வியாழன், நவம்பர் 24, 2011

பொம்மையோடு முணுமுணுக்கும் ரகசியங்கள்..

*
பாப்பாவுக்கு நிலவைத் தொட்டு
ஊட்டும் சோற்றில்
விக்கல் உடைந்து
தெறிக்கிறது நட்சத்திரங்கள்

விரியும் முன்
அவள் பறிக்கும் மொட்டு
கைக் கூப்பி மணக்கிறது
குட்டி விரல் பிரித்து நிறம் நுகரும்
ஈரத்தில் 

தரையில் படரும் வெயிலை
நகம் சுரண்டிப் பிரிக்கிறாள்
நீளும் நிழல் துரத்தி
ஓடுகிறாள்

தன்  பொம்மையோடு மட்டும்
ரகசியங்களை முணுமுணுத்து
அதன் காதுகளைத் திருகி
தலைக் குனிந்து
உச்சரிக்கிறாள்

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( நவம்பர் - 19 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/11/blog-post_19.html

முடிவற்று நீளும் பயணத்தின் வெற்றுக் கால்கள்


அந்தத் தெரு வழியே நடக்கும் நிழல்களில்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

தொலைந்து போன தருணங்களின்
ரகசியங்களை
அளவில் அடங்காத மலர்தலை
சொல்ல விரும்பும் தயக்கத்தை
கதவடைத்துக் கொள்ளும் மௌனங்களை
கருணையின் மீது பிரயோகிக்கப்படும் சாபங்களை

யாவற்றையும் உருக்கி ஊற்றும் வெயில்
பிளாட்பாரம் ஏறி நிதானிக்கும் வெற்றுக் கால்களை
குறுகுறுக்கச் செய்து சூடேற்றுகிறது
மேலும் நடக்கத் தூண்டி
முடிவற்று நீளும் பயணத்தை நோக்கி

எல்லாத் தெரு வழியேயும் நடக்க நேரும் நிழல்கள்
இரண்டுக்கு மேற்பட்டவை
ஆனால்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் ( நவம்பர் - 3 - 2011 )
http://www.navinavirutcham.blogspot.com/2011/11/blog-post.html

மூடிய விரல்களின் மிக்கி மௌஸ்

*
இறுக மூடி வைத்திருந்த விரல்களை சிரமப்பட்டு
ஒவ்வொன்றாய்ப் பிரித்தாள்

அத்தனை விரல்களும் விரிந்த பிறகு
உள்ளங்கையில் சிரித்தது
பேனாவில் வரைந்த
ஒரு மிக்கி மௌஸ் சித்திரம்

குதூகலித்து
உள்ளங்கை அள்ளி முத்தங்கள் இட்டாள்
தொடர் முத்தங்களின் முடிவில்
இறுதி முத்தத்திற்கு பிறகு

உள்ளங்கையில் இருந்த
மிக்கி மௌஸ்
அவள் உதடுகளில் உட்கார்ந்து கொண்டது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

காத்திருப்பின் சிறகு...

*
மிகுந்த தயக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறாய்
புத்தகங்கள் நிறைந்த தனித்த அறையில்

அலமாரியின் எல்லா அடுக்குகளின்
பின்வரிசை நிழலிலிருந்து
முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்குகிறது

கேட்கப் பயப்படும்
கேட்கத் தயங்கும் தெளிவற்ற குரல்கள் எல்லாமே
காலத்தில் அறுத்து வைத்திருக்கிறது
வரலாற்றின் தொன்மத் தலைகளை

இசை நிரம்பிய தருணத்தை வழிய விடுகிறாய்
அறையெங்கும் உனது பேரமைதியால்
நீ
எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாய்
எனது ஓசையற்ற ஒரு பிரவேசிப்புக்கு

இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்கிறது
காத்திருப்பின் சிறகசைவில்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

சப்தமெழுப்பி அசையும் இலை...

*
மொடமொடவென
சப்தமெழுப்பி அசையும் சருகின் மீது
பொழியும் மழை
அதன் நிறத்தைக் கரைத்து
பழுத்த இலையாக்குகிறது

நெகிழ
புல்தரையில் மல்லாந்து கிடக்கிறது
தன்னை விடுவித்து கறுத்த கிளையின்
பிளவைப் பார்த்தபடி

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 28 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5036

அழைப்பின் சதுரம்

*
இரவைச் சதுரமாக வெட்டி வைத்திருக்கும்
தனிமையொன்று
தன் வாசலை அடைத்து விட்டு
ஒரு அழைப்பு மணியைப் பொருத்தியபடி
காத்திருக்கிறது
எனது வருகைக்காக
எனது திரும்புதலுக்காக

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 21 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5012

தோள்களின் வழியே நழுவும் வெயில்..

*
ஒரு சொல் மிச்சமில்லை
எழுதித் தந்த ஒப்பந்தத்தின் கீழ் இடப்பட்ட
கையெழுத்துத் தான் மிச்சமாகிப் போன
கடைசி மொழிப் பரிமாற்றம்

நம் உரையாடல் நின்று போன இன்றைய
தினங்களின் நிறம்
உனது உதடுகளில் நிரந்தரமாய் பூசப்பட்டிருக்கிறது
மௌனமென்று

ஒரு மென்மையான முத்தத்தின்
அனுமதியோடு அதை
ஒற்றியெடுத்துக் கொள்ள முடியலாம்

தலையசைத்து ஆமோதிக்கிறது
இம்மரத்தின் பழுத்த இலை 
அதன் வர்ணமிழப்பில் குழைகிறது
உயிரின் அகாலம்
படபடப்பின் நிச்சலனம்

இலைகளை ஊடுருவி
தோள்களின் வழியே நழுவும் வெயில்
நீ வந்த பிறகு
உன் மீதும் வரைய தன்னோடு வைத்திருக்கிறது
பூக்களின் நிழல்கள் இரண்டை

ஒப்பந்தத்தின் கீழ் இடப்பட்ட சொல்லாகிப் போகிறது
நீ - நான் என்றப் பெயர்களும்
தொடர்ந்து வாசிக்கப்பட்ட காரணங்களும்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 21 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5012

இரவுகளின் மிச்சத் துளி..

*
எதன் சாயலையோ ஒத்திருக்கிறது
இந்தப் பகல்
அதன் நீட்சி மிகு இரவு நினைவுகளை
அள்ளிப் பருகியபடி நெளிகிறது கானல்

குமிழ் விட்டு மூச்சென விம்மி வெடிக்கும்
யாசிப்பை
தெருவில் இறக்கி விடுகிறேன்
அது தன் வாலை ஆட்டிக் கொண்டே
முகர்ந்தபடி வாசல்படியருகே வந்து படுத்து விட்டது

எதன் சாயலையோ ஒத்திருக்கும்
இப்பகலில் ஓசையின்றி நீ வந்து நிற்கிறாய் வாசலில்
ஒரு சிநேகப் புன்னகை உதடுகளை விட்டு
இறங்க மறுக்கிறது

இழுத்து கைப்பற்றி விரல்களுக்கு முத்தமிட்டு
அவைகளை இரவல் கேட்கிறாய்

எழுதிப் பார்ப்பதற்கு இந்த ஓர் இரவு மட்டுமே
மிச்சமிருப்பதாக அரற்றுகிறாய்

கொண்டு சென்ற என் விரல்களை
இன்று திரும்பத் தந்த போது
அதன் நுனிகளில் ஒட்டிக் கொண்டிருந்தது
உன் இரவுகளின் மிச்சத் துளி

இன்னும் எழுதித் தீராத
எதன் சாயலையோ ஒத்திருக்கிறது
இந்தப் பகல்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ நவம்பர் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17438&Itemid=139

பதில்களுக்குரிய உனது சம்பிரதாயங்கள்

*
பரந்த மனவெளியின் சமனற்ற
தனிமை மணலில் வேகம் குறையும்
நினைவோட்டம்
இரு மருங்கிலும் முளைத்திருக்கும்
பெருங் காடுகளென தலையசைக்கும்
கேள்விகளில் இடறி விழுகிறது

அதன் தேடலுக்குரிய பதிலை
உனது உதடுகள் இறுகப் பூட்டி வைத்திருப்பதிலிருந்து 
சிறிய தும்மல் வழியாகவேணும்
அதை நீ துப்பி விட முடியும்

ஆனால்
பதில்களுக்குரிய உனது சம்பிரதாயங்கள்
எப்போதும்
ஒரு மதச் சடங்குக்குரிய உத்திகளையே கையாளுகிறது

எளிமையான ஒற்றைப் பதிலை
விழுங்கிச் செரித்துக் கொள்வதற்கான
மௌன மாத்திரைகளை
சேகரித்து வைத்திருக்கிறாய்

மேலும் நீ தூவ முயலும் விதைகள்
இன்னுமொரு காடாகிப் பெருகும்
பெருமழையோடு
காத்திருக்கச் சொல்கிறாய்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ நவம்பர் - 15 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17410&Itemid=139

விழ நேரும் தருணங்களின் விதிமுறைகள்..


உனக்கான சதுரத்தில் 
நீ பொருந்தி நிற்க விரும்புகிறாய்
விதிகளை மீறுவதற்குரிய
அறிவிப்புகளை
சேகரித்து வைத்திருக்கிறாய்

உன் எதிர்பார்ப்பு
ஒன்றே ஒன்று தான்

என்னை நெருங்கி வந்து
எனக்குரிய விளையாட்டை நீ
தொடங்கி வைப்பதோடு
எனது தோல்வியை நீயுன் 
சுவரொட்டியில் அடிக்கோடிட வேண்டும்

ஒவ்வொரு சூழ்ச்சியும்
நிதானமாகப் பெய்யத் தொடங்கும்
ஒரு மழையை ஒத்திருக்கிறது

அந்தியின் நிழலை தன் அலகில்
சுமந்து அலறும் ஆந்தையின் இரவு
என் தனிமைச் சுவரில்
விஷமேறிப் படர்கிறது

காயங்களோடு 
விழ நேரும் தருணங்கள் 
எல்லா விதிமுறைகளையும்
ஒரு முறை ரகசியமாய் 
உச்சரித்துப் பார்த்துக் கொள்கிறது

பொருந்தாத சதுரங்களின் மீதான
கனவுகள்
அடர்ந்த காட்டுக்குள் எங்கோ சுமந்து நிற்கிறது
பிரியமற்று முடிந்து போன
சிறு நெருப்பின் மிச்சத்தை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 14 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4998

ஞாயிறு, நவம்பர் 06, 2011

பெரும்பாலும் கோடையாகவே தகிக்கும் திசைகள்

*
திட்டிய வசவுகளின் மீது
நிறங்கள் வழிகின்றன
ஒரு மழைத் தூறல் சாத்தியமாக்க முடியாத
ஈரத்தை அவை உற்பத்தி செய்கின்றன

மறுபேச்சு தீர்ந்து போகும் நொடிகளை
காலம் எவ்வேப்போதும் தந்து உதவுவதில்லை

வசவுகள் புறப்படும் திசைகளின்
பருவநிலை பெரும்பாலும் கோடையாகவே தகிக்கிறது
அது
அபூர்வமாக கொண்டுவரும் பனிக்காலம்
தன்னிச்சையாக அமைய நேர்வது
நள்ளிரவின் ஆழ்ந்த இருளாகிறது

ஒவ்வொரு எழுத்தின்  குளிர்ந்தத் தன்மையும்
அப்போதும் கொண்டிருக்கிறது
பாலைக் கோடையின் நிழலுக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு பகலின் வெப்பத்தை

திட்டும் வசவுகளின் மீது
வழியும் நிறங்கள்
நான் அறிந்திராத ஒரு மௌனக் கணத்தில்
அமைதியாக வெளியேறி விடுகிறது
சரியாக சாத்தாத ஜன்னலின் வழியே

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ நவம்பர் - 14 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17396&Itemid=139

எழுதி நிரம்பிய உரையாடல்களிலிருந்து..

*
ஒரு சொல்லைக் கூட உதிர்க்காமல்
வெளிச்சம் இல்லாத இந்த அறையில்
எதை நீ கொளுத்திக் கொண்டிருக்கிறாய்

எழுதி நிரம்பிய உரையாடல்களை
மேஜையில் அப்படியே வைத்திருக்கிறாய்
நுனி மடங்கிய
அதன் ஒவ்வொரு பக்கங்களும் துடிக்கக்
காத்திருக்கிறது

நீ
செய்ய வேண்டியது எல்லாம்
ஒன்றே ஒன்று தான்

இதுவரை பிரயோகிக்காத
ஒரு புதிய சொல்லை
இந்த அறையின் அமைதியின்மை மீது
உச்சரிக்க வேண்டும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ நவம்பர் - 7 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4967