*
மேஜையின்
வெறுமையான சதுரத்தில்
நீர்த்துளிகளின்
வெவ்வேறு வடிவங்களில்..
ஒற்றைக் கூரை மின்விசிறியின்
பல இறக்கைகளோடு
சுழல்கிற
என் காத்திருப்பு..
உலர்ந்தபடி துண்டிக்கிறது
மௌனத்தையும்..
அதன் நீர்மையின்
வளைவுகளையும்..
உன் வருகைக்கான
நிமிடங்களை
அலைப்பேசி மூலம் முன்னதாக
அனுப்பிவிட்டாய்..
நிமிடங்கள் மட்டும் வந்துவிட்டன..
தேனீர் கோப்பையின் விளிம்பில்..
இன்னும் கரையாத
சர்க்கரைச் சதுப்பில்..
கால் சிக்கி இனிப்போடு நகர
மறுக்கிறது ஒரு சிறு எறும்பு..
தொலைவுகளைத் துளைக்கும்
என் பார்வையின்..
பனிப் படர்வில்..
கலங்கி நெளியும் பிம்ப நிழலென
யார் யாரோ..
கடக்கிறார்கள்..
சாம்பல் நிறக் கம்பளம் போல்
விரிந்திருக்கும் உன் நிமிடங்களை..!
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 29 - 2010 ]
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2707
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக