செவ்வாய், நவம்பர் 24, 2009

விரல் நுனியில் சுருளும் வேலிப்படல்...

*

எதையோ கேட்க நினைத்த
தவிப்பை..
முக பாவனையில் எழுதியபடியே
உடன் வருகிறாள்..

மௌனத்தைக் குழைத்து..
சாலையாக வழித்துப் போயிருக்கிறார்கள்
முன்னே சென்று விட்டவர்கள்..

இருளை சுழித்துக் கொண்டு
கீழிறங்குகின்றன
மஞ்சள் விளக்கொளிகள்..

விரல் நுனியில்
சுருளும் முந்தானை முனை..
வரிகளைப் பிரசவிக்கிறது..
விடியலில்..
'தண்ணீர்' எழுதவிருக்கும் கவிதைக்காக..

'ம்..?' -
என்ற.. அர்த்தமில்லா கேள்விக்குள்..
ஓராயிரம் பதில்கள்..
முண்டுகின்றன..
எப்படியாவது வெளிப்பட்டுவிட..

பாதங்களுக்கு கீழ்..
சிக்கிக் கொண்ட
சிறு சரளைக் கற்களை
உதறியபோது..

அவள் வீடு வந்துவிட்டது..

நேற்றைப் போலவே..
இன்றும்..
கையசைத்து..
வேலிப்படல் கடந்து..
உள் நுழைகிறாள்..
அமைதியாக..

****

2 கருத்துகள்: