ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

இருண்ட உலகின் ரகசிய பின் கதவு..

*

அணிலொன்று..
என் புத்தக அலமாரிக்குள்
போவதும் வருவதுமாக
இருந்தது..

அணிலுக்கான
நூலகமாக மாறிவிட்ட
புத்தக அலமாரி..
அதன் ' கீச் - கீச் ' சப்தங்களை
மௌனமாய் சேமிக்கத் தொடங்கியது..

மூன்று இரவுகள் கடந்த
நான்காம் இரவில்..
புதிய குரல்கள் கேட்கத் தொடங்கின..

உயரமான மேல் தட்டில்..
தடிமனாய் இருந்த
' குற்றமும் தண்டனையும் '
புத்தகத்தின் பின்னால்..

மூன்று பிஞ்சு அணில்களின் சன்னக் குரலும்
தாய் அணிலின் மருண்ட பார்வையும்..
தாஸ்தயேவ்ஸ்கியின் இருண்ட உலகின் பின் கதவை
என் புத்தக அலமாரியில்
திறந்து வைத்த ரகசியத்தை..

யாரிடமும் நான் சொல்லப் போவதில்லை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக