செவ்வாய், டிசம்பர் 28, 2010

ஒரு மழை நாளுக்குரிய பருவ மேகங்கள்..

*
நேற்றைய பயணமாகிப் போனாய்
நீ
கோடிழுத்துப் போன
என் பாதையில்

ஒவ்வொரு
சின்னஞ்சிறிய கற்களும்
பூக்களை சுமக்கும் செடிகளை
அண்டுகின்றன
பெருவிரல் நகம் தெறித்து

திரும்பும் எண்ணமற்று நீளும்
காட்சிகளை ஓவியமாகத் தீட்டி
வைத்திருக்கிறாய்
உன் தனிமை கேன்வாஸில் அதன்
முனைகளில் சட்டம் ஏற்றி

நம் உட்சுவர்களின் பூச்சை
உப்பச் செய்யும் ஒரு மழை நாளுக்குரிய
பருவ மேகங்களை
இவ்வழியெங்கும் கவிழச் செய்கிறேன்

இரவின் குடுவையிலிருந்து
அது சொட்டத் தொடங்குகிறது
பனித் துளியென
உன் ஜன்னல் தேடி

****



நீங்குதல் குறித்து..

*
நீங்குதல் குறித்து
எழுதிக் கொண்டிருக்கும் இரவொன்றின்
அசையும் நிழலை
பேனாவில்
ஊற்றிக் கொண்டிருந்தது
உன் பார்வை

வெறுப்போடு கவிழ்த்த பிறகும்
புகைப்பட சட்டக விளிம்பின் வழியே
கசிந்த உன் பிம்பம்
இம்மேஜை முழுதும் பரவி
கண்ணாடி மீது மெழுகுகிறது
உன்னை

நீங்குதல் குறித்து
பிறகெப்போதும் எழுத முடிவதில்லை
சென்ற கணம் வரை..

****

வட்டத்துள் மௌனிக்கும் எண்கள்..

*
ஆள் இல்லா
கதவுடைய
வீட்டின் எண்கள்

தன்
வட்டத்துள் மௌனமாய்
சேகரிக்கின்றன

வந்து திரும்புவோரின்
எண்ணிக்கையை

****

எழுதப்படாத மின்மினிப் பூச்சிகள்..

*
வழித் தவறிய
கவிதைக் காட்டின்
அடர்ந்த இருளில்
பேனாவைக் கடத்திப் போகின்றன
மின்மினிப் பூச்சிகள்

சிறிது வெளிச்சம் போர்த்திய
மங்கிய வளைவொன்றில்
எதிர்ப்பட்ட
உயரமான மரமொன்றின்
கிளைகள் தோறும்
பூத்துத் தொங்குகிறது

இதுவரை எழுதப்படாத
கவிதைகள்
யாவும்

****

பகல்களை அபகரிக்கும் சிகப்புக் கோப்புகள்..

*
பிரியம் தளும்பும்
பகல்களை அபகரித்துக் கொள்கிறது
மேஜை மீது அடுக்கப்படும்
சிகப்புக்
கோப்புகள்

பிரித்துப் படிப்பதற்குரிய
தருணங்களைக் காது மடக்கி
கையெழுத்திடும்போது

கனத்து விடுகிறது
ஒரு
மௌனம்
அதி
நிரந்திரமாய்

****


மதிற்ச் சுவர் விளிம்பு..

*
கூர்க் கம்பிகள்
செருகிய
மதிற்ச் சுவர் விளிம்பிலிருந்து
குத்துப்பட்டு வழிகிறது
கரிய நிழலென
மஞ்சள் வெயில்

***

யாதொரு..

*
துயர் பெருகும்
மன வெளியில் கால் ஓய
தேடுகிறேன்
ஓர்
கனவை

பின்
செதில் செதிலாக
மூச்சுத் திணறி
வெளியேறுகிறது

யாதொரு
நிபந்தனையோ
கோரிக்கையோ ஒப்புவிக்கும்
இடமற்று

****

கண நேரம்..

*
நீங்கள்
அப்படி ஒப்புக் கொள்ளும்போதே
கொஞ்சம்
மரணிக்கிறீர்கள்

ஆட்படும் கண நேர
தலையசைப்பில்
நீர்த்துப்
போகிறது

இருப்பதாக நம்பப்படும்
வைராக்கியம்

****

புலரும் கானல்

*
கலங்கும் கண்களில்
புலரும்
கானலில்
நீந்தும் மீன்கள்
பொய்..

****

பார்வை மட்டுமல்ல..

*
பற்றி எரிவது
பார்வை
மட்டுமல்ல
சகலமும்..

****

இறுமாப்பில்..

*
நீ
கன்னங் குழிய
சிரிக்கும்
இறுமாப்பில்

சுக்கலாய் உடைகிறது
தருணம்

****

ஒத்திகை

*
என்
மரணத்தை
ஒத்திகைப் பார்க்கிறது

உன்
மௌனம்

****

ஆரஞ்சு நிறக் காலடி நிழல்..

*
பனி மெழுகிய
ஆரஞ்சு நிறத்தை உமிழும்
தெருவிளக்கின்
கீழ்

காத்து
நிற்க நேரும்
காலடி நிழலில்

உதிர்ந்துக் கிடக்கின்றன
நிமிடங்கள்

****

கொஞ்சமாய்..

*
இரவோடு அயர்தலை
கனவின் விளிம்பில் நின்று
கொஞ்சமாய்
பிய்த்துக் கொள்கிறாய்

ஒரு
துள்ளலோடு
புரண்டுக் கொள்கிறது

தூக்கம்..

****

நிழல் நெளிதல்..

*
அழைத்துச் செல்கிறாய்
முடிவற்று
நீளும்
மணல்வெளியில்

நிழல்
நெளிதலில்
ஒளிந்துக் கொள்கின்றன
இதற்குப் பிறகும்

கால் தடங்கள்..

****

நீர் விளிம்பில்..

*
நம்
சொற்கள் பொங்கிட

கொஞ்சங் கொஞ்சமாய்
திரள்கிறது

நீர் விளிம்பில்
மஞ்சளாய்
நிலவு

****

கரையில்..

*
ஆழ்கடலில் மிதக்கிறது
என்
அலை..

கரையில்..

சொற்ப நுரைகளுடன்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ..

***

மெத்தென்று உதைப்படும் பூமி

*
இதழ் குழிய சிரிக்கிறாய்
அரிசிப் பல் முளைக்கும் முன்
மொழியைக் குழைக்கிறாய்
பால் எச்சிலில்

தத்தக்கா பித்தக்காவென்று
உதைப்படும் கால்களால்
மெத்தென்றாகிறது
கொஞ்சம் பூமி

பெயர் சொல்லியழைத்ததும்
சட்டென்று திரும்பிப்
புன்னகைக்கிறாய்

பெயர் சொன்னதால் மட்டும் தானா...!

****

பட்டென்று உடையும் கண்ணாடி வெளி..

*
பால் குடிக்காமல்
விளையாட்டுக் காட்டும்
குழந்தையை மடியில்
இறுத்தி..

'ஏய்..!' - என்று அதட்டுகிறாய்

அதிர்ச்சியில் உறையும்
அதன் கண்களில்
பட்டென்று உடையும்
அவளின் கண்ணாடி வெளியை

எப்படி
உனக்கு
புரிய வைக்க..

****

மேலும்..

*
'போய் வரவா ?'
'போய் வா '

மனசில்லாமல்
மேலும் நிற்கிறாய்

கடந்து போய்க் கொண்டேயிருக்கிறது

நம்
தருணங்கள்

****

நட்சத்திர இருளில்..

*
மல்லாந்து படுத்தபடி
நட்சத்திர
இருளில்
வானெங்கும்
நகத்தைக் கடித்துக் கடித்து
விடியலில்
இரவைத் துப்புகிறாய்

****

மெட்ரோ கவிதைகள் - 89

*
எவ்வளவு தீனி
எவ்வளவு தீனி

பயணிகளை மேயும்
ஷேர் ஆட்டோக்கள்

உறுமலோடு
உறுமலோடு

உறுமிக் கொண்டே எவ்வளவு
தீனி

நெருங்கி நெருங்கி நெருக்கியே
அருகில்
நுகரும்
மஞ்சள் மிருகங்கள்..

****

உள்ளங்கையிலிருந்து..

*
தொடர்ந்து
அடுக்கப்படும் சந்தேகங்களைப்
பிதுக்கி
வழிகின்றன

அடித்து அனுப்பப்படும்
உள்ளங்கையிலிருந்து
ஏராள
சத்தியங்கள்

****

அவசரமாய் பெய்த பின்னிரவு..

*
நதிக்கரை
மண் குழைவில்
குழிந்த உன் கால் தடத்தில்

தேங்குகிறது
அவசரமாய் பெய்த மழைச் சாரல்

பின்னிரவில்
அதில்
மிதக்க விடுகிறேன் நம்
நட்சத்திரங்களை

****

கரைந்து ததும்பும் கோப்பை இரவு..

*
திறக்கப்படாத
கதவுகளின் மறுப்பக்கத்தில்
கரைந்து ததும்பும்
இரவை

ஒரு கோப்பை வழிய
ஏந்திக் கொண்டு உலா வரும்
மௌனத்தின்
நிழல் ஒன்று
நீண்டு கிடக்கிறது

நடைபாதை வராண்டாவெங்கும்
வாசற்படியைத்
தொட்டபடி..

*****

துயரம் உடையும் கூர்ப் பிசிர்..

*
இந்த உடலின் உயரத்திலிருந்து
வீழ நேர்கிறது
ஒரு துயரம்

அது
உடையும் தருணத்தின்
கூர்ப் பிசிர்களில் கசிந்தோடுகிறது
கருணையென்றோ
கண்ணீரென்றோ

ஓர்
அபத்தம்..

****

திங்கள், டிசம்பர் 27, 2010

அழுத்தம் புரியாத அளவுகள்..

*
ஒரு
விடைபெறுதலை
இதைவிட லாவகமாய்
நாசூக்காய்
சொல்லிவிட முடியாது தான்

உன் கைக் குலுக்கலின் அழுத்தம் புரியாமல்
அளவுகளை மீறும்
இதயத் துடிப்பில்

இக்கணத்தைத் துருத்திக் கொண்டு
நொண்டுகிறது
நிமிட முள்

****

வாசற் கல்..

*
நாலு துண்டுகளாக
இரண்டுக்கு இரண்டடி
தெரு வாசற் கல் மீது

நான்காய்
உடைந்திருந்தது

கோலமும்

****

குமிழ் பிழை..

*
இழைப் பிரியும்
பெருமூச்சின்
சிறு பிழையில்

இதயக் குழாய் விம்மியொரு
குமிழ் அடைத்து

அடிக்கோடிடுகிறது உயிர்..

****

மௌனத் துணையாக சுழலும் மின்விசிறி இழை..

*
ஊசி முனையென
பெய்யும் இப்பனி இரவில்
உன்
நினைவில் மருக மருக..
விம்முகிறது இதயம்

சுரக்காமல்
மார்க் கட்டிக் கொள்கிறது
காமம்

ஜன்னல் வழி
மென்காற்றுப் பட்டு
மௌனத் துணையாக
சுழல்கிற
மின்விசிறி இழைப் போல்
அசைகிறது

உன் மீதான காதல்..

****

காலடியில் நொறுங்கிக் கிடக்கும் சொற்களின் அர்த்தம்..

*
வரும் வரை
காத்திருப்பதொன்றும் சிரமமாயில்லை

போகும்போதும்
சொல்ல மறுத்துவிட்ட
சொற்களின் அர்த்தம்
காலடியில் நொறுங்கிக் கிடக்கிறது

பார்வையற்றவனின்
இரவைப் போல்
தவித்தபடி துடிக்கின்றன

உன்
மொழி தெரியாத
என் விரல்கள்..

****

இரவிலிருந்து பகல்கள் தொடர்ந்து..

*
தேவதையின் கண்கள்
களைத்து விட்டது

பூப்பதற்குரிய நம்பிக்கையை
நிராகரிக்கச் செய்கிறது
இரவிலிருந்து இந்தப் பகல்கள் தொடர்ந்து
கூம்பியபடி சினந்து நிற்கும்
இரு மொட்டுக்கள்..

கன்னம் கிள்ளுதல் சாத்தியமில்லை
என்பதாக
உதடுகள் சுழித்துக் கொள்கிறது
புன்னகைக் கோடுகள்

****

அப்படியொன்றும் பிழையாகிவிடாது..

*
எழுது விரலின்
நகக் கண் மேற்பார்வையில் தான்

உன்னைப் பற்றிய
முதல் கவிதை
மொட்டவிழ்ந்தது

அப்படியொன்றும்
பிழையாகிவிடாது
என்னும்

சின்னஞ்சிறிய சமாதானத்துடன்

****

இன்னும்..

*
விடாமல் பேசித் தவிக்கும்
இந்த
மொட்டை மாடி
இருளில்

உலர்ந்தும்
கொடியிலிருந்து
இன்னும் எடுக்கப்படாமல்
படப்படக்கிறது

மனக்கொடி சலனங்கள்..

****

கனவுசார் நதி..

*
நேற்றைய நிழல் போல்
தொடர்வாய் நாளை என
இந்த இரவைப்
புறக்கணிக்கிறது
கண்கள்

தூக்கம் சார்ந்த கனவின்
நதியில்

சிறிய அலையின் மடிப்பில்
மிதக்கிறேன் உன்னால்..

****

பொம்மையின் பிரதி..

*
பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்ட
வரைந்த
கட்டைவிரல் பொம்மையின்
பிரதி ஒன்றை

அறிமுகக்
கைக் குலுக்கலில்

உன்னோடு எடுத்துப் போகிறாய்

****

முடிவில்லாத இரவின் மேஜை..

*
கை மறதி என்ற
ஒன்று இல்லையென
வாதிடுகிறாய்
மொபைலில்

தெரிந்தே நீ
விட்டுச் சென்றதாக
எடுத்துக் கொள்ளத்
தூண்டுகிறது
என்
மேஜையில்
உன் டைரி

முடிவில்லாத இந்த
இரவு
முணுமுணுத்தபடி கரைகிறது
ஜன்னல் திண்டில் இளமஞ்சள் வெயில்
நுழைந்த நொடியில்

****

மற்றுமொரு உடல்..

*
ஒரு ஜோடி தோல் செருப்பு
என்
பயணத்தை சுமந்தபடி

தன்
பாதைகளோடு புதிர்களை
விட்டு வருகிறது

பாதங்களோடு உறவாடுவதில்
அதற்கு விருப்பமில்லை

இந்தப் பாதம்
மற்றும் ஒரு தோல் என்பதோடு
இந்த உடலுறவு அதற்குப்
பிடிப்பதில்லை

அது
எப்போதாவது
நினைத்துக் கொள்ளலாம்

தான்
வேறொரு உடல் மீது
போர்த்தப்பட்டிருப்பதும்
இப்போது
இன்னொரு உடலின் கீழ்
நசுங்குவது குறித்தும்

எப்போதுமே தன் பாதையோடு
புதிர்களை முணுமுணுத்து வருகிற
என் பயணமாகிப் போன

தோல் செருப்பு

வாசலோடு
துண்டித்துக் கொள்கிறது
என்னை

****

உதிரும் சந்தர்ப்பங்களுக்கான நுனி கருகுதல்..

*
ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும்
ஒன்றிரண்டு
நம்பிக்கைத் தளிர்களின் நிறம்
பழுக்கத் தொடங்குவதோடு

அவை..

உதிரும் சந்தர்ப்பங்களுக்கான
நுனி கருகுதலை
ஆதார நரம்புவரை பரப்பிய பின்..

கழன்று கொள்கிறது..

யாதொரு
பிரயத்தனமும் அவசியப்படாமல்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 16 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11963&Itemid=139

சமவெளியெங்கும் சுவர்கள்..

*
கடவுளின்
வியர்வைத் துளி தான் சாத்தான்
என்ற
விவாத இரவுக்கு பின்

என் நாவில்
அவன் உப்பு கரிக்கிறான்

மனதில் முட்களாய் முளைக்கிறான்
கனவின் படுதாவை உதறிப் பிய்க்கிறான்

என்
சமவெளியெங்கும்
சுவர்கள் எழுப்பி
அதில் தன் எச்சில் கொண்டு
வர்ணம் பூசுகிறான்..

சாத்தான் இடையறாது உழைக்கிறான்

அவன் உடலில்
பெருகும் வியர்வைத்துளியில்
கடவுள் மின்னும்போது..

வானம் இடிய சிரிக்கிறான்..

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 14 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11923&Itemid=139


மௌனப் படிவம் நீட்டும் உன் நேற்றைய நிழல்..

*
எங்கோ ஒரு முறை
சாத்தியமான துரோகச் சாயலை
வர்ணம் தீட்டுகிறது இவ்விரவு..

புன்னகைகளின்
குழிக்குள்ளிருந்து வழியும் கனவுகளை
மொழிபெயர்த்துக் கற்றுக்கொள்ள
மௌனப்படிவம் நீட்டுகிறது
உன் நேற்றைய நிழல் ஒன்று..

அடுக்கி தைத்து வைத்திருக்கும்
ஞாபகங்களைப்
பிரித்துப் பதறும்
விரல்களுக்குப் புரிவதில்லை
இந்த அலமாரியின் தடுப்புகளுக்குப் பின்னே
காத்திருக்கும் தவிப்பின் வரிகள் எதுவும்..

இவைகளைக் கடந்தோ
அல்லது
கடத்தியோ நிரப்பப் போகும்
படிவத்தின் இறுதியில்
கையெழுத்து இட
உன் பெயரைத் தான் சிபாரிசு செய்கிறது

எங்கோ ஒரு முறை
சாத்தியமான துரோகச் சாயலை
வர்ணம் தீட்டும் இவ்விரவு..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 12 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11909&Itemid=139

தலைக் கவிழ்ந்து...நடை தொய்ந்து..

*
நான் இங்கு இல்லை என்கிற
மறுப்புத் தகவலோடு

தலைக் கவிழ்ந்து
நடை தொய்ந்து
கிளம்பிப் போன நண்பனின்
மரணச் செய்தி..

அதிகாலை
தொலைபேசி வழியே வந்த போது..

இரவெல்லாம் அழுதிருந்தன
ஜன்னல் கண்ணாடிகள்..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 1 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11763&Itemid=139

வெளிச்ச வட்டங்கள்..

*
பறவையின்
மஞ்சள் அலகு கொத்திய
வெளிச்ச வட்டங்களை
காற்று துடைத்துக் கிடத்துகிறது
இன்னொரு நிழலில்

பிறகு
ஒற்றைக் கூவலில்
உதிர்ந்து விழுகிறது பழுத்த இலை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 27 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3805

வதைகளின் குரல்கள்..

*
ஒவ்வொரு வீட்டின் தனியறையிலும்
இரவின் வெப்பம் தணியாத
நிழல்
கொஞ்சம் மிச்சமிருக்கிறது

சொற்ப வசவு வார்த்தைகளின்
காயாத ஈரம்
ரகசியமாய்
எங்கோ ஒரு மூலையில் தேங்கிவிடுகிறது

மயிர்க் குப்பைகளை இழுத்தபடி
அலைமோதும் காற்றுக்கும்
தேவைப்படுகிறது
தனியறையில்
ஒரு
தனிமை இடம்

வதைகளின் குரல்கள்
படுக்கையில் கலைந்து கிடக்கும் போர்வையின்
மடிந்த நிழல்களில்
சுருங்கி உலர்ந்துக் கொண்டிருக்கிறது
பின்வரும் பகலின்
கண்ணீர்த் துளிகளை எண்ணி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 20 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3783

நகரத்தின்..

*
வெயில் மிருகம்
பசியோடு
நக்கிப் போகிறது

நகரத்தின்
கைப்பிடி நிழலை..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 13 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3756

கடந்து போகும் சூரியன்

*
ஒரு நிறுத்தத்தில்
மரங்களுக்குக் கீழே
வெகு நேரம் காத்திருக்கிறாள்..

மேலே கடந்து போகும் சூரியன்
இலைகளின் நிழல்களை
வரைந்து போகிறது
அவள் புடவையில்..

சற்று நேரத்தில் வந்த பேருந்தில்
ஏறிப் போகிறாள்
இலைகளோடு..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 13 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3756

வரவேற்பறை ஸோபாவில் புதைந்து போகுதல்..

*
காத்திருக்கச் சொல்லி
எழுந்து போகிறாய்
திரும்பி வர மறந்துவிடுவது
உன் வழக்கம்

ஆபீஸ் வரவேற்பறை ஸோபாவில் புதைந்தபடி
உன் சமீபத்திய
கவிதைத் தொகுப்பைப் பிரித்து
முதல் கவிதையை வாசிக்கத் தொடங்குகிறேன்

காத்திருக்கும்படிச் சொல்லி
எழுந்து போகிறது
உன்
கவிதையும்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 6 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3738

பிரியத்தின் அவநம்பிக்கை

*
என் மீது இறங்கும்
உன் பிரியத்தின் அவநம்பிக்கையை
உனக்கே பரிசளித்துவிட
முடிவெடுக்கும்போது

அதைப்
பிரித்துக் காட்டும்படி கெஞ்சுகிறாய்
குறைந்தபட்சம்
ஒரு
அவமானமாவது மிஞ்சும்
என்றபடி..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 6 - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3738

கண் திறக்கும் தருணம்..

*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
மௌனம்

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( டிசம்பர் - 27 - 2010 )

தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..

*
இந்த தேனீர் விடுதியின்
காலி இருக்கைகள்
என்னோடு பேசிக் கொண்டிருந்தன
நீ
வரும் வரை

மேஜை மீது வட்டங்களாக
வரைந்துக் கொண்டிருந்த நீர்த் துளி
மின் விசிறிக் காற்றில்
விளிம்பு அதிரத் துடித்துக் கொண்டிருந்தது

புன்னகைக் குழைவோடு
தொடங்கிய நம் உரையாடல்
அந்தரத்தில் அறுபட்டு
நீ
வெளியேறிய வேகம்
கண்டு
இன்னும் நடுங்கிக் கொண்டிருக்கிறது
எதிர் நாற்காலி

****

நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 19 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012191&format=html

ஒரு பாக்டீரியாவின் கனவு..

*
மழை ஓய்ந்து
பல நாட்கள் தேங்கிய
குட்டைக்குள்
ஒரு
பாக்டீரியாவின்
வயிற்றுக்குள்
குடி புகுந்தேன்

மந்திரி வருகைக்காக
அடிக்கப்பட்ட
கொசு மருந்தின்
வெண்புகையில்

சுழலத் தொடங்கியது
வாழ்வு பற்றிய
ஒரு
பெருங்கனவு..

****

நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 12 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012121&format=html

64 துண்டுகள்..

*
அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள்
கையில் ஊசலாடும்
அகன்ற அட்டைப் பையில்
ஸ்கேன் பிலிம்கள்
ஒன்றையொன்று நெருக்கிக் காத்திருக்கிறது

லாரி மோதிய சைக்கிளிலிருந்து
தூக்கியெறியப்பட்ட
கணவனின் மூளையை
64 துண்டுகளாக படம்பிடித்து

அவள் தலையெழுத்தை
பிரிண்ட் அவுட் எடுத்து
தந்திருக்கிறார்கள்

நெடுநேரக் காத்திருப்பின்
அயர்ச்சியில்
அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள்

இன்னும்
சற்று நேரத்தில்
டாக்டர் வந்து விடுவார்

****

நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 5 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012051&format=html

திங்கள், டிசம்பர் 13, 2010

இடுப்புயர கரடி பொம்மைகள்..

*

பிறந்த நாள் பரிசாக
குழந்தைகளுக்கு வந்த
இடுப்புயர கரடி பொம்மைகள்
'அழுக்காகி விடும்..!' - என்ற அதட்டலோடு

விளையாட்டு மறுக்கப்பட்டு
பாலிதீன் கவர் சுற்றி
உயரமான ஷோ- கேஸில்
தஞ்சமாகிறது

கால ஓட்டத்தில்
உருமாறும் விளையாட்டுகளோடு
வளர்ந்துவிடும் பிள்ளைகள்

இடம்பற்றாக் குறையுடன்
பைக்கொள்ளா புத்தகங்களோடு
அண்ணாந்து பார்த்துக் கேட்கின்றனர்

'ஏன்ம்மா...குப்பை மாதிரி
இன்னும் பொம்மையெல்லாம்
அடைச்சி வச்சிருக்க..?
காலி பண்ணிக் குடு
நாங்க புக்ஸ் அடுக்கனும்..'

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 28 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12087&Itemid=139