செவ்வாய், பிப்ரவரி 22, 2011

இரவின் மஞ்சள் நிறம்..

*
குளிர்ந்த கான்க்ரீட்
நகரின்
நெடுஞ்சாலை பின்னிரவு
சிக்னல் விளக்கிலிருந்து
மஞ்சள் நிறம் வழிந்து
நிதானமாய் பரவுகிறது
சாலை முழுதும்

மசூதியின் உச்சிக் கோபுரத்தில்
பாங்கு ஒலிக்காத
ஒலிப்பெருக்கியில்
இழந்த வரிகளை கொத்திக் கொண்டிருக்கிறது
சாம்பல் நிற புறா ஒன்று

பிளாட்பார சதுரக் கற்கள்
சுமக்கின்றன அழுக்கு மனிதர்களின்
கந்தல் போர்வைக்குள்
காதலையும் காமத்தையும்

ரெண்டாம் ஆட்டம் முடிந்து
களைப்போடு வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்

சிக்னல் விளக்கிலிருந்து வழியும்
மஞ்சள் நிறம்
பெருகுகிறது நகரம் முழுதும்..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 21 - 2011 ]


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13116&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக