் குளிர்ந்து உலரும் சொல்லின் ருசி

*
ரயிலின் கடைசிப் பெட்டியை மூச்சிரைக்க 
ஓடிவந்து ஏறியதோடு 
துணையற்று பிளாட்பார்மில் நின்றுவிடுகிறது 
ஓர் இறுதிச் சொல் 

கைவிடப்பட்ட பலூனின் 
இலக்கற்ற நிச்சயமின்மையோடு 
திரியும் ஒரு சொல்லின் தனிமையை 
என்ன சொல்வதென்று தெரியவில்லை 

பகிர முடியாத 
ரகசியத்தின் தாழ்ப்பாளில் 
துருவேறுவதாக இருக்கிறது ஒரு சொல்லின் இறுக்கம் 

திறக்க மறுக்கும் உதடுகளுக்கு பின்னே 
நாக்கின் நுனியில் விஷம் குளிர்ந்து உலரும் 
சொல்லின் ருசியை 
எப்படி விழுங்குவது என்ற குழப்பத்திலிருக்கும் நொடியில் 
தொடர்ந்து கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது 

****

வெள்ளி, ஜூன் 27, 2014

வழித்துணை..

*
நீ
இல்லாத திசை எது
என்பதைக் கண்டுபிடித்து
அவ்விடம் நோக்கி பயணிக்கிறேன்

முந்தைய நூற்றாண்டின்
ஒரு புராதான இசை
வழித்துணையாகிறது

***

மூடிய இமை..

*
மெனெக்கெடுவதாக
மனக்குறையைக் கை கழுவுவதாக

காத்திருப்பதாக
முடிவைத் தீர்த்து வைப்பதாக
மௌனித்திருப்பதாக
புரியாக் குழப்பத்தைத் திறந்து விடுவதாக

எத்தனை விதங்களில் சொல்லியும்

மூடிய இமை பிரிவதாக இல்லை
ஒரு ப்ரியத்தின் மரணமாகி

****
 

கொஞ்சமாய்..

*
மீனின் சிறகுகள் அசைய
கொஞ்சமாய் நகர்கிறது
கடல்

***

காட்டிலும்..

*
விட்டு போய்விடுவதைக் காட்டிலும்
அதிகம் வலி தருவதாக இருக்கிறது
திரும்பி வருதல்

***

கண் கூசும் நிர்மூலங்கள்..

*
பறந்து சுழலும் துயரின் நிழல்
ஜன்னல் துளை வழியே இறங்கும்
வெயில் கற்றையைப் பற்றிக் கொள்கிறது

மேஜை விளிம்பில் வைக்கப்பட்ட
சில்வர் குடுவையின் வாய்ப் பகுதி
ஒற்றியெடுப்பதற்கான  உதடுகளுக்காக காத்திருப்பதாக
உச்சரிக்க அஞ்சும் சொற்கள் தயங்குகின்றன

துயரின் நிழல்
தன்னகத்தே கொண்டிருப்பதில்லை
எப்போதும் ஒரு வெளிச்சத்தை

கண் கூசும் சாயல்களோடு பூசிச் சிரிக்கும்
நிர்மூலங்களை இறக்கி வைக்கவே
ஏந்தும் கைத்தலம் நடுங்கும்போது

அறையும் இரவும் உறையத் தொடங்குகிறது
ஓசையற்று 

****

கவ்விக் கொள்ளும் மயில்களின் அலகு

*
அதிர்ந்து விலகும் கள்ளத்தனத்தை
புத்தகத்துக்குள் ஒளித்து வைத்துவிடுகிறேன்

மறந்துவிட்ட பக்க எண்கள்
கனவில் வந்து கண்களைத் தட்டுகின்றன

தவறான முகவரி என்று திருப்பி அனுப்பிய பிறகு
கவ்விக் கொள்ளும் தூக்கத்தில்
மயில்களின் அலகில் துறுத்திக் கொண்டு
குட்டிப் போடுகிறது கள்ளத்தனம் 

வைகறை பரவும் வாசல் படியில்
தூக்கக் கலக்கத்தோடு
முகவாயில் கை தாங்கி மடியில் புத்தகத்தோடு
உட்கார்ந்து கொண்டிருக்கிறது
அறுபத்து ஒன்பதாம் பக்க எண்

****

அது ஒரு வாதம் மட்டுமே என்கிறாய்..

*
நீ
என்ன சொல்லுகிறாய்
முத்தமிடு என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
பரிதவிக்கச் செய் என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
உனக்குள் என்னைப் புதை என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
கனவைத் தீ வைத்து கொளுத்து என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
மரணத்துக்கு இட்டுச் செல் என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
எந்தவொரு காரணமும் உன்வசம் இல்லை என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
அது ஒரு வாதம் மட்டுமே என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
இத்தனை அல்லல் ஓர் அவஸ்தை
என்னைப் புறக்கணி என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்

முத்தமிடு என்றுதானே
பரிதவிக்கச் செய் என்றுதானே
கனவைத் தீ வைத்துக் கொளுத்தி
உனக்குள் என்னைப் புதை என்றுதானே
மரணத்துக்கு இட்டுச் செல்லும் வழியில்
எந்தவொரு காரணமும் கைவசம் இல்லை என்றுதானே
இத்தனை அல்லலும் ஓர் அவஸ்தை
எனவே
உன்னைப் புறக்கணி என்றுதானே

இவை ஒரு வாதம் மட்டுமே
என்றான பிறகு
அனைத்தும் முளைக்கும் நிலம் ஒன்றை
உழத் தொடங்குகிறேன் சொற் கூர் கொண்டு

அன்பே
நீ உரமாகிச் சாகும்போது
உன்னை முத்தமிடுவேன்

****

குற்றச்சாட்டின் ருசி

*
இரக்கமின்றி விலகி நடக்க துரத்துகிறது
நேற்றைய இடக்கு
புசிக்கும் பொருட்டு நீட்டப்பட்ட குற்றச்சாட்டின் ருசி
வேறொரு விருந்தை நினைவுப் படுத்துகிறது

ரகசியங்கள் கவிந்த இருள் மீது
ஊளையிடும் சாத்தியங்களை
விளக்கேற்றி அடையாளங்காட்டுகிற இரவு

ஓசையற்று பூக்கும் கிணற்றடி கல்லருகே
உதிர்ந்து கிடக்கிறது
முத்தத்தின் ஒன்றிரண்டு இதழ்கள்

குற்றச்சாட்டின் ருசி
திடம் வாய்ந்த மரக்கிளையின் மத்தியில்
தூக்கிடப்பட்ட கடவுளாகித்
தொங்குகிறது அகாலத்திலும்

***


திரள்..

*
ஒற்றை அதட்டலில் அழுதுவிடுகிற
குழந்தையின் விழிகளில்
திரள்கிறது
இந்த வாழ்வின்
முதல் அபத்தம்

***

நீர் மனிதனின் ஆக்சிஜன் குமிழ் முட்டைகளும்..சாயம் மங்கிய வலையொன்றும்..

*
குளிர் காலத்தில் புகைப் படிந்துவிடும்
மீன் தொட்டிகளில்
மீன்கள் உறைகின்றன
பிளாஸ்டிக் செடிகளுக்கு நடுவே

அவை
நடுங்கும்படியான இரைத் துகள்கள்
உப்பி ஊறும் வரை

எப்போதும்
அசைந்தும் மிதந்தும் ஒரே திக்கை வெறிக்கும்
நீர் மனிதனின் ஆக்சிஜன் குமிழ் முட்டைகள்
தனித்த உயிர் போல மேலேறி
தண்ணீர்ப் பரப்பில் உடையும் வரை

பூட்டிய வீட்டின் சாவித் துவாரம்
மீண்டும் இருளாகி
மீண்டு
திறக்கப்படும் வரை

சாயம் மங்கிய வலையொன்று நீருக்குள்
துழாவப்படும் வரை

உறைகின்றன மீன்களின்
கண்கள்
நினைவுகள்
உப்பி ஊறி துழாவி
மற்றும் உடைந்து

****

வசவுகளின் நீண்ட படுதாக்கள்

*
புழுதித் தூற்றும் சொற்களை
துடைப்பான்களின் முனைகள் சேகரிக்கின்றன

வீதியெங்கும் வருவோர் போவோருக்கான
விநியோகம் தொடங்குகையில்

வசவுகளின் நீண்ட படுதாக்கள்
உதறி உதறிக் காயப்போடப்படுகிறது
கொடிகளில்

ஈரம் சொட்ட
முகங்கள்
தொங்க

***

மின்சாரம் இல்லாமல் நின்றுவிடுகிற விசிறி..

*
நித்தம் திறந்து கொள்ளும் ஜன்னலின் உட்புறம்
வெளிச்ச முகமாகி சுமக்கிறது சுவரின் துயரை

கண்ணாடியின் பாதரசப்  பூச்சுக்கள்
கேட்டுப் பழகிய கதைகளின் முடிவுகள் யாவும்
மின்சாரம் இல்லாமல் நின்றுவிடுகிற
விசிறியின் இறக்கைகளை
அசைக்கும் பொருட்டு
கொஞ்சம் ஊதிப் பார்ப்பதும்

பெருமூச்சு ஒலிகளை சேகரித்து வைத்திருக்கும்
ஸ்டிக்கர் பொட்டின் நிறமிழந்த
தருணத்தின் பசையின் மீது உட்கார்ந்து
கை உரசும் ஈ ஒன்றின் விழிக் கோளமும்

சொற்ப தெருவின் ஈரத்தை
மொழிபெயர்க்க முயன்று தோற்பதை
நகம் சுரண்டி கீறிப் போகும் ஏக்கம்

****

வியாழன், மே 29, 2014

உப்புச் சொரியும் ஓசையின் விளிம்பு..

*
ஒரு கசையடி போதும்
என்கிறேன்

மேலும் மேலும் சொற்கள் கோக்கிறாய்

விளாறுகளின் ரத்தக்கட்டில்
உரிந்து விழுகிறது உன் வீறிடல்

உப்புப் சொரியும் என் ஓசையின் விளிம்பில்
நின்றுக் கொண்டு எக்குகிறாய்
மேலும் ஒரு சொல் உருவ

*****

தயக்க மலரின் ஒற்றையடிப் பாதை..

*
ஸ்பரிச விலகலில் கரையும் அந்திக் கீற்றை
நதியலையில் இசை மீட்டுகிறேன்

கடந்துபோகும் காற்றில்
நழுவிடாமல் பிரயத்தனப்படும் உன் புன்னகையின்
மலைப்பாதை வெளியெங்கும் புயல் வீசுகிறதே

தயக்க மலரின் மகரந்தத் துகள்களைப் பற்றும் பொருட்டு
என் வண்ணத்துப்பூச்சியின் கால்களில் தூரிகைக் கட்டுகிறேன்

ஓவிய வனமாகப் போகும் ஒற்றையடிப் பாதையின்
மருங்கெங்கிலும் நீ காத்திரு

*****

என் மீது..

*
மழையை
உன்னோடு கொண்டு போகிறாய்


கடுங்கோடை
என் மீது
காய்ந்துக் கொண்டிருக்கிறது

****

இடம்பெயர மறுக்கும் சொற்கள்..

*
எவ்வளவு முயன்றும் 

இடம்பெயர 
மறுக்கும் சொற்களை 
இந்த 
மரத்தினடியிலேயே கிடத்தி வைக்கிறேன்
அதன் மீது 

ஒரு புத்தன் வந்து உட்காரட்டும்

****

தாழ்ப்பாள்களுக்கு பின்னிருக்கும் கதவுகள்..

*
வலிய வந்து நிற்கிறேன்
எனக்குத் தெரியும் உன் கதவுகளுக்கு
தாழ்ப்பாள் கிடையாது  


ஆனாலும் 

சார்த்தியே வைத்திருக்கிறாய்

****

ஏற்கனவே..

*
மனக் குகையிலிருந்து வெளியேறி 

நிலத்தை உற்று நோக்கினால்
 

ஏற்கனவே கிளம்பிவிட்ட 

மிருகத்தின் 
கால்த் தடம்

****

சுழியிட்ட நம்பர் கரைந்து அழிகிறது..

*
மழைப் பெய்து கொண்டிருக்கிறது
மழைக் கவிதை ஒன்று எழுத வேண்டும்

தாய்ப் பூனையின்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
தூளியாடுகிறது குட்டிப் பூனை

பழைய சீமை ஓடு வேய்ந்த கூரையின்
முதுகுப் பாதையில் உருள்கின்றது
நீர் நூல்

பூனையின் பாதங்களுக்குள்
பதுங்கிக் கிடக்கும் கூர்நகங்கள்
உரிக்கின்றது இவ்விரவை

வெளிச்சம் சிந்தும் மின்விளக்குக் கம்பத்தில்
சுழியிட்ட நம்பர் கரைந்து அழிகிறது

தாய்ப் பூனையும் குட்டியும்
அதை எக்கி எக்கி சுரண்டுகின்றன

ஒரு சிறிய அதட்டலில்
நான்கு ஜோடிக் கண்களும் என் புறம் திரும்புகின்றது

நான் அவற்றை இந்தக் கவிதைக்குள்ளிருந்து
விரட்டுகிறேன்
அவை அடம்பிடிக்கின்றன

சூ..!
மழைப் பெய்து கொண்டிருக்கிறது
ஓடுங்கள் இங்கிருந்து

நானொரு மழைக் கவிதை எழுத வேண்டும்

*****

யாதொரு..

*
என் சிறகுகள் குறித்து
யாதொரு சந்தேகமும்
எனக்கில்லை

உன்
வானம் தான்
அச்சுறுத்துகிறது


****