மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
*
குவியும் பார்வையின்
கீழ் நிழலில்..
துளி ஈரப் புன்னகை முனை.
மனசின் வேர்க்காலில்...
சிக்கும்
வார்த்தையின் மௌனம்..
பொருள் தேடியலையும்
மூச்சுக் காற்றில்..!
ஒற்றை எழுத்தில்
வளையும் உதடுகளில்..
காதல் படிமம்.
************
நிலா இல்லாத வானம்..
விளக்கு இல்லாத படுக்கையறை..
நிழல் போல சூழும்..
உன்னருகே.. என் ஞாபகம்.
சொல்..!
மூட மறுக்கும் இமைகளுக்குள்ளே..
நான் எப்படி வரட்டும்.?
பூக்கள் சுமந்தா..?
நட்சத்திரம் பறித்தா..?
***********
ஒரு நீண்ட
கலந்துரையாடலுக்குப் பிறகு...
ஒரு
அழகான மௌனம் என்பது..
நமக்கிடையே...
மேலும் ஒரு அழகு தான்..!
நீ
மெதுவாக
கண்... துஞ்ச..
தென்றல் தழுவும்
அழகாய்...
உன்
இமை இரண்டை.
**********
நீயெனக்கு எழுதிய
கடைசிக் கடிதத்தில்..
ஒரு முத்தம் இருந்தது.
கொஞ்சம் கண்ணீர்த்துளி இருந்தது.
ரயில் நிலையத்தில்..
என்னை விட்டு ...
பிரிந்தபோது...
ஏதோ சொல்லத் துடித்த
உன் உதட்டில் என்ன இருந்தது..?
நித்திரைத் துளிர்க்க மறந்த..
விழிப் பூக்களில்..
வெளிச்சத்தின்
கரு ஒன்றை..
தன் ஆழத்தில்
புதைத்து வைத்திருக்குமோ
இந்த இரவு..?
நொடிகளை விழுங்கி..
மயங்கும்.. நிமிடங்களைப் பருகி..
இன்பத்தில்.. மிதக்கிறது..
' காலம்.'
********
துயர நரம்புகள் அறுபட்ட
ரத்த நாளங்களில்..
சிவப்பாய்க் குமிழ் விடுகிறது..
ஒரு அவஸ்தை நினைவு..
அதில்..
எப்போதும்
நீ -சிரித்துத் தொலைக்கிறாய்.
மாடி சுவற்றின்
ஏதாவதொரு இடுக்கில்..
திடீரென்று
முளைத்து விடும்
சிறுச் செடியை போல...
முளைத்து விடுகிறது..
உனக்கான கவிதை ஒன்றும்..!
இசை மீட்டும்
உன் விரல்களுக்கு..
முத்தம் ஒன்று
தருவதற்கு..
உன் பெயரை உச்சரித்த
நொடியில்..
இசை.. நின்று விட்டது.
*********
ஏதோ ஒரு சாயலில்..
மீண்டும் உருக்கொள்ளும்
கனவுகளில்..
புதுப்பித்துக் கொள்கிறேன்..
எப்போதோ நீ சொன்ன
வார்த்தைகளை...
பகிர்ந்துக் கொள்ளும் தொலைவில்
நீ - இல்லாதபோதும்.
கண்ணீரின் துளி...
அதன் நிழலின் ஆழத்தில்...
புதையுண்ட வாழ்வின் ஈரம்..
துடைப்பதற்கு நீளும்
விரல்களுக்குப் புரிவதில்லை...
எழுதாத 'வரிகள்' சில மிதக்கின்றன.
என் டைரியின்
மௌனப் பக்கங்களில்..
உன் புன்னகையும்...
ஈரமற்ற உன் முத்தங்களும்..
ஏராளம்..!
விரல்களுக்கு சிக்காத
அந்த.. அர்த்த வரிகள்..
என்
கண்களுக்கு மட்டும் சொந்தம்..!
குளிர் காய
நிலவு மட்டும் போதுமா?
நட்சத்திரங்களை
அனுப்பி வைக்கிறேன்...
உன் கனவுகளும்
கொஞ்சம் -
வெளிச்சமாய் இருக்கட்டும்..!
நான்
நடந்து நடந்து தொலைத்த
பாதைகளும்...
இன்னும்.. தொலைக்காத
என்னைத் தேடித் தவிக்காமல்..
எங்கோ ஒளிந்துக் கிடக்கக்கூடும்
இந்த நகரமெங்கும்..!