சனி, டிசம்பர் 26, 2009

எழுதிச் சலித்த காரணங்களின் சாதுரியம்..

*

இரவு ஒரு ' நுனி ' தான்
என்று
வாதிடத் தொடங்கியது
என் பேனா முனை..

மறுத்துவிட வேண்டும்
என்கிற தீர்மானத்தோடு...
காகித ஓரங்களை..
விரல்களுக்கிடையே..
சுருட்டியபடி..
கூர் தீட்டினேன் இருளை..

அதன்
கெக்கலிப்பு சத்தம் நீண்டு ஒலித்த
அந்தக் கணங்களை
என் நகங்களுக்குள்
செருகிவிட பிரயத்தனப்பட்டேன்..

எழுதிச் சலித்த..
காரணங்களை...
தன் மூக்கு முனையிலும்
நாக்கின் அடியிலும்..
செதில் செதிலாய் அறுத்து வைத்திருக்கிறது
மிகவும் சாதுரியமாக..

அடித்துச் சொல்லுகிறது...
இரவு ஒரு 'நுனி' தான் - என்று..

இறுதியில்..
ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று..

நுனித் திருகி..
எழுதும் எத்தனிப்பில்..
எப்போதும்
இரவு...
என் மேஜை முழுதும் ஒழுகிப் பரவுவதை..
முன் வைத்து...

****

2 கருத்துகள்: