திங்கள், மார்ச் 31, 2014

கரையோரம் ஒதுங்கும் கூழாங்கற்களின் சங்கீதம்..

*
நெஞ்சுருகப் பாடுவதற்கான
பாடல் வரிகளை
நான் தொலைத்துவிட்டேன்

ஒற்றைக் கூவலோடு
தன் ரகசியத்தை
முடித்து கொண்டு விட்டது
வனாந்திரக் கிளையில்
முகம் காட்ட மறுத்து அமர்ந்திருக்கும் குயில்

யாரும் தீண்டா நதியில்
விழுந்து இதழ் நனைய இசை சுமந்து
பயணிக்கின்றன
காட்டு மலர்கள்

கரையோரம் ஒதுங்கும்
கூழாங்கற்களின் சங்கீதத்தை
ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது
நதியின் கைகள்

தலைக் குனிந்து
நதியை நுகரும்
நாணல்களின் மூக்கில் சொட்டு சொட்டாய்
தொங்குகிறது நீரின் குரல்

கனம் தாளாத குரல் துளிகளைத்
தட்டிவிட்டு
தென்றலொன்று அபகரித்துக் கொள்கிறது
மொத்தப் பாடலையும்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 30 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6243

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக