வியாழன், செப்டம்பர் 20, 2012

அப்படிச் சொல்லும்படியாக..

*
உன் நீர்மைத் துளிர்க்கும் பார்வையொன்றின் அலை
தெறித்துக் கொண்டேயிருக்கிறது
எனது முகமெங்கும்

சொல்வதை சட்டென்று சொல் என்கிறாய்

அப்படிச் சொல்லும்படியாக
தெறித்துக் கொண்டிருக்கவில்லை
முந்தையக் கணத்தின் ஈரம்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

 http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

பேரன்பின் இருட் காடு

*
மௌனம் கலையாத
பெருந்தவக் கோட்பாட்டு மரத்தின் கீழ்
பேரன்பின்
இருட் காட்டுக்குள்
தனித்து உட்கார்ந்திருக்கப் பணித்தாய்

சொற்ப வெளிச்சம் சுமந்து
என்னைச் சுற்றிப்
பறந்துக் கொண்டேயிருக்கிறது

உனது
மின்மினிச் சொற்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550


மற்றுமொரு..

*
பால்கனிக்கு வெளியே விழுகிறது
வார்த்தைகள்

உச்சக் கோபத்தில் உடைந்துவிடுகின்றன
அர்த்தங்கள் மொத்தமும்

குறுகிய இடத்தில்
இழுத்துக் கட்டியிருக்கும் பால்கனிக் கொடியில்
காய்ந்துக் கொண்டிருக்கும் உள்ளாடைகள்

மற்றுமொரு பகலுக்காக
மற்றுமொரு நாளுக்காக
மற்றுமொரு இரவுக்காகக் காத்துக் கிடக்கிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550


உப்பு நதி..

*
கைகுலுக்கி இறுகப் பற்றிக் கொள்கிறாய்
வியர்வையெனப் பெருகும் நிமிடங்களை
இடது புறங்கை நரம்பில் துடைத்துக் கொண்டே இருக்கிறேன்

இந்த நடைபாதையில்
பெயர்ந்துக் கிடக்கும் சதுரக் கற்களில்
புதைந்தபடி
ஒரு மின்கம்பம் இருக்கிறது

அதன் உடைந்த கண்ணாடிக் கூட்டுக்குள்
பெயரற்ற பறவைக் கூடொன்றின்
மெலிந்து துருத்தும் கிளையில் ஒரு இலை
வெயிலைத் தடுத்து

அதன்
நிழல்
என் மீது அசையாமல் கிடக்கிறது

பற்றிக் கொண்டிருக்கும் கைகளுக்குள்
நெளிந்தபடி நழுவுகிறது
உப்பு நதி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550

ரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய அரிச்சுவடி

*
என்னை
அவனது கைவிளக்கு என்றான்
தீ நுனிப் போல் துடித்துக் கொண்டிருக்கிறேன்
என் திரியைப் பாதுகாக்கும்
வழியற்று

என்னை
அவளது இரவென்றாள்
ரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய
அரிச்சுவடியை அந்த அறையெங்கும் தேடுகிறேன்
அகப்படவில்லை

என்னை
அவர்களது பைத்தியக் கணமென்றார்கள்
தொடர்ந்து உளறிக் கொண்டே இருப்பதற்குரிய
தத்துவத்தின் கிழிந்தப் பக்கங்களை
இடையறாமல் தைத்துக் கொண்டிருக்கிறேன்

நைந்து கிடக்கும் காலத்தின் பெருவிரல் அழுக்கில்

என்னை
எனது மௌனமென்று நிரூபிக்கும்
வார்த்தை ஒன்றை எப்போதோ தொலைத்துவிட்டேன்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550


சம்பந்தமில்லாத ஓர் உரையாடல்..

*
அது கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

நன்றி மறக்கும் செயலை
மறக்காமல் நிறைவேற்றுவது

சினத்தின் நிறம் மங்கா சூட்சுமத்தை
ரகசியமாய் அடைத்து வைப்பது

வாதத்துக்கென அமைக்கப்பட்ட மேஜையின் மீது
சம்பந்தமில்லாத ஓர் உரையாடலை கிறுக்கிப் பழகுவது

நெடுநாளையச் சந்திப்புக்குப் பிறகு
பார்வைத் தாழ்த்தி பதில் சொல்வது

பால்யத்தின் ஞாபகங்களைக் கூசாமல்
பொய்ப் பூசி மெருகேற்றுவது

முதல் காதலின் கடைசிப் பொய்யை
ஆரம்பத்திலிருந்து நிஜமாக்க முயல்வது

நாட்குறிப்பின் நம்பகத் தன்மையை
தூசுத் தட்டி நிரூபிப்பது என்பது

கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 24 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19509&Itemid=139

கால்களற்ற காரணத்தின் தடம்..

*
சர்ப்பத்தின்
அடிவயிற்று வழுவழுப்பைப் போல்
நழுவி நெளியும் உனது பொய்

கால்களற்ற ஒரு காரணமாகி
விட்டுப் போகிறது
அதன் தடத்தை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

நேனோ நொடி

*
ஒரு நிமிடத்தின்
இறுதி நொடியிலிருந்து
அடுத்த நிமிடத்தின் முதல் நொடிக்குள்
நுழையும்போது

ஏன் இத்தனை பதற்றம்
ஏன் இத்தனை அயர்ச்சி
ஏன் இத்தனை மர்மம்
ஏன் இத்தனை சூட்சுமம்
ஏன் இத்தனை நம்பிக்கையின்மை
ஏன் இத்தனை மறுதலிப்பு
ஏன் இத்தனை மௌனம்
ஏன் இந்தத் தனிமை

நுழைதலுக்கும் வெளியேறுதலுக்கும்
நடுவே நிற்பதற்கென ஒரு வெளியைக்
கண்டுகொள்வதற்குள்

இழைப் பிரிந்து இழுத்துக் கொள்கிறது
அதனுள்
உள்
ஒரு நேனோ நொடி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

உடையும் அந்தி

*
இருப்பின் நிழல் நீளும்
இந்தப் படிக்கட்டில் காத்திருக்கப் பணிக்கிறாய்

தொடர்ந்து நீயனுப்பிக் கொண்டிருக்கும்
குறுஞ் செய்திகளின் மீது அந்தி உடைந்து

துண்டுத் துண்டாய்
வெயிலடித்துக் கொண்டிருக்கிறது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

பரிமாறலில் தவறி விழும் சொற்களின் வெளிச்சம்..

*
கைவிடப்பட்ட வெளியின் திசை
இலக்கின்றி விரியும் வெட்பத் தகிப்பை
இரவின் தனிமை நிழலோடுத் திருகிக் குவிக்கிறது

பரிமாறலில் தவறி விழுந்த சொற்களின் வெளிச்சம்
அணைந்து விடாத அர்த்தங்களை
மனதின் ரகசிய அறைகளில் பத்திரப்படுத்துகிறது

மூர்க்கமழிந்த ஓர் ஓசை காற்றைப் பற்றிக்கொண்டு
நினைவுத் துளை வழியே சுழன்று
காதருகே விழுகிறது முற்றிலும் வலுவிழந்து

நீயென்ற ஒற்றைப் பதத்தில்
சுழியிட்டு இழுக்கும் எனது அந்தகாரத்தை
மௌனத்துள் புதைத்தலோ மிதக்க விடுதலோ சுலபமில்லை

கைவிடப்பட்ட ஒரு வாதத்தை ஆவணப்படுத்த முயல்கிறேன்
உறுதி செய்யப்படாத ஏனைய வாக்கியங்கள்
தொடர்ந்து பிரார்த்திக்கின்றன
அபத்தமாய் விழுந்துவிடக்கூடாத ஒரு முற்றுப்புள்ளிக்காக

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

வியாழன், ஏப்ரல் 26, 2012

ஆளற்ற கப்பலின் பாலை வெளி..

*
உதிர்ந்து விடுதல் குறித்து
தலைக் குடைந்து நீண்ட இரவை
உள்ளங்கையில் கட்டைவிரல் கொண்டு தேய்த்தபடி
அழியும் ரேகை நூலில்
ஆளற்ற ஒரு கப்பல் நின்றது

காற்று எழுதிய நெளி அலைகள் நிரம்பிய நிழல் மணல் வெளி
ஒட்டகக் கால் தடங்கள் குழிந்து குழிந்து
மனக் கிடங்கு வரை இழுத்துப் போயிற்று

துருவேறிச் சிவந்த இரும்புச் சுவர்களோடு
நின்ற கப்பலின் உள்ளே வெற்றிடமிருக்கிறது

தவிர
நினைவை ரீங்கரிக்கும் ஓர் ஈயும்

அதன்
மென் கண்ணாடிச் சருகின் இறகை ஊடுருவும் வெயிலென
பரவுகிறேன் அப்பாலையெங்கும்
உதிரும் பொருட்டு

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 17 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19426&Itemid=139

இரண்டு நிழல்..

*
இலைச் சருகின்
உடைந்த நரம்பிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் கசிகிறது
கோடை வெயில்

நிலம் தாங்கி மிதக்கிறது
துண்டாகி விழுந்த இரண்டு நிழல்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5484

துளித் தூய்மை

*
ஒவ்வொரு குறையிலும்
பழுப்பேறிக் கிடக்கிறது துளித் தூய்மை

கண்டுப் பழக அயரும் பார்வையின் வெளிச்சம்
கண்களின் நிழலில் மிதப்பதால்

சுமைக் கூடி மேலும் மூழ்குகிறது
அச்சின்னஞ்சிறு தூய்மை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5484


பின்னும்..

*
ஈ மொய்க்கும் இரவின் நிறத்தை
காவல் காக்க பணிக்கிறது
வக்கற்ற அகாலத்தின் வெளிச்சம்

அழுந்தத் தழுவி முத்தமிட்ட
மரணத்தின் கன்னத்தில்
பின்னும்
வழிந்துக் கொண்டிருக்கிறது

எச்சில் கோடாய்
வாழ்வு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

சொற்களுக்குள்..

*
நுண்ணிய மில்லிமீட்டர் அளவில்
இறக்கை முளைக்கும்
மனக்கசப்பு

பறந்து பறந்து
சொற்களுக்குள் உட்கார்ந்து
சதா
ரீங்கரிக்கிறது
முடிவற்ற அர்த்தங்களை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

வெற்றிடச் சதுரம்

*
குயுக்தி
மதிநுட்பம்
சதி

மூன்று திசைகளோடு
திரும்பும் காலப் புரவியில்
பிடரி மயிர் துள்ள

வீழ்ந்துபட்ட
சிப்பாயின் வெற்றிடச் சதுரம்
காத்திருப்பது

மற்றுமொரு நகர்தலுக்கு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

இரு புள்ளிகளுக்கிடையே நீளும் சிகப்பு கோடுகள்..

*
ஒரு விபத்து நடப்பதற்கான
அத்தனைக் காரணங்களையும்
நான் கையில் வைத்திருக்கிறேன்

ஒரு சொல்லிலிருந்து இன்னொரு சொல்லுக்கு
பயணிக்க நேரும் குறுக்குப் பாதையாக

ஓர் அர்த்தத்தின் சுண்டுவிரலில்
தொங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு அர்த்தமாக

தலைகுனிந்தபடி பக்கப் பார்வைத் திருப்பி
நெளிய விடும் நக்கல் சிரிப்பாக

ஓர் ஆதுர முத்தத்திற்கு பிறகு மிச்சமிருக்கும் ஈரத்தில்
குமிழ் விட்டு உடைந்து போகும் காமமாக

கூச்சல் குழப்பத்தோடு சிதறும் இரவின் துணுக்கில்
ஒட்டிக் கொண்டு வெறிக்கும் மெளனமாக

நொடிக்கொரு முறை நினைவை மீட்டி மீட்டி
இசைக்க நேரும் அபத்த நரம்பாக

எந்தவொரு முன்னறிவிப்பின் அடிக்குறிப்பிலும்
இரு புள்ளிகளுக்கிடையே நீளும் சிவந்த கோடாக

ஒரு விபத்து நடப்பதற்கான
சில காரணங்களை நான் கையில் வைத்திருக்கிறேன்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

கனத்து வெடித்த வார்த்தை

*
சட்டென்று எழுந்து நிற்கிறது அமைதி
முன் கணம் வரை
கனத்து வெடித்த வார்த்தையிலிருந்து
சிதறிய எழுத்துக்கள்
அறையெங்கும்
முனை உடைந்து கிடக்கிறது

கண்கள் அள்ளுகிறது
மாளவில்லை காட்சி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5439

திராட்சை இலைகள்

*
பாலிதீன் கவருக்குள்
முடிச்சிட்டு அழுகும் திராட்சைகள் மீது

உற்பத்தியாகும் சிறு வண்டுகளின் மூளைக்குள்
திராட்சை விதைகள்

அதன் சிறகுகளில் நிறமாகிப் போகிறது
திராட்சைத் தோட்டத்து இலைகள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5439

தான்யாவின் நொடி..

*
தொண்டை நரம்புப் புடைக்க
கத்திய வார்த்தையின் நொடியை
கவனித்துவிட்ட தான்யாவின் நொடி
யுகமாக நீள்வதை

எட்டிப் பிடிக்க முடியவில்லை

ஆழத்தில் நழுவிக் கொண்டிருக்கிறது
அவள் கண்களின் உள்ளே

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5439

வியாழன், மார்ச் 29, 2012

வனத்தின் பெருந்துயரம்..

*
வனத்தின் பெருந்துயரம்
மொட்டைமாடி வெயிலில் காய்வதாக
கீச்சிடுகின்றன சொற்ப குருவிகள்

சிறு பச்சை இலைகள்
கைப்பற்றிக் கொள்கின்றன
சிதறும் நீர்த்துளிகளை

வேர்களின் உலகமொன்று
உயிர்த்திருக்கும் காரணத்தை
ஈரம் சொட்ட தொட்டிச் செடிகளுக்கு மேல்
நைலான் கொடியின் மீது உடைகளோடு காயப் போடுவதை
அவர்கள் உணர்வதில்லை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 19 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5398

புதன், மார்ச் 28, 2012

கோட்டோவியமாகி..

*
திறந்து விடுதலின் மூலம் நிறைவேற்றுகிறாய்
எனது புறவழிச் சாலை மைல் கல்லின்
முதல் எண்ணைக் குறிப்பெடுக்கும் தருணத்தை

நம்பும்படியான வாக்குறுதிப் பட்டியலோடு
நீ அணுகும் அநேக நிமிடங்கள்

மஞ்சள் நிற அந்தி பூசிய கீழ்வான எல்லையில்
பெயர் அறியா பறவைகள்
தம் நிழலைக் கோட்டோவியமாக்கி
பறக்கச் செய்யும் கணமாகி சாகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 26 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5413

சொற்களை இழுத்துப் போகும் எறும்புகள்..

*
ஜன்னல் திரை விலகிய
நுண்ணிய கணத்தில்
கொஞ்சமாய் இந்த அறையினுள் நுழைந்துவிட்ட வானத்தை
என்ன செய்ய

சார்த்தி வைத்திருக்கும் வாசல் கதவின்
கீழ் இடுக்கு வழியே
எனது வார்த்தைகளைத் துண்டு துண்டுகளாக
இழுத்துப் போகும் அந்த எறும்புகளை
எப்படி அதட்ட

பிளாட்பாரத்தில் வளர்ந்திருக்கும்
கார்ப்பரேஷன் மரத்தின்
அடர்த்திக் கிளையிலிருந்து
சதா எதையாவது சொல்லித் திட்டிக் கொண்டிருக்கும்
அணில்களை எப்படி புரிய வைக்க

உங்கள் ஜன்னலுக்குள் அத்துமீறி
நுழைந்துவிட்டவன் நானென்று

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ மார்ச் - 30 - 2012 ]

http://www.navinavirutcham.blogspot.in/2012/03/blog-post_2625.html

புள்ளிகளுக்கு நடுவே..

*
இந்தப் பக்கம் வந்துவிடும்படி
கையசைக்கிறாய்
சட்டென்று அப்படி நிகழ்வது
ஒரு சிக்கலை உற்பத்தி செய்கிறது

தொடர்பு நிலையின் இருப்பக்கப் புள்ளிகளுக்கு நடுவே
நேரமற்று நிதானமின்மையோடு விரைகின்றன
அனைத்தும்

மிஞ்சி சூழும் புகையில்
துல்லியமற்று புலப்படுகிறது
அந்தக் கையசைப்பு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 19 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5398

கொஞ்சமேனும்..

*
நிழல் துருத்தும்
சமன் சீரில் குளிர்ந்தத் துளியாகி
கீழிறங்குகிறாய் என் சரிவில்

அடிவாரச் சொற்களில் வீசும் வெயில் மீது
கொஞ்சமேனும் பூச முயல்கிறேன்
உன் நிறத்தை

மீண்டுமொரு தொடர்பு நுனி சிக்கித்
தலையசைகிறது துருத்தி நிழல் பிதுங்கும்
சிறுவாழ்வு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 12 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5376

முடிவற்ற ஒருவழிப் பாதை..

*
வயது என்ன
இத்தனை வருடங்கள்

என்னென்ன அனுபவங்கள்
இத்தனையித்தனை அனுபவங்கள்

இங்ஙனமே இந்த மொழியறிவு

கடந்து வந்த கோட்பாடுகள்
ஒவ்வொரு காலக்கட்டத்தின் மீதும் ஓர் அடுக்கு

தத்துவத் தரிசனங்களின் வீச்சு
அது முடிவற்ற ஒருவழிப் பாதை

துளைத்து உறுத்தும் கூர்முனைக் கொண்டவை
பதில்களைப் போன்றதொரு பதில்கள்..

ஒவ்வொரு அசைவிலும் வளையும் வாழ்வில்
ஸ்திரமாகி நெகிழும் கணங்களை
எங்கனம் கவ்விப் பிடிப்பது?
அதற்கொரு மொழியை விநியோகம் செய்பவன்
இதுவரைத் தட்டுப்படவில்லை

இத்தனைக் குறுக்குவெட்டுத் தோற்றங்களில்
ஒருவனும் இல்லை

' நான் சொல்றதைக் கேளு பாப்பா..
புரிஞ்சுக்கோ ப்ளீஸ் ' என்று கெஞ்சுகிறேன்

அனுபவங்கள்
மொழியறிவு
கோட்பாடுகள்
தத்துவத் தரிசனங்களின் ஏனைய அடுக்குகள்
யாவற்றையும்
தன் போக்கில் உடைத்துக் கொண்டிருக்கிறாள்
நெடுநேரமாய் தான்யா

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 12 - 2012]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5376

உனது நதி..

*
நழுவிப் பிய்க்கிறாய்
என் தளிரை

வேர் ஊன்றும் வாய்ப்பில்லை
இந்தக் கரையில்

உனது நதியின் சலசலப்பில்
பதிவாகாமல் கரைகிறது அதன் அலறல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

அது உங்கள் கையிலிருக்கிறது..

*
எனக்கு விருப்பமில்லாத பட்டியலொன்றில்
நானிருக்கிறேன்
அது உங்கள் கையிலிருக்கிறது

ஒரு சம்பவத்துக்கும் மறு சம்பவத்துக்குமிடையில்
நீங்கள் பெயர் வரிசை மாற்றுகிறீர்கள்
அதன் ரகசிய தாழ் நீங்குதல் குறித்து
எனது இரவு கிறீச்சிடுகிறது

மீண்டும் மீண்டும் அதனை
வாசித்துக் காட்ட நேரும் ஒரு மேடையில்
ஒலிபெருக்கி வசதியற்று
உயர்ந்து கொண்டே போகிறது உங்கள் குரல்

ஓர் ஒப்பந்தத்துக்கான விவாதத்தை முன்னெடுக்க
உங்கள் நாற்காலி சமதிக்கவில்லை

காகிதங்கள் பறக்காமலிருக்க நீங்கள் வைத்திருக்கும்
பேப்பர் வெயிட்டுக்குள்
மெல்ல நுழைந்துக் கொண்டிருக்கிறது
பட்டியலிலிருந்து எனது பெயர்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

உரையாடலின் நீர்க்கோடு..

*
சொற்கள் துழாவும் நீளச் சாலையில்
கரடுத் தட்டுகிறது இந்தப் பார்வை

வலுவான அர்த்தங்கள் பயணிக்கத் தயங்கும்
சுவரில் படர்கிறேன் பாசியென

என் மீது வழிந்திறங்கும் உரையாடலின் நீர்க்கோட்டில்
திரளும் கீழ்முனையில்
இப்போதும் குளிர்கிறாய் உறையப் போகும் எனது
தருணத்தை நோக்கி..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

அபத்தக் கணத்தின் நிழல் அறை..

*
அபத்தக் கணத்தின் நிழல் அறையில்
காரைப் பெயர்ந்து கொஞ்சங்கொஞ்சமாய்
உதிர்ந்து கொண்டிருக்கிறது
என் நிரூபணம்

ஓசையற்ற மொழியின் வளைவுகளில்
துளிர்த்துத் திரளும் மௌனத் துளியொன்று
நழுவிச் சிதறுகிறது தனிமைச் சுவரில் பெருஞ்சத்தத்துடன்

அபத்தக் கணத்தின்
இந்நிழல் அறையில் எங்கிருந்தோ கசியும்
வெளிச்சப் புள்ளி கொணர்கிறது
ஓர் இசையின் கீற்றை

அதைத் தொட்டுணர நீளும் விரலில் கனக்கிறது
மற்றுமொரு நூற்றாண்டுத் தனிமை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

கசந்து வெளியேறும் அர்த்தங்களின் மொழிபெயர்ப்பு..

*
நீ ஏன் அத்தனை இறுக்கத்துடன் பற்றிக் கொள்கிறாய்

நிறம் நிறமாய் உதிர்ந்து போகும் வாய்ப்புள்ள
ஒரு தொடர்பை

இரவைப் பூசிக் கொண்டே விடை தரும்
சொற்ப வெளிச்சத்தை

அறைச் சுவரில் இடையறாது
அசையும் புகைப்பட நிழலை

நடைபாதை ஈரத்தில் மிச்சமாகித் தேங்கிவிடும்
ஓர் எதிர்பாரா மழையின் அவசரத்தை

நிகழ்தல் என்பதின் ஆழத்தில்
மெல்ல இறங்க நேரும் அசௌகரியத்தை

கசந்து வெளியேறும் அர்த்தங்களின்
நீண்ட மொழிபெயர்ப்பை

அத்தனை இறுக்கத்துடன் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கொண்டு
விஷமேறும் பாசாங்குகளின் முகமூடிகளோடு
எந்த மேடையில் ஒளிந்து கொள்வாய்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 28 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19188&Itemid=139

கிழிபடாத காலண்டரின் தேதிகள்..

*
கிழிபடாத காலண்டரின் தேதிகள்
யாருமற்ற தனிமைச் சுவரில் மேலும் மேலும் அசைகிறது
சங்கேத ஒலிக் குறிப்புகளோடு

உதிர்க்கும் நள்ளிரவு
திசையற்றுப் பரவுகிறது இவ்வறையெங்கும்
மௌனத்தைக் கிளைத்தபடி..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 24 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19158&Itemid=139

ஒழுங்கற்ற வடிவங்கள்

*
தொட்டு விலகும் ஒரு ஸ்பரிசத்தில்
புதைத்து வைத்திருக்கிறாய் உனது ரகசியத்தை

வீரியம் பொங்கும் எளிய நம்பிக்கையில்
நீ எழுப்பும் சந்தேக நுனி
அதன் இறுதி வரைப் பயணிக்கிறது

எந்தவொரு குறுக்குத் தோற்றத்தையும் வார்க்காமல்
இந்தப் பகலிலிருந்து பிதுங்கும் வெயிலில்
ஒழுங்கற்ற வடிவங்கள் கொண்ட நிழல்கள்
பித்துப் பிடித்து அசைகின்றது

விருப்பமின்றி வீசும் வராண்டா காற்றில்
எப்போதும் சப்தங்கள் கும்மாளமிடும் தெருக் கூச்சலை
அழுந்த மிதித்து என்னைத் தொட்டு விலகும்
உனது ஸ்பரிசத்தில் புதைந்து கிடக்கிறது
ஒரு ரகசியம்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 4 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18831&Itemid=139

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

அழைக்க மறுத்த குரலின் நீர்மை..

*
குளிர்கிறது
குளிர்கிறது
முதுகெலும்பின் நடு மஜ்ஜையிலிருந்து
நடுங்குகிறது உன் நிழல்

அழைக்க மறுத்த குரலின் நீர்மை மேற்பரப்பில்
அசைகிறது விரல்

சுட்டுகிறாய்
மௌனம் சுட்டுகிறாய்
உடைகிறது பிம்பம்
உள்ளங்கையில் ஏந்தச் செய்கிறாய்

நீண்ட இரவின் மனம் வனைகிறது என்னை

காற்றில் எழுதி நீளும் அனைத்தின் சாயல்களையும்
உள்ளடக்குகிறாய்
புரியவில்லை இந்த நிதானம்

குளிர்கிறது
கடுமையாய் குளிர்கிறது

முதுகெலும்பிலிருந்து விடுவி உன்னை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5326

ஒலி உமிழும் மௌனத்தின் யத்தனிப்பில்..

*
கனவின் கனத்த காட்சி
விருப்பமின்றி அரங்கேறுகிறது
உனது மேடையில்

துரிதப்படுத்தப்படும் முக பாவனைகள்
அரிதாரப் பூச்சில் வியர்க்கின்றன

திட்டமிடாத வசனங்களால்
நிரம்பி வழிகிறது
பார்வையாளர் பகுதி

அறுகோணத்தில் வடிவமைக்கப்பட்ட
உணர்ச்சி ஒன்று
தன் சிறகைப் பிய்த்து கையில் வைத்திருக்கிறது
பறப்பதற்கு காரணமற்று

வர்ணமற்ற விளக்கொளியில் சரிகிறது
அடுக்கியிருக்கும் அபத்தங்களின் நிழல்
ஒலி உமிழும் மௌனத்தின் யத்தனிப்பில் ஊடறுக்கிறது
சொல்லில் அடங்காத் தனிமை

மெல்ல இறங்கும் அடர்த்திரையில்
சுருக்கங்களோடு விரிகிறது
பிழையில்லா ஒரு வளையம்

கைத்தட்டல் சப்தங்கள் சதா எதிரொலிக்கும்
நினைவின் பாதைக்குள்ளிருந்து
ஒவ்வொரு காகிதமாக உதிர்கிறது
எழுதி வைத்திருந்த உரையாடல்களோடு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5326

மீதக் காடு..

*
பாதி எரிந்து முடிந்த
தீக்குச்சியில்
மீத நெருப்பைக்
கைப்பற்றி வைத்திருக்கிறது
காடு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5298

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

விருட்..

*
கழுத்து வரை
மூழ்கச் செய்த மொழியில்
சாதகம் பிடித்து
மேலெழும்பிய இசை உடைய

விருட்டென்று பறந்துவிட்டது
உச்சியிலிருந்து
குயில்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி -]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5298

அறைக்கு வெளியே வீசும் புயல் காற்று

*
தூக்கத்தில் அசையும்
தான்யாவின் கால் கொலுசு
இரவை ஒலிக்கிறது

அறைக்கு வெளியே வீசும்
புயல் காற்று ஜன்னலைத் துளைத்து

பின்
கொலுசு திறக்கும் இரவில்
காற்று கடக்கிறது
புயலை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5298

மிகச் சிறிய இரவில்..

*
மிகச் சிறிய இரவில்
நிறைய காகிதங்கள் அடுக்கப்பட்டிருக்கிறது
ஒரு பேனா
ஒரு கத்தி

இத்தனிமையைத் தொட்டு எழுதுவதற்கு பேனா
மணிக்கட்டு நரம்பைத் துண்டித்துக் கொள்வதற்கு கத்தி

பெருகும் ரத்தக் கசிவில் எத்தனை வார்த்தைகள்
பெருகும் வார்த்தைக் கசிவில் எத்தனைக் கோட்பாடுகள்

ஒரு பேனா
ஒரு கத்தி

மிகச் சிறிய காகிதத்தில்
அடுக்கப்பட்டிருக்கிறது இரவு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

சரியும் பார்வையில் உதிரும் இறகு..

*
நீ
பிழியும் துணியிலிருந்து நழுவும் சோப்புத் துளிகள்
வெப்பமேறி சாகின்றன பாத விரல் வளைவில்

உன் சரியும் பார்வையின் குளிரில்
சிறகொன்று உதிர்க்கிறது இறகை

தடயங்களேதுமில்லா ரகசியமென
பின்வரும் இரவை நறுக்கி வைக்கிறாய்
மாடிப்படி முனையில்

மேல்நோக்கி குவியும் உதட்டில் தாழ
இறங்கித் ததும்புகிறது மௌனமாய் ஒரு முத்தம்

உரையாட மிச்சம் பிடித்து வைத்திருக்கும் சொற்கள்
இறக்கைத் துடிக்கக் காதருகே தொங்குகிறது
ஏனைய அர்த்தங்களைக் கொத்தி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

யாருமற்ற பொழுதின் சூரியன்

*
ஒரு போதும் அசைவதில்லை
நைலான் கொடியில் முறுக்கிக் கொண்டிருக்கும் நிழல்

ஒன்றிரண்டு ஈக்கள் மட்டும் நக்கிப் பார்க்கின்றன
அப்போதும் அதில் மீதமிருக்கிறது கொஞ்சம் வெயில்

கான்க்ரீட் சொரசொரப்பில்
இலைச் சருகொன்று தன் தடித்த நரம்புகள் உரச
சப்தமெழுப்பி உருட்டுகிறது காற்று

மருண்ட கண்களோடு நிழல் விளிம்பைத் துரத்தி
ஓடுகிறது வெயிலில் சிவந்த கட்டெறும்பு

யாருமற்ற பொழுதின் சூரியன்
மொட்டைமாடிச் சுவரில் யாரோ வைத்துப் போன
ஒரு பிடிச் சோற்றிலும் கொஞ்சம் காய்கிறது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

துளிச் சலனம் விழுந்து... வட்டமென விரியும் பசலை...

*
அழுந்தத் துடைத்துக் கொள்ள எப்போதும்
ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

மறுப்பின்றி உச்சரிக்க நேரும் வாக்கியங்கள்
இணக்கத்தோடு இறுகத் தழுவும் ஸ்பரிசம்
ப்ரியமான பார்வையுடன் உதிரும் முத்தங்களின் வாசல்
அசைப் போட்டுத் தனித்திருக்க அனுமதிக்கும் மயக்கம்
கூடலில் முயங்கும் மௌனத்திலிருந்து வெளியேறும் ஒரு சொல்
மரணத்தின் துளி சலனம் விழுந்து வட்டமென விரியும் பசலை
ஊடலில் தென்றல் தொட்டு சிலிர்ப்பூதும் இசையின் லயம்

ஒவ்வொன்றிலிருந்தும் கோர்த்துக் கொண்டு
துளிர்த்துப் படரும் காமத்தின் ஈரம் சிவக்கும் முகத்தில்
மெழுகிப் பெருகும் தாபத்தை அழுந்தத் துடைத்துக் கொள்ள

ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

சாம்பலாகும் பொழுதொன்றின் விரல் பிடித்து..

*
எனக்குள் பற்றியெரியும்
நீண்டச் சாலையில்
கைவிடப்பட்ட சொற்களோடு நிற்கிறேன்

எல்லாத் திசையிலும்
தீப்பிழம்புகள்

கருகி உதிரும் மகரந்தங்களின் பிண வாசம்
வனங்களின் புண்ணில் புரையோடுகிறது

சுழலும் கனலின் விரல் பிடிக்கத்
தயங்கும் மௌனத்தின் மயிர்க்கால்கள் வெந்து போகிறது

சாம்பலாகும் பொழுதொன்றின் தனிமை வெப்பத்தில்
நீறு பூத்து மிச்சமாகிக் கிடக்கிறது

நீயென்றும் நானென்றும்
சொற்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5253

பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு கோப்பை மழை இரவு..

*
மௌனத்தைக் குழைக்கிறது இந்த மழையின் ஈரம்
தாழ்வாரத் தாளங்களின் குதித்தலோடு
சிதறும் சாரல்களின் புள்ளிகளில்
நனைகிறது அகாலம்

இந்த இரவு விடிவதை சாத்தியப்படுத்த முயல்கிறது
காற்றில் ஊசலாடும் குண்டு பல்பு

சுவர்களில் அசையும் நிழல்கள்
கை நீட்டி யாசிக்கின்றன என் மௌனத்தை

ஓயாத இம்மழை இரவின் ஈரத்தைக் கர்ச்சீப்பில் ஒற்றியெடுத்து
பிழிந்து வைத்திருக்கிறேன்
பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு
பீங்கான் கோப்பையில்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5253

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

நழுவி உடையும் சலனம்

*
ஒற்றை முகப் பாவனையில்
யாவற்றையும் எழுதிப் போகிறது மௌனம்

கணிப்பின் மீறலில் துடிக்கும் அர்த்தங்கள்
ஒரு அடர்ந்த திரைச் சீலையைப் போல்
இவ்விரவைத் தொங்க விடுகிறது

பேச்சற்று அமர்ந்திருக்கும் மேஜையில் எதுவுமில்லை
வெறுமையின் வெளி
மெழுகிப் பூசுகிறது
மனதின் சொற்ப வெளிச்சத்தை

வார்த்தைகள் கொண்டுத் தாங்கிப் பிடிக்கும்
வலி ஒவ்வொன்றும்
அவசியமற்ற புன்னகையோடு சூழ் கொள்கிறது

சலனத்தின் மென்வருடல் நழுவி உடையும் என் நிழலில்
சில்லுகளாய் நொறுங்கிட அனுமதிக்கிறது
இக்கொடுந்தனிமை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18371&Itemid=139

கொஞ்சம் சொற்கள் மட்டுமே

*
என்னிடமிருப்பது 
கொஞ்சம் சொற்கள் மட்டுமே 

சிரமப்பட்டு 
அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் 

எழுதித் தரும்படி 
நீ நீட்டும் காகிதங்கள் 
உன்னோடு இருக்கட்டும் 

**** 

புதன், ஜனவரி 25, 2012

கொஞ்சம்..

*
சிறிது தூரம் மட்டுமே
வெளியேறத் தெரிந்த பயணத்தின்
அலுப்பில்
கொஞ்சம் நீயிருந்தாய்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225

வளைக் கோடுகளின் முன்னிரவு..

*
வர்ணம் கலைந்து கிடக்கும்
வாசல் கோலத்தின் வளைக் கோடுகளில்

அப்படியே மீதமிருக்கிறது

நேற்றைய முன்னிரவின் பனிப் பொழிவும்
அவசரமாய் கடந்து சென்ற
உனது சைக்கிள் மணிச் சத்தமும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225


மெல்லப் பிடி நழுவும் கண்ணாடிக் கதவுகள்..

*
ஒரு தலைக் குனிவின் அவசரத்தில்
கடிகாரத்தின் நவீன முட்கள்
அசையவில்லை

சொற்கள் இறையும் அறையில்
நா ஒடிந்த பேனாவின் பள்ளத்தில்
வழிகிறது
ஓர் ஆதி மொழி

திரும்பும்போதோ
வெளியேறும்போதோ
உறுத்துகிறது மெல்லப் பிடி நழுவும்
கண்ணாடிக் கதவுகள்

தனித்தத் தெருவில்
ஒரு தலைக் குனிவின் நிதானத்தில்
அவசரமின்றி நம் மீது பரவத் தொடங்குகிறது
கைவிடப்பட்ட வெயிலொன்று

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225

அனிச்சையாய் உதிர்ந்து விழும் ஒரு சொல்..

*
வதையின் ரகசிய அறையில்
பாசிப் படர்ந்த அதன் சுவர் முழுவதும்
பெயர்களின் காரை உதிர்ந்து

சதைப் பெயர்த்த ஆயுதங்களின் குளிரில்
விறைத்துப் போகிறது உடலும்
நையப் புடைத்த மனமும்

அனிச்சையாய் உதிர்ந்து விழும் ஒரு சொல்லின்
அர்த்தத்தைக் கழுவி வழிகிறது
புனித ரத்தம்

நினமொழுகும் மௌனங்களின்
பிரார்த்தனை முணுமுணுப்பு எதிரொலிக்கும்
வதையின் அறையில்

மரணத்தின் இறுதிக் குறிப்பை உச்சரித்து
அடங்குகிறது வாழ்வின் உதடு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225

நிலவறை இருட்டில் சாம்பல் பூத்த ரத்தக் கோடுகள்..

*
எனது நிலவறையின் இருட்டுக்குள்
பதுங்கிக் காத்திருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்

என்னிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக
பிரித்தெடுத்துக் கொண்ட எனது வருடங்களைப்
பற்றிய அனைத்துக் குறிப்புகளும்
நகங்கள் கொண்டு இச்சுவர்களில்
கீறி வைத்திருக்கிறேன்

ரத்தக் கோடுகள் சாம்பல் பூத்து
கரும்பச்சை நிறமேறி பிசுபிசுத்து காய்ந்து கிடக்கிறது

'உச்' கொட்டும் உதடுகளிலிருந்து
புறப்படும் வௌவால்களின் சிறகில்
ஈரம் சேகரிக்கிறது ஒரு மழை நினைவு

கைக்கொட்டி சிரித்து உதிர்ந்த
ஒலியலைகளின் மீது கானலின் வர்ணத்தைப்
பூசி நிற்கிறது ஒரு வெயில் பிசிறு

என் நிலவறையின் இருட்டுக்குள்
தாடைகள் இறுகத் தசை விறைத்துக் காத்திருக்கிறது
ஒற்றை மிருகம்
உனது ஆயுதங்கள் பற்றி அறிந்திராத
ஒரு மிருகம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5209

திங்கள், ஜனவரி 23, 2012

நிறம் மயங்கும் சொற்கள்..

*
நினைவைச் சொல்லும் ஒரு துளியைப்
பருகக் கொடுத்தாய்

தொண்டைக்குள் இறங்கும் பாதையில் அது
ஓசையில்லாமல் எல்லாக் கதவுகளையும்
சார்த்துகிறது

உனது பேரன்பின் முடிவின்மையில்
என்னை ஒரு அடையாளமாய் செருகிச் செல்கிறாய்

மீண்டும் மீண்டும் வாசிப்பதற்குரிய
எனது இரவுகளை அடுக்குக் குலையாமல்
தைத்து வைத்திருக்கிறேன்

யாவற்றையும் தொட்டு துல்லியத்தின் நினைவைச் சொல்லும்
ஒரு துளியைப் பருகக் கொடுக்கிறாய்

நிறம் மயங்கும் சொற்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
கொஞ்சங் கொஞ்சமாய்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5209

அனர்த்தங்களின் நாளம்

*
சொல் ஒன்று அறுந்து விழும் ஓசையை
கையில் ஏந்திக் கொள்கிறேன்

துண்டிக்கப்பட்டு ரத்தம் கசியும்
அனர்த்தங்களின் நாளம்
தன் நுனியில் கொப்புளித்து வெடிக்கிறது
என்னோடு யாருமற்ற இந்த இரவை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

விரல்களிலிருந்து பிரியும் விரல்கள்..

*
முதலிரண்டு முத்தங்களில் மலர்த் தோட்டத்தின்
வாசனைகள் படர்ந்திருந்தது

பட்டென்று புறப்பட்ட
ரயில் ஜன்னல்வழி நீண்டிருந்த கையோடு
விரல்களிலிருந்து பிரிந்த விரல்களின்
பிரியத்தில் மலர்ந்திருந்தது ரகசிய முத்தமொன்று

புள்ளியாகிவிட்ட விரலசைவுகளின்
மௌனம்
பிளாட்பார நீளத்திற்கு வெறிச்சோடிக் கிடக்கிறது
திரும்பி நடக்கும் நிமிடம் முழுவதும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

ஓர் அவமானத்துக்கு பின்னும்..

*
நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும்
இன்றும் பின்பற்றுகிறேன்

எவரோடு பேசும்போதும் சிரித்துக் கொண்டே அவர்களின்
சொற்கள் மீது நம்பிக்கையிழக்க

ஒரு சத்தியத்தின் ஆயுட்காலம்
சரியாக ஒரு நிமிடம் மட்டுமே என்ற காலத்தின்
நொடிகளைக் கணக்கிட்டுக் கொண்டே

ஓர் அவமானத்துக்கு பின்னும் மிச்சமிருக்கும்
கடைசிப் புன்னகையைக் கூட
அந்த இடத்திலேயே விட்டு விட

நிறமிழக்கும் ஒரு மௌனத்தின் ஈரத்தை
புறங்கையால் நெற்றியிலிருந்து துடைத்துக் கொள்ள

அலுத்து விடும் தனிமையின் சதுரங்களை
முனைத் திருகித் திருகி வளைத்து
வளையங்கள் கோர்க்க

மீண்டும் வருவதாக மீண்டும் மீண்டும்
சொல்லிப் போகும் பொய்களைக் காகிதங்களில் மொழிபெயர்க்க

மன்னிப்புக் கோரி வரும் எந்தவொரு கடிதத்துக்கும்
பதிலெழுதாத பாவத்தைப் பரிசளிக்கும் மனத்தைப் பழக்கப்படுத்த

நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும்
இனிமேலும் பின்பற்ற விரும்புகிறேன்

அதனால்
எனது கதவுகளை ஆணியறைந்து வைத்திருக்கிறேன்

தயவு செய்து மீண்டும் மீண்டும் என்
அழைப்பு மணியை அழுத்தாதே

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில்..

*
பதுங்கிக் காத்திருந்த வார்த்தையிலிருந்து
வெளிப்பட்டாய் கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில்

அது ஒரு பகல் பொழுதின் நிழலை அசைப் போட்டபடி
அதுவரை எழுதிய பக்கங்களை தன்னிச்சையாய்ப் புரட்டும்
விரல் நுனிகளைக் கவனித்துக் கொண்டிருந்த நொடி

மாற்று அர்த்தங்களை அனுமதிக்காத உனது அவசரத்தை
பதட்டத்தோடு எதிர்கொள்ளும் அவகாசத்தை
நான் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை

என்னிலிருந்து பிரிந்தெழுந்து அறை மூலையின்
ஜன்னலோரம் நின்று கொள்ளவே விரும்புகிறேன்

அதன் கண்ணாடியினூடே அசையும் உலகின் வெளி
என் வாழ்வின் மீது எந்தவொரு அபிப்பிராயத்தையும்
கொண்டிருக்கவில்லை
எனது தனித்த இரவின் சாட்சியாக அதிகாலையில் வழிந்திறங்கும்
ஒன்றிரண்டு பனித்துளிகளைத் தவிர
வேறெவரும் எதிர்கொள்வதுமில்லை இந்த அகாலத்தை

ஆனாலும்

காத்திருந்த வார்த்தையிலிருந்து வெளிப்பட்டாய்
கொஞ்சமும் பொருந்தாத
ஒரு தருணத்தில்

வெளியே திரளும் சாம்பல் மேகங்கள்
கொஞ்சம் மழையாய் பெய்தால் நன்றாக இருக்கும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

ஏதேதோ..

*
மதுக் குடுவையின்
குறுகிய வாய் விளிம்பில் எச்சில்
பிசுபிசுப்போடு
ஊர்ந்து கொண்டிருக்கிறது ஒரு மணி நேரமாக
ஏதேதோ
வார்த்தைகள்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

உன் மீதான பிரியங்களின் பொருட்டு..

*
மிருதுவாக இருக்கிறது
புத்தம்புது வெண்ணிற பஞ்சைத் தொடுவதாக
உனது உள்ளங்கை

அதன் மத்தியைக் கிள்ளச் சொல்லி
உறுதிப் படுத்த விரும்புகிறாய்
எனது சொல்லை

உன் மீதான பிரியங்களின் பொருட்டு
அரை மனதோடு
கொஞ்சமாய் கிள்ளியெறிகிறேன்
அந்தச் சொல்லிலிருந்து
ஒரு பொய்யை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

பகல்களையும் இரவுகளையும் கடக்கும் காலடிச் சத்தங்கள்..

*
சுரங்கப்பாதையின் நீண்டக் குகை நிழலில்
ஒரு பக்கச் சுவரில் சாய்ந்தபடி கையேந்தி நிற்கிறான் அவன்

நிலத்தின் தரையோடு மறு கையை இணைத்திருக்கிறது
ஓர் ஊன்றுகோல்
அது ஒரு கோரிக்கை அல்லது யாசகம்

கூரைக்கு மேற்புறம் ஓடும் வாகனங்களின்
சன்னச் சத்தங்கள் கலந்தபடி
காலடிச் சத்தங்கள் அவனைக் கடக்கின்றன
பகல்களையும் இரவுகளையும் கடக்கும் காலடிச் சத்தங்கள்

அவன் உலகின் இருளுக்குள் சதா கேட்கின்றது குரல்கள்
அவசரக் குரல்கள்
பேரம் பேசும் குரல்கள்
சலிப்பின் குரல்கள்
கோபக் குரல்கள்
கெஞ்சும் குரல்கள்
குழந்தைகளின் அழு குரல்கள்

அதன் நீண்ட குழல் தன்மையின் எதிரொலியில்
குரல்கள் இங்கும் அங்குமாக தப்பிக்கத் தெரியாமல் சிதறுகின்றன

புற உலகின் அவசரங்களுக்கு ஊடே
எந்தவொரு கோரிக்கைக் குரலுமற்று கையேந்தி நிற்கிறது
ஓர் அன்றாடத் தேவையின் குரலற்றக் குரல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

பார்வையொன்றை தாழப் பறக்க விடுகிறாய்..

*
ஒரு நகர்தலை
நுணுகி கவனிக்கத் தவறிய வேகத்தில்
சொல்லி முடித்திருந்தாய்
தயங்கியபடி விரல் பின்னிக் கொண்டிருந்த
வார்த்தைகளை

பதுங்கி வெளிப்படும் இரவுகளின் வாசலில்
மீசைத் துடிக்கக் காத்திருந்த
மனப் பூனையின் நறுக்கிய வாலை
அட்டைப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கிறேன்
உனக்குப் பரிசளிக்க

கடந்து போன கோடைப் பகலின் நிழல் விரிசலை
பூசி மெழுகும் பார்வையொன்றை தாழப் பறக்க விடுகிறாய்
பேரமைதி சூழ்ந்திருக்கும் இவ்வெளியெங்கும்
துடிப்புடன் நழுவுகிறது
நுணுகி கவனிக்கத் தவறிய
ஒரு நகர்தல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 2 - 20121 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5143


மதில் மேல் செருகி நிற்கும் ப்ரைலி புள்ளிகள்..

*
காகிதப் பரப்பில் புடைத்துக் கொண்டிருக்கும்
நிறமற்ற புள்ளிகளில் விரியும் மணல்வெளியில்
சொற்களின் வினோத வடிவங்கள் மீது
கானல் நீரின் நிழல் மிதக்கிறது

வானும் மழையும் கயிறு திரிந்து
விரல்களின் நுனியில் வர்ணங்கள் கோர்க்கிறது

கிராமத்தின் நெல் வயலும்
சஹாராவின் புயல் மணலும்
கான்க்ரீட் இறுகும் நகரின் வெயில் முகமும்
தளிர் இலையும்
பட்ட மரமும்
வாகனங்களும் வாலில்லா பூனையும்
மதில் மேல் செருகி நிற்கும் உடைந்த கண்ணாடிச் சில்லும்
விளக்குகள் மினுக்கும் ஆளற்ற தெருவின் தனிமையும்

விரலோடும் புள்ளிகளின் வேகத்தில்
அடர்ந்த மௌனத்தின் சிறகினை அசைக்கின்றது

புன்னகையின் ரசவாதமும்
பேராவலின் ஒற்றையடிப் பாதைகளும்
விக்கித்து நிற்கின்றன தொடரும் நபர்கள் யாருமற்று

மெல்லப் பரிச்சயமாகும் ப்ரைலி புள்ளிகளோடு வந்து நிற்கிறது
எப்போதும் யாவற்றையும் நிறுத்திப் பார்க்கும்
ஓர் அசாதாரண முற்றுப் புள்ளி

*******
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்

*
ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்
யாருமற்ற வராண்டாவின் தனிமையை
அளந்து கொண்டிருக்கிறான்

சொற்ப வெயில் பூசிய படிகளில் அசையும்
நிழல் மீது உட்கார்ந்திருக்கிறான்

அழைப்பினூடே உச்சரிக்கப்படும்
வசவு வார்த்தைகளின் வெப்பத்தை
தன் புறங்கையின் நரம்பிலிருந்து
நீவிக் கொண்டிருக்கிறான்

ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்
கடற்கரை அலைகளோடு
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான்

அவன் கணுக்கால் வரைத் தொட்டு நனைத்து
மீள்கிறது வெண்ணிற நுரைகள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5143



மொழிபெயர்த்துவிட முடியாத ஒரு மௌனம்..

*
அத்தனை எளிமையாக நீங்கள் சொல்லிவிட முடியாது
ஒரு பயத்தை
அவ்வளவுத் துல்லியமாக நீங்கள் கணித்து விடமுடியாது
ஒரு துரோகத்தை
அப்படியொன்றும் சுலபமல்ல உங்களை நோக்கி வரும்
சொற்களின் அர்த்தங்கள் புரிந்துவிட

அவ்வளவு அவசரமாக உங்களால் மொழிபெயர்த்து விடமுடியாது
ஒரு மௌனத்தை
அத்தனை பயணத்திலும் நீங்கள் அடைந்து விடமுடியாது
ஒரு மையத்தை

அப்படியொன்றும் ஆழமிறங்குவதில்லை உங்களின் கூர்மை
குரல் தாழ்ந்து கெட்டித்தப் பரப்பில்

அவ்வளவு பட்டியலிலும் இடம்பெற்று விடும் தகுதியோடு
உறங்கச் செல்லும் உங்கள் இரவு
அத்தனைக் கணக்காகத் திட்டமிடப்படுகிறது உங்களுக்கு
சம்பந்தமில்லாத ஒரு பகலில்
ஏதோவொரு மேஜையில்
ஏதோவொரு கோப்பில்
ஏதோவொரு முத்திரையின் கீழ்
ஏதோவொரு பச்சை நிறக் கையெழுத்தில்

அவ்வளவுத் துல்லியமாக நீங்கள் கணித்து விடமுடியாது
ஒரு அர்த்தத்தை

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜனவரி - 25 -2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18135&Itemid=139


காற்றோடு ஆடி முந்தும் திரைச்சீலை

*
மற்றுமொரு முறை அழைத்திருந்தாய்
மொட்டைப் போல் அவிழ்கிறது
இதழ் இதழாக என் உலகம்

ரகசிய கனவுகளின் இழைப் பிரித்து
நெய்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு சிறகை
அதில் வர்ணங்கள் கூட்டுகிறது உனது புன்னகை

இவ்வுலகின் எல்லைக் கடந்து
பறப்பதற்குரிய
இரவை அடுத்தக் கடிதத்தில் அனுப்பி வை

இந்த வானின் கருநீலத்தைக் கொஞ்சம்
உனக்காக அள்ளி வருகிறேன்
உன் ஜன்னல்களை மட்டும் திறந்து விடு

காற்றோடு ஆடி முந்தும் திரைச்சீலைகளின்
வெண்மை நிறத்தையும் மாற்றுகிறேன்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜனவரி - 12 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17998&Itemid=139

சொல்லின் நீர்மைச் செதில்..

*
முன் தீர்மானங்களற்று சொல்வதற்கு
ஒரு சொல் கூட மிச்சமிருப்பதில்லை

காத்திருக்கும் தனிமையில்
எதிர்ப்படும் மௌனங்கள்
செதில் செதிலாக அசைக்கிறது
இவ்விரவை

புள்ளிகளாய்த் திரண்டு கோர்க்கும்
பனித்துளியொத்த தருணங்கள்
ஈரம் குளிரக் காத்திருக்கிறது

ஒரு சொல்லின் நீர்மையில்
எப்போதும்
மிதந்து கொண்டே இருக்கும்
சொல்லப்படாத அர்த்தங்கள்
மிச்சம் வைப்பதில்லை
வேறெந்த சொல்லையும்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜனவரி - 10 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17962&Itemid=139