சனி, ஜனவரி 16, 2016

குமிழ் உடைய அமிழக் கடவாய்..



*
நரை புரள விரல் நரம்புகள் புடைத்து ஒதுங்கும்
இமைக் கவிழ்ப்பில்
தலைகீழ் தொங்குகிறாய் கலங்கிய பிம்பமாய்

மனமுவந்த சொல்லுக்குள் பெருகி ஓடுகிறது நதி
இலைச் சருகு பற்றும் மணிக்கட்டு உடைந்து கரை வெறுக்கிறேன்

சுழித்திழுக்கும் நீர் வயத்துள் குமிழ் உடைய அமிழக் கடவாய்
என்றொரு அசரீரி
கழுகின் அலகில் கொளுத்துகிறது பரிதியை

உருளும் கற்களின் கரடை உரசுகிற கணு எலும்பின் புடைப்பில் மோதி
அஞ்சி வாய்ப் பிளக்கும் கயலின் விழிக்கோளம்
வர்ணமற்று உகுக்கிறது 180 டிகிரி வளைந்த
உலகின் கண்ணீரை

அழியும் ரேகைகளை புசிக்கும் மஞ்சள் தவளையின்
கீழ்த்தாடை நஞ்சு உப்புகிறது நுரையீரல் சுவரெங்கும்

சுவாசப்பை வீங்கி நிரடிய மணல் துகள் ஈரத்தில்
சற்றை நேரம் வரை நீயிருந்தாய்
தலைகீழ் தொங்கிக் கலங்கும் பிம்பமாய்

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக