புதன், செப்டம்பர் 25, 2013

ராம் என்ற திரைக் கலைஞன் வரைந்த தங்க மீன்கள்..



*
சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது.
அதைப் பற்றி விளங்கிக் கொள்ள, சற்று பின்னோக்கி பயணித்து இங்கு வந்து சேர வேண்டியுள்ளது.

சினிமா -
காட்சியின் வழியே கதை சொல்ல முனையும் ஊடகம்.
அதில் நடிப்பைத் துணைக்கொண்டு நடிகர்கள் தங்கள் உடல் மொழியின் வழியே, கதையில் உலவும் கதாப்பாத்திரங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்த அவசியப்பட்டார்கள்.

அவ்வளவு தான் சினிமாவின் ஆரம்ப நோக்கம்.
தொழிற்நுட்பமும் அதுவரைத்தான் அனுமதித்தது.

பேசா படங்கள் காலக்கட்டத்தில் அதில் கோலோச்சியவர் சார்லி சாப்ளின்.

பேசும் படங்களாக சினிமா, தொழிற்நுட்ப முன்னேற்றத்தில் பரிணாமம் தொட்டபோது, சார்லி சாப்ளினால் அதனை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆயினும் -
அவர் சில பேசும் படங்களையும் எடுத்தார்.
அதில் அவருக்கு திருப்தி உண்டாகவில்லை.

கட் -

சினிமாவுக்குள் உரையாடல்கள் / பேச்சுக்கள் ஒலிக்கத் தொடங்கியபோது, கதை சொல்லும் முறைகள் வேகமெடுத்தன..

நம் தமிழ் சினிமா உலகில் -
நடிகர்களுக்கு உடல்மொழியோடு சேர்ந்து வசன உச்சரிப்புக்கான திறனும் கட்டாயமாயிற்று.
( பாடும் திறன் தனி )

கதாசிரியர்களோடு, வசனகர்த்தாக்களும் உழைக்கத் தொடங்கினர்.

தமிழ் சினிமா வசனங்களால் நிரம்பி வழிந்தது என்றே சொல்ல வேண்டும்..

சமயத்தில் அருவி போலக் கொட்டிற்று.
பின்னர் காட்டாறு போல கரைப் புரண்டு பார்வையாளர்களின் மீதெல்லாம் தெறிக்கத் தொடங்கியது.

அந்தக் காட்டாற்றில் துடுப்பிருந்தும் பயனில்லா பரிசல் போலவே சுழன்றுக் கொண்டு பரிதாபமாய் இழுபட்டது கதைகளுக்கான பின்னணி இசை..

பாடல்கள் கேட்டுப் பழகிய நம் ரசிகர்களுக்காக இயற்றப்பட்ட எண்ணற்ற பாடல்கள் மட்டுமே பெரும்பாலும் இசைக் கலைஞர்களுக்கான அடையாளமாக மாறியது சினிமா இசை என்ற பெயரால்.

சரி..
சினிமா மொழியின் முக்கிய பங்கு..

காட்சிகளை கதையின் உணர்ச்சிக்கு ஏற்றபடி அமைக்கத் தெரிவது.
எங்கே காட்சியின் வழியே கதையை நகர்த்த முடியாமல் ஒரு திணறல் உருவாகிறதோ, அங்கே வசனம் தேவைப்பட்டது..

வசனமும் திகைக்கும் இடத்தில் இசை, குறிப்பிட்ட உணர்ச்சியைத் தூண்டும் விதமாக கதைக்கு உறுதுணையாக இசைக்க வேண்டிய அவசியம் உண்டானது.

இம்மூன்றின்
காட்சி + உரையாடல் + பின்னணி இசை..
இவைகளின் முறையான பங்கை எதிர்நோக்கி காத்திருப்பது தான் சினிமா மொழியின் பிரத்யேக ஏக்கம்.

நிற்க -

ஓர் இலக்கியவாதி தன்னுடைய ரசனையை கற்பனைக் கலந்து வெளிப்படுத்த விழையும்போது அவனுக்கு குறைந்தபட்சம் ஒரு காகிதமும் பேனாவும் அவசியமாகிறது.

தான் கண்டதை, ரசித்ததை, நீட்சியாக உணர்ந்ததை பதிவு செய்து வைக்கிறான்.

காகிதமும் பேனாவும் ஒரு தொழிற்நுட்ப வளர்ச்சி..
கையில் கிடைக்கப்பெற்ற நவீன சாதனம்.

அதுவும் இல்லாத காலக்கட்டத்தில் என்ன செய்திருப்பான்.
வாய்மொழியாகப் பாடியும், கதைகளை சொல்லியும் திரிந்திருப்பான்.

காகிதம் + பேனா போல..
அப்படியொரு வழிமுறைக்கான நவீன சாதனம் தான் சினிமா.

இன்று சினிமாவின் உள்ளே இயங்கும் பல்வேறு பிரிவுகள் எத்தனையோ தொழிற்நுட்ப வளர்ச்சிகளை சுவீகரித்துக் கொண்டு படைப்பாளியோடு சேர்ந்து காடு மலை என்று ஏறி இறங்கி வெயில் பனி புயல் என உடன் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தச் சூழலில் ஓர் இலக்கிய ரசனையாளனின் கைகளில் சினிமா என்னும் சாதனம், காகிதம் பேனா போல மற்றுமொரு கருவியாக கிடைத்தால் என்ன செய்வான்..?

தங்க மீன்கள் என்ற திரைக்கதையை எழுதி இயக்கி திரைப்படமாக நமக்கு போட்டுக் காண்பிப்பான்.

ஆனால் இது நிகழ..
நம் பார்வைக்கு கிடைக்கப் பெற..

இத்தனை மாதங்கள் வெயில் மழைக் கடந்து பயணித்து, தயங்கித் தயங்கி தியேட்டர்களுக்காக அதன் வாசல்களிலும் நின்றுக் கொண்டிருந்திருக்கிறது.

கதைக்கு வருவோம்.
முதலில் கதாப்பாத்திரங்களின் கட்டமைப்பு மற்றும் தேர்வு.

கல்யாணி.
கல்யாணியின் மனைவி வடிவு.
கல்யாணியின் மகள் செல்லம்மா.
கல்யாணியின் அப்பா & அம்மா.

கல்யாணியின் தங்கை ஆஸ்திரேலியாவில் திருமணமாகி குடும்பத்தோடு இருக்கிறாள்.

இவ்வளவு தான் அவன் குடும்பம்.

மற்றபடி -

அவன் வேலை செய்யும் இடம். அதன் சூழல்.
செல்லம்மா படிக்கும் தனியார் பள்ளிக்கூடம். அதன் சூழல்.
கல்யாணி, தன் மனைவி மற்றும் செல்லம்மாவுடன் வசிக்கும் தன் தந்தையின் வீடு. அதன் சூழல்.

மேலும் -

கதை பயணிக்கும் வழித்தடங்கள்..

வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழி..
வீட்டிலிருந்து வேலைக்கு போகும் வழி...
வேலை செய்யும் இடத்திலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழி..
பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் வழி..

நடுவே...
சலனமற்று காத்திருக்கும் ஒரு குளம் மற்றும் அதன் சூழல்.

ஒரு மனிதனின் வாழ்வியலுக்கான காரணமாகிப் போகும் இவ்விடங்கள் கதைக்கான மையக் களம்.

இதன் வெவ்வேறு பருவங்கள்..
பகலிரவுகள் காட்சிப்படுத்தப்பட்ட விதம், நகரும் ஓவியம் போலவே இருக்கிறது.

ஒளிப்பதிவின் பங்கு.. ( Arbhindu Saaraa )
அது கதையோடு பயணிக்கும் பாங்கு.. சொல்லில் அடங்காத பாராட்டுக்குரியது.

இசை ( யுவன் ஷங்கர் ராஜா ) பாடலுக்குரியது மட்டுமல்ல..
திரையில் ஓடும் கதைக்கு பின்னணியாக இழையும் இசையின் லயிப்பை படம் நெடுக உணரமுடிந்தது.
அதன் நுட்பத்துக்குள் போக விரும்பவில்லை.
மனத்தைத் தைப்பதும்.
அத்தையலை பிரிப்பதுமாய்..
காட்சிகளின் வலுவைக் கெட்டித்தும், நெகிழ்த்தியும் மனம் பொங்கச் செய்கிறது.

முழுக் கதையையும் இங்கே சொல்லி என்ன ஆகப்போகிறது..
கிட்டத்தட்ட எல்லோரும் எழுதியாகிவிட்டது.

கதையோட்டத்தில் காட்சிகளுக்குள், இயக்குனர் ராம் அதிநுட்பமாய் கையாண்டுள்ள பல விஷயங்களைக் கண்டு லயித்து பிரமித்ததில் சிலதை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவே விருப்பம்.

சிறு பார்வையிலும் கதை நகரும்.
ஒரு கனத்த அமைதி - அதை உடைக்கும் உரையாடலுக்கான சொற்ப சொற்கள் - அச்சொற்களையும் அதனுள்ளே புதைந்து கிடக்கும் உணர்ச்சியையும் தொந்தரவு செய்யாத இசையற்ற இசையான மௌனமும்..
அர்த்தங்களை அதன் ஏனைய நிறங்களை வர்ணஜாலமிட முயலாத காட்சிகள் ஒன்றின் மேல் ஒன்றாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்சி -

*
முற்றின நடு இரவில், பூசிக் கிடக்கும் நிலவு வெளிச்சத்தில்..
மனைவியோடு ரயிலடியில் தனிமையில் குடும்பப் பிரச்சனையின் மனச்சிக்கலைப் பேசித் திரும்பும் கல்யாணியை

வீடு சமீபித்ததும்..

' நான் முதல்ல போறேன்.. நீங்க கொஞ்சம் பொறுத்து வாங்க.. ( சற்று தயங்கி )
இல்லாட்டி உங்கம்மா.. நான் தான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தேன்ம்பாங்க..'

சைக்கிள் ஹாண்ட் பாரை இறுக்கிப் பிடித்தபடி அவளை நோக்கி ஓர் அழுத்தப் பார்வை.

அப்போது இருட்டில் சன்னமாய் எங்கோ குலைக்கும் நாயை ஒரு கல்லெடுத்து விட்டெறிகிறான்.
அது கல்லடிபட்டது போல இன்னும் வேகமாய் குலைப்பது கேட்கிறது.

' அய்யோ... நாயை அடிக்காதீங்க.. அது வந்து கடிச்சு வச்சிரப் போகுது..'

' அப்போ..? நான் வேற யாரத்தான்டி அடிக்கிறது..? ' -

நிலவொளியில் இயலாமையின் நிறம் பூசி இருள்கிறது கல்யாணியின் முகம்.

******

அதே சூழலில் அவர்கள் திரும்பி வரும் வழியில் கல்யாணியும் வடிவும் பேசிக்கொள்ளும் உரையாடலில்..
' பணம் இல்லாத கஷ்டம்தான்டி எல்லாமே..'

' பணம் இல்லாம இருக்கறது கஷ்டம் இல்லைங்க.. அது இருக்கிற இடத்துல, இல்லாம இருக்கிறது தாங்க கஷ்டம்... '

******
இன்னொரு காட்சியில் -
நண்பனிடம் கடன் கேட்க அவன் வீட்டு வாசலில் நண்பன் வரும்வரை காத்திருந்து, வந்ததும்  அவனைச் சந்தித்து பிரச்னையை சொல்லி விட்டு நம்பிக்கையோடு கிளம்பிவிடுகிறான் கல்யாணி.
அப்போது நண்பனின் மகன் தன் தகப்பனிடம் சொல்லுகிறான்.
' அந்த மாமாவை வீட்டுக்குள்ள வரச் சொன்னா வரலப்பா...'
' கடன் கேக்குற மாமா எல்லாம் வீட்டுக்குள்ள வர மாட்டாங்கப்பா.. '
அந்த பதிலைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மறுநாள் எத்தனை மணிக்கு வரணும்னு கேட்க மறந்ததை சொல்ல வருகிற கல்யாணி  அதைக் கேட்டுவிட, அவன் முகத்தில் படரும் அவமானமும் இயலாமையும் அப்படியே நமக்குள் ஊடுருவி ஓடுகிறது..
நண்பன் மறுநாள் வரவேண்டிய நேரத்தைச் சொல்லுகிறான்..
வீட்டுக்கு முன்புறமிருக்கும் முற்றவெளியைத் தாண்டி வாசலாக அகன்று நிற்கும் இரும்புக்கம்பி கேட்டின் அருகில் தான் உரையாடல் நடந்துக் கொண்டிருக்கிறது.
அந்த இரும்புக்கம்பி கேட்டைப் பிடித்தபடி நிற்கும் கல்யாணி, சரியென்று தலையசைத்து விருட்டென்று விலகி நடக்க...
கேட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் சிறிய பூட்டு நடுங்குகிறது.
மொத்தக் காட்சியும் ஒரு படிமம்.. அதில் நடுங்கும் பூட்டு ஒரு Metaphor.
இது போல படத்தில் நிறைய படிமங்களையும் குறியீடுகளையும் காட்சிக்குள் பயன்படுத்தியிருக்கிறார் ராம்.

நம்பிக்கையோடு சைக்கிளில் வீடு திரும்பும் கல்யாணியை காட்டும் Frame -ல் Left Edge -ல் சாலையோரம் சிறு செடியின் மெலிந்த கிளையில் பழுப்பு நிற சருகுகளோடு, அதன் முனையில் துளிர்த்த இலையொன்றும் இருக்கிறது.

*
பள்ளியில் நடன ஒத்திகையின்போது தன் டீச்சரால் அவமானப்படுத்தப்படும் செல்லம்மா தலைத் தொங்கி நிற்கிறாள்..
அடுத்த ஷாட்டில் -
நண்பனின் வீட்டுக்கதவில் பூட்டுத் தொங்குகிறது.
அதை கொஞ்சம் டாப் ஆங்கிளில் கம்போஸ் பண்ணியிருக்கும் விதம், திறக்கக் காத்திருக்கும் பூட்டு ஒன்று தலைத் தொங்கிக் கிடப்பதைப் போல இருக்கிறது..
அந்த பூட்டின் மீது இருக்கும் Hitler என்ற எழுத்துக்கள்.. மற்றும் 7 Levers என்ற எழுத்துக்கள்.. எதேச்சையாக அமைந்ததாக எப்படி எடுத்துக் கொள்வது..
கட்ட வேண்டிய பீஸ் பணம் கடனாகக் கிடைக்க..
ஏழு மலை ஏழு கடல் போல ஏழு லிவர்கள் கொண்ட பூட்டுத் திறக்க காத்திருக்கத் தான் வேண்டும்..
அதே சூழலில் ஒரு ஷாட் வருகிறது.
முதிர்ந்த இலைச் சருகொன்று மண்ணில் கிடக்கிறது. அதன் மீது வெயில் சொற்பமாய் விழுந்திருக்க.. அதன் மீது சிறு எறும்புகள் ஊறுகின்றன..
அப்படிக் காட்டப்படும் காட்சியின் மீது சட்டென்று குறுக்கே இரண்டு கைகள் வந்து உள்ளங்கைகளை கோர்த்துக் கொள்கிறது.. அது கல்யாணியின் கைகள்..
காத்திருப்பின் பொறுமையை.. அதன் வெக்கையை,
அதன் மீது நகரும் நேரத்தை / காலத்தை..
சில நொடிகள் மட்டுமே வந்து போகும் ஷாட்களில் அத்தனை நேர்த்தியாக வைத்திருக்கிறான் ராம் என்ற திரைக்கலைஞன்.

*
குளத்தை நோக்கி இறங்கும் கீழ்ப்படிக்கட்டுகளில் செல்லம்மாவும் அவள் தோழியும் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். செல்லம்மா தன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் கவரிலிருந்து மீன்களுக்கு பொறியைத் தூவிக் கொண்டிருக்கும்போது அதட்டும் குரலோடு அவளின் தாத்தா அங்கு வந்துவிடுகிறார்..
திட்டியபடியே படிகளில் இறங்கி வரும் தாத்தாவுக்கு பயந்தபடியே...
அதே நேரத்தில் கவரிலிருக்கும் பொறிகளை வேக வேகமாய் குளத்தில் அள்ளி வீசும் செல்லம்மாவின் முகபாவனைகள் அத்தனை நுட்பமாய் கேட்டு வாங்கப்பட்டிருக்கிறது.

*
எவர்சில்வர் பாத்திரங்களுக்கு பாலீஷ் ஏற்றும் வேலை செய்யும் கல்யாணி, வேலை முடிந்ததும், வேலையிடத்திலிருந்து செல்லம்மாவை கூட்டிவர ஸ்கூலுக்கு சைக்கிளில் கிளம்புகிறவன்.. தன்னுடைய முகம், கழுத்து, கைகளில் பரவிக் கிடக்கும் அந்த சில்வர் துகள்களை துடைக்காமல் அப்படியே கிளம்புவான்.
செல்லம்மாவுக்கு, அவளைப் பொருத்தவரை தன் வகுப்பு நண்பர்களிடம் சொல்லிவைத்திருப்பது..
' என் அப்பா ஒரு சில்வர் மேன் '
அதை நிஜமென்று நிரூபிக்க எப்போதும் ஸ்கூலுக்கு அந்தக் கோலத்தில் போய், மகளை சந்தோஷப்படுத்த கல்யாணி தவறுவதே இல்லை.
அவர்கள் இருவருக்குமான தனித்த உரையாடல் இடமே அந்தக் குளம் தான்.
அங்குக் குளித்து தன் மீதிருக்கும் சில்வர் பாலீஷ்களைக் கழுவி... செல்லம்மாவின் அப்பாவாக கரையேறும் கல்யாணி, மகளோடு வீடு கிளம்பும் அழகிய முனை அது.
இனி இத்தோடு, இந்த ஊரில் அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே வேலையான சில்வர் பாலீஷ் வேலை இல்லை என்றாகும்போது..
கடைசியாக செல்லம்மாவுக்காக என்று தன்னுடைய முதலாளியிடம் அனுமதி கேட்டு மிச்சமிருக்கும் பாத்திரங்களுக்கு சில்வர் பாலீஷ் ஏற்றி சில்வர் மேனாக கிளம்பும் கல்யாணி..

ஸ்கூல் வாசலில் தன் அப்பாவின் கார் நிற்பதைப் பார்த்துவிட்டு..
அவரை நெருங்கிப் போய் பேசுகிறான்.
அவர் இவனைத் திட்டுகிறார். கார் தான் செல்லம்மாவுக்கு Comfort என்கிறார்.
அதைச் செல்லம்மா வந்து சொல்லட்டும் என்கிறான் கல்யாணி..
செல்லம்மா வந்து.. கனத்து கிடக்கும் தன்னுடைய புத்தகப் பையை தாத்தாவிடம் கொடுத்துவிட்டு, அப்பாவோடு சைக்கிளில் ஏறிக் கொள்கிறாள்..
ஒரு வழிப்பாதையில் சைக்கிளில் கல்யாணியும் செல்லம்மாவும் பேசிக்கொண்டே போகிறார்கள்..
பின்னால் கார் வந்துக் கொண்டே இருக்கிறது.
' தாத்தாவும்... உனக்காகத் தானே கார் கொண்டு வந்திருக்காரு... அவரோடு கார்ல போயிடு செல்லம்மா... அவருக்கும் சந்தோஷமா இருக்கும்ல..? '
' சரிப்பா...' - என்கிறாள் சிரித்தபடி செல்லம்மா..
கார் அவர்களைப் பின்னிருந்து நெருங்குகிறது. கல்யாணி சைக்கிளை ஓரமாய் நிறுத்துகிறான்.
செல்லம்மா இறங்கி காரை நோக்கி ஓடி, கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்துக் கொள்கிறாள்.
கல்யாணியின் அப்பாவின் முகத்தில் பெருமிதம்..
அவனை நோக்கிச் சொல்கிறார்..
' நான்.. சொல்லல.. அவளுக்கு கார் தான் Comfort - ன்னு '
' சரிப்பா... ' - என்கிறான் சிர்த்தபடி கல்யாணி.
கார் நகர்ந்துவிடுகிறது.
அந்த இரண்டு ' சரிப்பா..' -க்களுக்கும் நடுவே நீண்டுக் கிடக்கும் தலைமுறை இடைவெளியின்.. வெவ்வேறு அர்த்தப் புரிதலை..
வெகு அழகாக ஒன்று போலவே இருக்கும் Dialogue Modulation -ன் வித்தியாசத்தில் வெளிப்படுத்துகிறார் ராம்.

*
குளத்தில் கடைசியாக குளிக்கும் சில்வர் மேன். உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில்வர் துகள்கள் அவன் உடலிலிருந்து விடுபட்டு  குளத்து நீரில் மெல்ல மெல்லக் கரைந்து மிதக்கிறது..
   
அந்த வேஷம் களைவதில் வாழ்வின் நிஜம் படியேறுகிறது.



*
ஸ்கூலில்  இருக்கும் கடிகாரத்தில் அடைப்பட்டுக் கிடந்து கூவும் மரக் குயில்.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியே வந்து இந்த உலகைப் பார்த்துவிட்டு உள்ளே போய்விடுவது.

கல்யாணியின் வீடருகே மரத்திலிருந்து முகம் காட்டாமல் கூவும் நிஜக் குயிலின் குரல்..
அவமானங்களோடு அவ்வீட்டில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் மரத்துப் போன உணர்வுகளோடு செல்லம்மாவோடு அடைப்பட்டுக் கிடக்கவேண்டிய கல்யாணியின் மனைவி..

*
வீட்டை விட்டு வெளியேறி கொச்சினில் வேலைப் பார்த்தபடி ஒரு படகுத்துறையை ஒட்டி இருக்கும் சிறிய அறையில் தங்கிக் கொண்டு அல்லல்படும் கல்யாணி..

கிறிஸ்துமஸ் தாத்தா போல வேறொரு குரலில் செல்லம்மாவுடன் பேசும் காட்சி..

*
ஓர் இரவு..
அப்பாவோடு செல்போனில் நிலவு வெளிச்சத்தில் சின்ன மரத்துண்டு ஊஞ்சலில் ஆடியபடி பேசும் செல்லம்மா, பேச்சில் நிராசையுடன் ஊஞ்சலை விட்டு இறங்கிப் போக..

ஆடிக் கொண்டிருக்கும் வெற்று ஊஞ்சலின் 'க்ரீச்' சத்தத்துடன் அந்த ஷாட் முடிகிறது.

அடுத்த ஷாட் -

விடிந்த நிலையில் படகுத்துறைக் கட்டிடம் காட்டப்பட..
சிறு படகுகள் நீரில்  மெல்ல அசைந்துக் கொண்டிருக்கும் அதே ' க்ரீச்' சத்தத்துடன்  காட்சித் தொடங்குகிறது.

இரண்டு சத்தங்களும் ஒன்று போலவே...
ஆனால்..

காலம் வேறு.. இடம் வேறு..
மனநிலையை மட்டும் இரண்டு சத்தங்களும் இணைக்கும் விதமாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

*
அந்தக் கட்டிடத்தில் BULIDING என்ற எழுத்துப் பிழையோடு ஒரு வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது.
அதில் தான் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறான் கல்யாணி.

*
செல்லம்மா தன் தோழிக்கு.. 'எவிட்டா' - என்ற கதையை புனைந்து சொல்லும் இடம் அற்புதம்.
அவள் ஒழுங்காகப் பரீட்சைக்கு படிக்கவேண்டும் என்று அம்மா அவளை அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறாள். வீட்டின் பின்புறமாக அந்த அறையின் ஜன்னல் ஓரமாய் வந்து நிற்கிறாள் செல்லம்மாவின் குட்டித் தோழி.
வெளிப்புறமிருந்து அவள் அந்த ஜன்னலைத் திறந்து விடுகிறாள்..
உள்ளேயிருந்து செல்லம்மா அவளுக்கு கதைச் சொல்லுகிறாள்.. தோழி சுவாரஸ்யமாய் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
திறந்திருக்கும் ஜன்னல் கதவுகளின் உட்புறத்தில் செல்லம்மா சாக்பீஸால் வரைந்து வைத்திருக்கும் குட்டிக் குட்டி ஓவியங்கள் இருக்கின்றன..
அவைகளை உற்று நோக்க முடிந்தால்... அதில் ஒரு கதை இருக்கிறது.

*
படத்தில் மூன்று வெவ்வேறு சப்தங்களை இயக்குனர் முக்கியமான வசனங்களுக்கு நடுவே குறுக்கீடாக பயன்படுத்தியிருக்கிறார்.
1. நடு இரவில், ரயிலடியில் கல்யாணியும் மனைவியும் பேசிக் கொண்டிருக்கும்போது - திடீரென்று தடதடவென கடந்து போகும் ரயிலும் அதன் சத்தமும்..
2. கல்யாணி கொச்சினில் படகுத்துறையில் வேலையில் இருக்கும்போது, மனைவி ஊரிலிருந்து அவனோடு பேசும்போது தொலைவில் நகர்ந்தபடி குறுக்கிடும்.. கப்பலொன்றின் ஹாரன் சத்தம்..
3. ஏர்போர்ட்டில் தங்கையை செக்யூரிட்டி யூனிபார்மோடு எதிர்க்கொள்ளும்போது.. அவர்களிடையே நடக்கும் உரையாடலுக்கு குறுக்கீடாக பறந்து போகும் விமானமொன்றின் சத்தம்..
இம்மூன்றையும் கல்யாணியின் உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெவ்வேறு காலக்கட்டத்தின் பிரதிபலிப்பாக அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப கையாளப்பட்டிருப்பதை ரொம்பவும்  யோசிக்க வைத்தது.

மட்டுமல்லாமல்..
ரயில் - கப்பல் - விமானம்..

மூன்றும், மனிதர்களை / எண்ணற்ற உறவுகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பயணம் வழியே கடத்தும் தன்மையைக் கொண்டவை..
*
திரைக்கதையின் மையப் பகுதியில்..
மழையைத் தருவிக்கும் பழங்குடி மக்களின் இசைக்கருவி
வோடபோன் நாய்க்குட்டி
எவிட்டாவின் தங்க மீன்கள்
இம்மூன்றின் முனைகள் இணையும்போது..

பார்வையாளனுக்கு மனத்தில் எழும் ஓர் அரூப  மலை வடிவத்துக்குள்ளே..
மடிந்து கிடக்கும் ஏராளமான பள்ளத்தாக்குகளிலும் உயரங்களிலும் ஏறி இறங்கி மகளின் நம்பிக்கைக்காக அலையும் கல்யாணி என்கிற அந்தத் தகப்பன்..
இன்றும் தன் கற்பனைக் கதைகள் மூலம் மகள்களின் கனவுகளில் வண்ணம் தீட்ட நினைக்கும் ஒவ்வொரு அப்பாக்களின் திரைப்பிம்பம்..

*
இப்படி - சொல்லிக் கொண்டே போகலாம்..
இன்னும் கூட கண்களுக்கு சிக்காத பல படிமங்களை..
காட்சி + உரையாடல் + உடல் மொழியின் வழியாக தன்னுள் உள்ளடக்கி வைத்திருக்கிறது தங்க மீன்கள்..
இறுதியில் கைவிடப்பட்ட சிறு கரடிபொம்மை குளத்தின் மீது மிதந்தபடியே பயணிப்பதைப் போல மனத்தைச் செலுத்த கண்களுக்கு ஒரு தூண்டில் தேவைப்படலாம்.
இன்னொரு முறை பார்க்கவேண்டும்..
( எழுத்தாளர் வண்ணதாசனின் / கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணி என்ற கல்யாணசுந்தரம்.)



இப்படியொரு திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் இயக்குனர் ராம்க்கு ப்ரிய நேசங்கள்..
தங்கமீன்கள் பெறப் போகும் அத்தனை விருதுகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

-
ப்ரியங்களுடன்
இளங்கோ

புதன், மார்ச் 13, 2013

பிரியத்தின் சருகு..

*
சற்று முன் வரை நீடித்திருந்தது
நீ உச்சரித்த உன் சொற்களின் நறுமணம்

இந்தப் புல்வெளியைத் தேர்வு செய்தது நான் தான்
காத்திருப்பதற்கான நாற்காலிகள் இங்கு இல்லை

ஒவ்வொரு இலையாக உதிர்த்துக் கொண்டிருக்கும்
மரங்களுக்கு கடைசி வரை ஒன்று மட்டும் புரியவேயில்லை
பிரியத்தின் சருகை
இவர்கள் ஏன் பூங்காவிலேயே விட்டுப் போகிறார்கள்

பதில் சொல்லும்படியான தனிமை என்னுடையதல்ல

சொற்ப நிழலும் பரவலாய் வெயிலும்
சிதறிக் கிடக்கும் துணுக்கு நிலப் பரப்பில்
வெப்பமூறி ஆவியாகும் கண்ணீர்த் துளிகளை
என்ன செய்ய

மழை பொய்த்த எனது தாழ்வாரத்தில்
சற்று முன் வரை நீடித்திருந்தது
நீ உச்சரித்த உன் சொற்களின் ஈரம் 


*****

 நன்றி : ( உயிரோசை / உயிர்ம.காம் ) [ மே - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5569