வெள்ளி, ஜனவரி 01, 2010

இறுதிப் பிரகடனத்தின் கணை..

*

கனவுகளைக் கூடையில் அள்ளித் திணிக்க
முயலுகிறீர்கள்..

கற்பனைகளைக் கொடிக் கம்பிகளில் காயப் போட்டு
மறந்து விடுகிறீர்கள்..

மௌனங்களை சில்லறை மாற்றி
சட்டைப் பைக்குள் வைக்கிறீர்கள்..

மரணங்களை விரல் விட்டு எண்ணியபடி சுலபமாய்
கடந்து போகிறீர்கள்..

கடவுளுடனான ஒப்பந்தங்களை மறு ஆக்கம் செய்து
கையெழுத்து வாங்குகிறீர்கள்..

மாதாந்திர பட்ஜெட் எழுதிய நள்ளிரவை காகிதமென மடித்து
அலமாரியில் பத்திரப்படுத்துகிறீர்கள்..

சக மனிதனுக்குரிய துரோகத்தை முன் பகலிலேயே திட்டமிட்டு
மனைவியிடம் ஒப்பித்துவிடுகிறீர்கள்..

சிரிப்பதாக அகலமாகும் உங்கள் உதடுகளை பொய்கள் கற்பித்து
அதட்டி வைக்கிறீர்கள்..

இவையெல்லாம் இந்த வருடத்தோடு முடிந்துவிட்டதாக
ஒரு பிரகடனத்தை..
வருடத்தின் கடைசி தினத்தில் பதிவு செய்கிறீர்கள்..


****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) ஜனவரி 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2384

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக