திங்கள், அக்டோபர் 17, 2011

யாராவது..

*
ஒளிந்து கொள்வதற்கான இடமொன்றை
சிபாரிசு செய்யுங்கள்

வெளிச்சம் இல்லாத
கருணை இல்லாத
நம்பிக்கையுடன் நீட்டப்படுவதாக சொல்லப்படும்
ஒரு நேசக்கரம் இல்லாத
வெறுமை மட்டுமே பரந்து விரிந்த
சாவித் துவாரம் இல்லாத
ஒரு அறையை

யாராவது சிபாரிசு செய்யுங்கள்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

ஆயுதத்தின் தத்துவச் சிக்கல்

*
அவர்களுக்கெதிரான
ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற
கால் வலிக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது

என் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது
எனது முகவரி ஒப்பிடப்பட்டது
என்னை நான் தான் என்று ஒரு முடிவுக்கு வந்தவர்கள்
அனுமதிக்கும் முன் பரிசோதனையிட்டார்கள்
ஆயுதம் ஏதும் வைத்திருக்கிறேனா என்று

எனது ஆயுதத்தின் அளவோ
அதன் நுட்பமான தத்துவச் சிக்கலோ அறிந்திராத
அவர்களின் விளையாட்டை முடித்து வைப்பதின் மூலமாக
தொடங்கி வைத்தேன் அவர்களுக்கெதிரான
எனது தீர்மானத்தை

அது மிக சுலபம்
ஒரு பொத்தானை அழுத்த வேண்டும்
அவ்வளவு தான்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

மரணத்தின் தனிமை நோக்கி வீழும் உடல்

*
மதுவை விட போதையூட்டக் கூடியதாக இருக்கிறது வன்மம்
காலியாகாத அதன் கோப்பை
அந்தரங்க மேஜையில் தளும்புகிறது எப்போதும்

ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு
கழற்றியெறியப்படும் கையுறையை ஒத்திருக்கிறது
நீ விரித்து வைத்த சந்தர்ப்பம்

கால் நழுவி உச்சியிலிருந்து சரிய நேரும் கணத்தை
பதற்றமின்றி புகைப்படமெடுக்கிறது உன் புன்னகை

மரணத்தின் தனிமை நோக்கி வீழும் உடல்
மனதின் ரகசிய அறைகளிலிருந்து வெளியேறும்
அத்தனை அபத்தங்களையும் தரிசித்து மீள்கிறது 
யாருமற்ற அறையின்
வெளிச்சம் மிகுந்த ஒரு மூலையில்

வீணாய் எரிந்தபடி ஒரு பல்புக்குள் தேங்கித் தொங்கும்
மின்சாரத்தின் நுண்ணிய ஆரஞ்சு நரம்புகள்
என் கடைசி நிழலின் மீது படர்கிறது
வலியின் ஒவ்வொரு தசை அவஸ்தையையும் நக்கியபடி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

முடிவின் சிறகுகள்


நானொரு முடிவை உங்கள் முன் வாசித்துக் காட்டும் முன்
எனது ஷூ லேஸை சரியாக
முடிச்சிட்டுக் கொள்ள விரும்புகிறேன்

இந்த முழுக்கைச் சட்டையின் மணிக்கட்டுப் பட்டன்களை
பரிசோதித்துத் திருப்தியடைகிறேன்
உதடுகளின் ஈரத்தன்மையை நாவால் நீவி உறுதிப்படுத்திக் கொள்கிறேன்

நானென் முடிவை
உங்கள் முன் வாசிக்கும்போது
உங்களிலிருந்து அன்னியப்பட்டுத் தோற்றமளிப்பதற்குரிய
அத்தனை நுணுக்கங்களையும் கையாள முடிவெடுக்கிறேன்

அவைகளை உங்களின் முன்பே நிகழ்த்திக் காட்டுவதன் மூலம்
வாசிக்கப்படாத முடிவின் முக்கியப் பகுதியை
ரகசியங்களேதுமற்று அரங்கேற்றுகிறேன்

உங்களின் அசௌகரிய கணத்தின் ஒவ்வோர் அசைவிலும்
என் முடிவு தனது அஸ்திரங்களைத் திறம்பட எய்துகிறது

பின் வெற்றிக் களிப்போடு காற்றிலேறும்
முடிவின் சிறகுகள்
உங்கள் உதடுகளைக் கொத்திக் கவ்வியபடி வெளியேறுகிறது
இந்த முணுமுணுக்கும் மாளிகையை விட்டு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 31 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4933

வழித்துணை

*
தனித்தக் காகிதத்தின்
வெறுமை வெளி
எழுத்தின் கதவைத் திறந்து அழைக்கிறது

துயரமோ பரவசமோ
ஏதாவது ஒரு துணையை 
அதன் முற்றுப்புள்ளி வரைக் குறுகும் ஒரு வழியை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

எழுதி முடிக்கும் குறிப்புகளின் காலி உறைகள்

*
உங்கள் அருவருப்பின் மயக்கத்தை
மொழிபெயர்த்து அடுக்குகிறேன்
என் பழைய மேஜையில்

ஒரு பிரத்யேக அகராதியை
கூரியரில் அனுப்பி வைக்கிறீர்கள்
சொற்களின் கூச்சல் தாங்காமல்
பைத்தியமாகிச் சிதறிக் கிடக்கின்றன அர்த்தங்கள்

பின்னிணைப்பில் உங்களுக்கென்று
எழுதி முடிக்கும் குறிப்பில்
உங்கள் அகராதியையும் அடையாளப் பட்டியலில்
சிவப்பு மைக் கொண்டு சுழியிடுகிறேன்

ஓர் உரத்தக் குரலையும் பதிவேற்றம் செய்யுங்கள்

உங்களுக்கான காலி உறைக்குள் ஒட்டி வைத்திருக்கிறேன்
எனது பழைய மேஜையின் இழுப்பறை
அதற்குரிய ஒற்றைச் சாவி
இரண்டையும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

தனிமையில் காயும் வெயில்..

*
எதை வேண்டுகோள் என்று இருமாந்தமோ
அதன் எல்லையை நிர்மாணிக்கும் வேலியை
நட்டு வைத்திருக்கிறது ஒரு சமரசம்

எங்கே கழுத்து நரம்புப் புடைக்க கூக்குரலிட்டமோ
அந்த இடம் ஒரு தடை உத்தரவுக்கான
கதவைத் திறந்து வைக்கிறது

யாரிடம் யாசிக்கச் சொல்லி
சிபாரிசு செய்யப்பட்டமோ
அந்த அதிகாரத்தின் விலை ஏலத்துக்கு வருகிறது

மௌனச் சங்கிலியைக் கோர்த்துக் கொண்டு
வலம் வரும் நெடுஞ்சாலையில்
வெயில் மட்டுமே தனிமையில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
எதையும் பொருட்படுத்தாமல்
எந்தவொரு நிழலையும் அனுமதியாமல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

செய்திகளெனச் சேகரமாகும் அகாலத்தின் ரகசிய எண்..

*
சில்வண்டுக் கூச்சலில்
புதர் மண்டிச் சிக்கிக் கொள்கிறது இவ்விரவு

விளக்கொளியற்ற செம்மண் சாலை
துருப்பிடித்த மின்கம்பத்தின் சுண்ணாம்புத் தீற்றல்
விருப்பமின்றி பயணிக்க நேரும் நிலவின் ஒரு பக்கத் தேய்வு
செய்திகளெனச் சேகரமாகும் அகாலத்தின் ரகசிய எண்
மற்றும்
பரிமாறுவதற்கு உகந்ததல்ல என்றபடி மந்திரமாய்
உதடுகளுக்குள் முணுமுணுக்கப்படும் ஒரு கடவுச் சொல்

புதிர் மண்டிச் சிக்கி ஒரு பனித்துளிக்குள்
மெல்ல நுழைகிறது
இவ்விரவு

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

திருகும் தண்ணீர்த் துளிகள்..

*
மேஜையின் எதிர் விளிம்பில் முடிந்து விட்டது
வசீகரத்துக்கென விரித்திருந்த மஞ்சள் பூக்கள்

விரல் நகங் கொண்டு நீ திருகும்
தண்ணீர்த் துளிகளில் கரைந்துக் கொண்டிருக்கிறது
பேச முடியாமல் தவிக்கும் உனது வார்த்தைகள்

நெற்றிப் பரப்பில் மிச்சமிருக்கும்
எனது வெயிலை ஒற்றியெடுக்க
பயன்படும் நாப்கின்னில்
காத்திருந்த வரை நீ வரைந்து வைத்த
கோட்டுச் சித்திரமொன்று
கையேந்திச் சிரிக்கிறது
நம் மௌனத்தை

கூரையிலிருந்து வழியும்
ஆரஞ்சு நிற விளக்கொளியில்
உன் முகத்தில் படர்ந்துக் கொண்டிருக்கிறது
மஞ்சள் பூக்களின் இதழ்கள்

*******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 24 - 2011 ] 
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17110&Itemid=139


நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ்  [ அக்டோபர் - 24 - 2011 ] 
http://www.navinavirutcham.blogspot.com/2011/10/blog-post_24.html

மின்னும் பொன் சிறகுகள்..

*
தெரு விளக்கொளியில்
மொய்க்கும் ஈசலின்
சிறகுகளில் மின்னுகிறது பொன்னிறம்

பொன் உதிர
மண்ணில் ஊர்கிறது
உயிரின் நிழல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் மனிதன்

*
உதிர்ந்து விழுவது பற்றி
அறிந்து வைத்திருக்கிறது பழுத்த இலை

அது சருகாகி
தரையில் உருள்வதற்குரிய ஒலியை
சேமித்து வைத்திருக்கிறது காற்று

கான்க்ரீட் பிளாட்பார்முக்கு கீழே
புதியதாய் கிளைவிட்டிருக்கும்
மஞ்சள் வேர் நுனியை ஈரப்படுத்துகிறது
மணல் அப்பிக் குடிநீர் சுமந்து போகும்
கார்ப்பரேஷன் குழாயின் துரு

மரத்தின் உச்சியில் இதழ் விரிக்கிறது பச்சை
வானம் சிரிக்கிறது கடலாய்

குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் மனிதன்
பான்பராக் மெல்லுகிறான்
செக்கச் செவேலென்று
வெயில் மீது துப்ப

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

புதன், அக்டோபர் 12, 2011

நீட்டத் தயங்கும் நேசக் கரம்..

*
மதயானை உருவமாகி
காதுப் புடைத்து ஓரிடத்தில் நிற்கிறது
என் மௌனம்

நீயுன் நிலத்தின் சதுப்பில்
பயிரிட்டுப் பச்சையமாக்கிய துரோகங்கள்
காற்றில் நுனிப் பறக்கத்
தலையசைக்கும் திசையில் பரவுகிறது
தூவிச் சலித்த வார்த்தைகளிலிருந்து
புறப்படும் நஞ்சு விதை வாசம்

திரளும் கால்களின் தினவில்
அழுந்தும் பாதம் எடுக்கும் அடியில்
சர்வம் நாசம்

புன்னகைக் கொடிப் படர்த்தும் 
நரம்பின் பற்றுதலுக்கு நீட்டத் தயங்கும்
நேசக் கரத்தில் தெறித்து விழும்
வெப்பம் மிகுந்து
ஒரு
ரத்தத் துளி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4894

நெளியும் புன்னகையில் துளிர்க்கும் விஷ வன்மம்

*
அப்படியொரு சாயலை
இதற்குமுன் எழுதியதில்லை
நெளியும் புன்னகையில் துளிர்க்கிறது விஷ வன்மம்

எதிர்ப்பட்டு கடக்கும் நொடியை
நூறுத் துண்டுகளாய் நறுக்கத் தோன்றுகிறது
வாய்ப்பதில்லை ஒரு நிமிடம்

நொறுங்கும் அகாலத்தின் வெறுமையை
நின்று கவனிக்கும் பொறுமை இழக்கப் பழகுகிறேன்
எழுது விரல் ரேகைகளை நெருடி நீவி

உருகி வழியும் வெயில் நீரைப் பருக நீளும் நாக்கில்
கரைகிறது அவசரமாய் உனது பகல்

பொசுங்கும் நின வாடை மௌனமொன்று
நாசிக்குள் நுழைந்து வெளியேறுகிறது
தகிக்கும் கானலில் மிதந்தபடி

அப்படியொரு சாயலை எப்போதும் எழுதியதில்லை
வேறொன்றாய் அமிழ்கிறது
சதுப்பென குழையும் நினைவில் ஒவ்வொன்றாய்

*******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17017&Itemid=139

கோப்பையிலிருந்து நழுவும் காபியின் வெண்புகை..

*
எதையும் தள்ளி வை என்கிறது மழை
சிரித்தபடி விரிகிறது குடை

அதிகாலை சாம்பல் நிறத்தை
விடாமல் ஈரப்படுத்தும் காற்றில்
புலம்பெயர்கிறது கோப்பையிலிருந்து நழுவும்
காபியின் வெண்புகை

ஊடகத் தகவல் வழியே நீந்தி மிதக்கிறது
பள்ளிக்கூடங்களுக்கான விடுப்புச் சூழல்
பின்
கலர் ரிப்பன்களும் வர்ணக் கால்சட்டைகளும்
நனைய நனைய
கிழிந்த நோட்டுகளிலிருந்து புறப்படுகிறது
தெருவெங்கும் கப்பல்கள்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 12 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16951&Itemid=139

சனி, அக்டோபர் 08, 2011

அடுத்த சந்திப்பில்..

*
எதுவும் பேசுவதற்கு இல்லையென்றபடி
மௌனித்திருந்தான்

திசையறியா பறவையொன்றின் சிறகில்
தன்னைச் செருகிக் கொண்ட
ரகசியத்தை
துண்டுச் சீட்டில் குறிப்பாக எழுதித் தந்தான்

அடுத்த சந்திப்பில்
தானொரு வனத்தின் மரத்தில்
அகன்ற இலையில் பழுத்த நரம்பாக
மாறிவிடும் திட்டத்தை விளக்குவதாக
ஒரு
வாக்குறுதியையும்
பின்குறிப்பிட்டிருந்தான்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 10 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4881

மையில் கசியக் காத்திருக்கும் அனர்த்தங்களின் நிறம்..

*
விரலிடுக்கில் உருளும் பேனாவில்
பதறுகிறது வார்த்தை

துணை வர மறுக்கும் எழுத்துக்கள்
ஒவ்வொன்றாய் ஊறி உலர்கின்றன
வெட்டுப்பட்ட நாக்கில்

மையில் கசியக் காத்திருக்கும்
அனர்த்தங்களின் நிறம்
கொஞ்சங்கொஞ்சமாய் உறைகிறது
திரள்வதற்கென குவியும் முனையில்

அழுந்தும் முள்ளின்
தயக்கம்
ஒரு சிறிய நெளிக்கோட்டை
இரண்டுமுறை வெறுமைத் தாளில் பரீட்சித்து
மௌனமாகிறது அனைத்தையும் விழுங்கி

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 10 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4881

மீட்பதாக சொல்லிச் செல்லும் நிமிடம்

*
மீட்டுத் தருவதாக சொல்லி நின்ற
நிமிடம்
உன்னுடையதாக இல்லை

ஒரு
தலைக்குனிவின் மூலம்
வேர் விடுகிறது அவமானம்

பூர்த்தி செய்யப்பட்ட வார்த்தைகள்
அளிக்கும் நம்பிக்கைகளை
நொறுங்கச் செய்கிறது
நம்பத் தகுந்த ஒரு
புறக்கணிப்பு

பெருந் துயரத்திலிருந்து
மீட்பதாக சொல்லிச் செல்லும் நிமிடம்
தூவிச் செல்கிறது மேலும்
யாருடையதென்று உறுதி செய்யமுடியாத
வார்த்தைகளை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ அக்டோபர் - 3 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16866&Itemid=139

கல் மரம்


பறவைகளின் கூட்டை
முட்டைகளை
திருட்டுத் தனமாய்
உடைத்துக் குடிக்க ஊர்ந்த பாம்பை
கை கால் முளைத்த ஆதாமின் விலா எழும்பொன்று 
பறித்துத் தின்னப் பரிந்துரைத்த
ஆப்பிளை
தன்
நிழல் பரத்திக் கலைத்த நிலத்தை

அனைத்தின் சாட்சியாக
இருந்திருக்க நேர்ந்த நூற்றாண்டுகளின்
செதில்கள் கல்லாகி

மியூசியத்தின் கம்பி வலைக்குள்
காட்சியாக வெய்யிலில் காய்கிறது
செந்நிற மரம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 3 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4862

இரவின் கரையிலிருந்து அழைக்கப்படும் பெருமழை..


இருளை மெழுகி வைத்திருக்கும்
அகன்ற நெடுஞ்சாலைப் பரப்பை
கடக்க யத்தனிக்கிறது
சின்னஞ் சிறிய தவளைக் குஞ்சு

சிதறும் வெளிச்சத் திரவம் பட்டு
கண் கூசி திகைக்கிறது சில நொடி

அதன் ஸ்தம்பித்த கணத்தை
நசுக்கி விடாத டயர்களைத் தொற்றியபடி
சாலையில் கசிந்து உருளுகிறது விளக்கின் சிகப்பு

இரவின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு நகர்ந்து விட்ட தவளைக் குஞ்சு
மற்றுமொரு பெருமழையை அழைக்கிறது
பசுந்தளிரென விரிந்த இலையின் மீதமர்ந்து..
தன் இருபக்க தாடைகள் உப்ப..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 3 - 2011 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4862


நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ அக்டோபர் - 2 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/10/blog-post.html