வெள்ளி, ஜூலை 31, 2009

பகைமைக்கான முகாந்திரம்..

*

இருவருக்குமான
இடைப்பட்ட
நிமிடங்களின் இடைவெளியில்..

மௌனமொன்று..
உறுமுகிறது..

பின்னிரவின்
தெருவிளக்கு உமிழும்
மங்கிய
மஞ்சள் நிற ஒளியின்..
நிழலுக்குள்..

கவனிப்பற்று
சேகரமாகிறது..
சலிப்பு மிகு பகமைக்கான
முகாந்திரம்..

முஷ்டியின்
பலம் முறுகும்..
தசை நார்களில்..

எப்போதும்
தொடுக்க முடிந்ததில்லை..

சமாதானத்துக்கான பூக்களை..!

*****

புதன், ஜூலை 29, 2009

தொலைந்த இரவும்.. அடுத்தப் பக்கத்துக்கான திசையும்..

*

அகாலத்தில்
கதவு தட்டுகின்றன..

பாதி படித்து
கவிழ்த்து வைத்த
புத்தகத்தின்
கதாபாத்திரங்கள்..

'தூக்கம் தொலைத்த
இரவும்..
தொலைந்து விட்டதாக..'
சண்டைக்கு வருகின்றன..

அடுத்தப் பக்கத்துக்கான..
திசையை..
நச்சரிப்புடன் விசாரிக்கின்றன..

'என்னங்க..?' - என்றாள்
தூக்கக் கலக்கத்தில்..மனைவி..

'படு..! காலைல எழுப்பறேன்..' -
என்றபடி..
படுக்கையறை கடந்து..

படிக்கும் மேஜையில்..
கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை..
கையிலெடுத்து..

விட்ட இடத்திலிருந்து...
வாசிக்கத் தொடங்கினேன்..

தொலைந்த இரவும்..
அடுத்தப் பக்கத்துக்கான
திசையும்..

அறை ஜன்னலின்
இடுக்கினூடே..
மெல்ல நுழைகிறது..

*****

பூக்கும் நுண்ணியங்கள்..!

*

இள ரோஸ் நிற
'ஜெல்லாக'
தளும்பும் உதடுகளின்..

ரேகை வகிடுகளுள்..

பூக்கும் நுண்ணிய
ஈரத் துளிகளில்..

பிரமிக்கும்..
குட்டி பிம்பங்களாய்..
மிதக்கக் கூடும்..

என் முத்தங்கள்..

****

வெட்கத்தின் வளைவுகளை..முத்தமிடும் பென்சில் முனை..

*

வரைக்கோட்டுச் சித்திரத்தின்..
நெளி கோடுகளில்..

வெட்கத்தின் வளைவுகளை..
விரல் நுனிகள்
பிரசவிக்க..பிரசவிக்க..

பென்சிலின்
கார்பன் முனை..
முத்தமிட்டபடியே..
பயணிக்கிறது...

கையெழுத்திட்டு..
புள்ளி வைக்கும் வரை..

****

மல்லுக்கடுதலுக்கான இரவுகள்..

*

என்
அறை முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
புத்தகங்கள்..

புத்தகங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
வாக்கியங்கள்..

வாக்கியங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
சொற்கள்..

சொற்களுக்குள்..
முண்டியடித்து -
ஒளிந்து கொள்கின்றன
எழுத்துக்கள்..

அர்த்தங்களோடு
மல்லுக்கட்டும்...
இரவை.. உருக்க..

'ஸ்டீல்' பாத்திரத்தில்..
நிரப்பி அடுப்பிலேற்றுகிறேன்..

பாத்திரத்தின்..
அடிவயிற்றை..
ஆசையோடு நக்குகிறது..
'கேஸ்' நெருப்பு...

****

புணரும் வேர் நுனிகள்..

*

நறுவிசாய்
மௌனம் பூசிக்கொள்ளும்
தனிமையின்
வேர் நுனியில்..

முடிச்சிட்டுக் கிடக்கிறது
சிறு சப்தம்..

உறைந்துவிட்ட
நினைவுகளை உருக்கிட..

அனல் வீசிக் கடக்கும்
ஒருத்தியின் புன்னகையால்..

பொங்கும்
கண்ணீர்த் துளிகளை..
புணரும்
வேர் நுனிகள்..

இளக்குகின்றன..
முடிச்சுகளை..

*****

நுரைக் குமிழென..

*

முகில் சுழியில்..
சிக்கி முறுகும்..
மழைத் துளியில்..

மின்னல்
பட்டுத் தெறிக்கும்
சிரிப்பலையின்..

நுரைக் குமிழென..
ஊதிப் பெருகும்..

நின் காதல்..!

****

மழைச் சித்திரங்கள்..

*

செருப்பின்
ஓரத் தையல்களில்..
நைந்து..

பிசிராய் கிளம்பிய
நூல் நுனிகள்..

நேற்றிரவு..
வீடு திரும்புகையில்..
மழையில்..
தெருவில்..
நனைந்த சுகத்தில்..

வாசலோரச் சுவரில்..
வரைந்து வைத்திருக்கின்றன..
தான்..
ப்ரியப்பட்ட
கோட்டுச் சித்திரங்களை..!

*****

மெட்ரோ கவிதைகள் - 23

*
வட்டமாய்
நகம் கொண்டு
கீறி வைத்திருக்கிறேன்..

ஏதோ ஒரு
'ஷேர்' - ஆட்டோவின்
இடப்பக்கத் தகட்டில்..

உன்னோடு
செல் போனில்..
பேசிய..

நேற்றைய பயணத்தை..

****

செந்நிற சதுரங்களும்..எல்லையற்ற வடிவங்களும்..

*

ஒற்றை
மழைத் துளி..

தூரிகையாக
உருகிய..
கன வேகத்தில்..

செந்நிற சதுரக் கல்லில்
மோதிய நொடியில்..

'மாடர்ன் ஆர்ட்டாக..'
ஊறுகிறது..
எல்லையற்ற வடிவோடு..

****