சனி, பிப்ரவரி 14, 2009

ஒரு சனிக்கிழமை காலை...

*

ஐந்து நாட்களின் 'அசதி..'
என் படுக்கை அறையின்..
மேற்கூரையில்...
மின்விசிறியாய் சுழல்கிறது..

கணவர் ஊரில் இல்லை..
குழந்தைகள் இன்னும் எழவில்லை..
கட்டிலின் மிச்சப் பகுதி..
பாலைவனம் போல் நீள்கிறது..

கொண்டை அவிழ்ந்த..
கூந்தலின் எரிச்சல்..
பிடரியில் வியர்க்கிறது..

ஜன்னலின் ஊடே...
கண்ணாடிக் குழாயாக..
ஒழுகும் வெய்யிலில்..
மேஜையில் நனையும்...
என் கைக்கடிகாரம்..

சுவர் ஆணியில்..
சிறைப்பட்டுத் தொங்கும் என்...
கல்யாணப் புகைப்படத்தில்...
வலைப் பின்னும் சிலந்தி...

சோம்பல் முறிக்கும்.. மனசுக்கு இதமாக...
பீங்கான் கோப்பை யொன்றில்..
என் பால்யத்தைத் தூவி..
சூடாகத் தளும்பும் 'காப்பி' கொண்டு ..
வருவாயா அம்மா...?

****************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக