சனி, ஜூலை 23, 2011

பார்வையின் முள்

*
எங்கிருந்து தொடங்குவது
என்றொரு கணம்
அடுக்கி வைத்திருக்கும்
புத்தக இடைவெளியில் நெளிகிறது

லாவகமான நிமிடங்களை
அபகரித்துக் கொள்ளும்
பார்வையின் முள் நிரடிச் சலிக்கிறது மௌனத்தை

எதிர் நாற்காலியின் வெறுமையை
அமைதியாக மெழுகிக் கொண்டிருக்கிறது
விளக்கொளி

வார்த்தைகளை
அரைத்துச் சுழலும் மின்விசிறி இழை
ஒவ்வொரு பக்கத்தின் எண்களையும்
சுழற்றி வீசுகிறது வாசல் நோக்கி..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15618&Itemid=139

ஞாயிறு, ஜூலை 17, 2011

ரகசியமாய் தைத்த இரவு..

*
குளிருக்காக இழுத்துப்
போர்த்திக் கொண்ட போர்வையில்
இரவை
ரகசியமாய்
என்னோடு தைத்து விட்டது

இழை இழையாய்
உன்
முத்தம்..

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 10 -2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15506&Itemid=139

சலனமற்று விழும் ஒரு சாம்பல் துளி..

*
எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள்
அறையெங்கும் படிகிறது
 
திறந்து கிடக்கும் புத்தகத்தின்
வாசிக்க மறந்த பக்கத்தில்
ஒத்துவராத வாக்கியங்களுக்கு நடுவே
சலனமற்று விழுந்து கிடக்கிறது
புதிர் நிறைந்த முற்றுப் புள்ளியென
ஒரு சாம்பல் துளி
 
அர்த்தங்களுக்கான விளக்கங்கள்
இவ்விரவு நெடுக நிழலென
அசைந்துக் கொண்டே இருக்கிறது
ஜன்னலுக்குரிய மெல்லிய திரைச் சீலையில்
 
மனதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும்
துரோகங்கள்
மேலும்  எரிந்து சாம்பலாகிறது
எதையும் மிச்சம் வைக்காமல்
 
*****
 
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 9 - 2011 ] 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15495&Itemid=139

வியாழன், ஜூலை 14, 2011

படரும் பசலையாய் மருகி..

*
எதனூடும் பற்றிக் கொள்ளவியலாத
வேர்களைக் கொண்டிருக்கிறாய்
நித்தமும் ஒரு ரகசியக் குறிப்பென உன் இரவை
முகிழ்தலின் மகரந்தச் சேர்க்கையில்
ஈரம் உலர்தல் வாய்ப்பில்லையென்றே
நிழல் உருவிக் கொண்டாய் அந்தகாரத்தில்
தேன் உகுக்கும் மௌனச் செதில்கள்
நிரடும் இமைப் பீலியில்
கிறங்கிச் சிலிர்த்தலை கனவாக பகிர்ந்தாய்
சின்னஞ்சிறு பார்வைச் சாரல் பட்டு
கெட்டித்துப் படரும் பசலையாய் மருகி
வழிந்தோடுகிறாய் என் நிலமெங்கும்

காதல் மண்டபத்தின் தூண் சிற்பங்கள் தோறும்
உருவமென நிறைந்து கிடக்கிறாய்
யாதொரு முகாந்திரமும் அற்று

ஓர் அடர்ந்த யுகத்தின் மலர்தலில்
சிறு பனித்துளியாகி திரளும் யௌவனத்தை
ருசித்துவிடத் துடித்து  நடுங்கும் மையலாக
தாளமிட்டு உச்சரிக்கிறது உன் காமம்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 7 - 2011 ]


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15459&Itemid=139

குற்றம் சுமக்கும் நவீனப் படிமங்கள்..


வந்துப் போவதில் இருக்கும்
சிரமத்தை பொருட்படுத்தவில்லை
வார்த்தைகள்

காகிதங்களின் முனை மடங்குதலில்
அரூபமாகும் எல்லைகளை
மீறுவதாக குற்றம் சுமக்கின்றன
நவீனப் படிமங்கள்

ஒவ்வொரு புள்ளியோடு
முடிந்துவிட்டதாக வரும் அறிவிப்பு
ஒரு பைத்திய இரவின்
அர்த்த ஊளையிடுதலாகவோ
வால் விடைத்து இருளை நக்கும்
ருசியெனவோ
மாம்சத்தின் ரத்த கவுச்சியென்றோ
தீர்ந்துவிடுகிறது

உடன்படிக்கையோடு கை குலுக்குதல்
சிரமமென பொருட்படுத்துவதில்லை
வார்த்தைகள்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 4 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15405&Itemid=139

ஜன்னல் கடக்கும் காலடிச் சத்தங்கள்..

*
இந்த அறையின் இருளுக்குள்
என் ஜன்னல் கடக்கும்
காலடிச் சத்தங்கள்
மூடிய அதன் கதவின் இடுக்கின் வழியே
மழை நீரைப் போல் வழிந்து
இறங்குகிறது

மெல்ல பரவி என் பாதங்களைத் தழுவி
காதுகளை எட்டும்போது

தெருவின் விசும்பல்
மனவெளியில்
நிம்மதியற்று அலைகிறது
அடித்து ஓய்ந்த பின்
காற்றில் மிச்சமிருக்கும்
ஆலய மணியின்
கடைசி ரீங்காரமாக

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 2 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15390&Itemid=139

வெள்ளி, ஜூன் 24, 2011

சலனப் பாசியின் பசலை..

*
மரண மீன்
செதிலசைத்து நீந்துகிறது
நாளங்களில்
 
மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில்
உடைந்து வாலசைக்கிறது
இதயம் நோக்கி
 
மௌன நீர்மையில்
வேர்ப்  பிடித்து முளைக்கும் சலனப் பாசி
நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத்  
தின்று தீர்க்க
 
வாய் திறந்து திறந்து மூடுகிறது
உயிரின்
நித்திரைத் திரட்டுகள்..
 
***** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 25 - 2011 )

ஒற்றை எழுத்து

*
நீ
அறுதியிட்டு உச்சரித்த
ஒற்றை எழுத்தில்
ரத்தம் கசிகிறது
குத்திக் கிழித்த காயத்தின்
வலியென
இந்த அவமானம்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 19 - 2011 )

உறைந்திடும் துளி ரத்தம்..

*
உன்
துயரத்தின் சாயலை
நகலெடுத்துக் கொள்ளும்படி
உத்தரவிடுகிறாய்

பிடி நழுவும் குறுவாளின்
கூர் முனையில்
உறைந்திடும் துளி ரத்தம்..

ஊடுருவி மீண்ட
துரோகக் கணத்தின் சாட்சியென
துருப்பிடித்துக் காத்திருக்கிறது

உன் 
வரவுக்காக

*******

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 5 - 2011 )

புதிர் நிறைந்த முற்றுப் புள்ளி..

எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள்
அறையெங்கும் படிகிறது
 
திறந்து கிடக்கும் புத்தகத்தின்
வாசிக்க மறந்த பக்கத்தில்
ஒத்துவராத வாக்கியங்களுக்கு நடுவே
சலனமற்று விழுந்து கிடக்கிறது 
புதிர் நிறைந்த முற்றுப் புள்ளியென
ஒரு சாம்பல் துளி
 
அர்த்தங்களுக்கான விளக்கங்கள்
இவ்விரவு நெடுக நிழலென
அசைந்துக் கொண்டே இருக்கிறது
ஜன்னலுக்குரிய மெல்லிய திரைச் சீலையில்
 
மனதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும்  
துரோகங்கள்  
மேலும்  எரிந்து சாம்பலாகிறது
எதையும் மிச்சம் வைக்காமல் 
 
*****  

நன்றி : ( உயிரோசை / உயிர்ம்மை.காம் ) [ ஜூன் - 27 - 2011 ] 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4501