திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 32

*
குயில்களை
ரத்து செய்கின்றன
பட்ட மரங்கள்..

காகங்கள் மட்டுமே
கூடு சமைக்கின்றன..

மழையற்ற
நகரத்தை நம்பி..!

****

மெட்ரோ கவிதைகள் - 31

*
நெருக்கடி..
சூழல்...மிதக்கும்..
நிமிடங்களை..
காகிதக் காற்றாடியின்..
சுழற்ச்சியோடு...
பினைத்துவிடத் துடிக்கிறான்...

குழந்தைகளுக்கான்...
பொம்மைக் காற்றாடிகள்..
விற்கும்..சிறுவன்..

மனித
கசகசப்புகளுக்கு...நடுவே...

ரங்கநாதன் தெரு..
பிழிந்து போடும்...
பசியின்...அகவல்களை..

அவனின்..விரல் நுனிகள்...
முன்னைக் காட்டிலும்..
வேகமாக...
சேகரிக்கின்றன...

****

என் இரவின் அகாலம்..!

*

நேர்முகக் கணக்குகள்..
ஏதும்.. அற்ற..
பிரியங்களை..

சின்ன சின்ன
அறைகளாக செதுக்கி...
கவிதை மாளிகைக்குள்
பொருத்திவிடத் துடிக்கும்..

என் இரவின்..
அகாலத்தை..

பஞ்சு மேகங்கள் அனுப்பி..
மழைப் பொழிய முனைகிறாள்..

இழுத்துப் போர்த்திக் கொள்ளும்..
பாவனையில்..
ஜன்னல் திரைச்சீலைகள்...
காற்றை வடிக்கட்டி..

மேஜையின்..
தெற்கு மூலையில்...
குவித்து வைத்துவிட்டு..
அமைதியாக காத்திருக்கிறது..

நான் எழுந்து...
அகலும்...தருணத்துக்காக..!

*****

கடிதக் காலங்கள்..

*

கடித த்வனியில்..
வெளிர் மஞ்சள் நிற..
மழையின் சாரலை..
விரல்கள்..
சில்லிட்டு உணர்ந்துக் கொண்டன..

வைக்கோல்...போரின்..
வெப்பச் செதில்களை..

வரப்பின்..நுண்ணிய ஈர நுனிகளை...

கம்மாய்க் கரையை..
மென்மையாய் மோதித் திரும்பும்..
அலையின்..சிரிப்பை..

எளிய..
வார்த்தைக் கொண்டு...
நட்பை வனைந்திருந்தான்..
பால்ய நண்பன்..

என்
அறைக்குள்...
கதவு திறந்து...
மேஜை மீது வைக்கப்பட்ட..

'பிசாவின்'
ஆவி பறக்கும்...
வெம்மையை...
ஏசியின்...ரீங்காரம்...
மெல்ல விழுங்கத் தொடங்குகிறது..

*****

மெட்ரோ கவிதைகள் - 30

*
கல்லறைக்குள்...
புல் மேயும்...
பசுக்களின்..
பாலைக் கறந்து..

பிரக்ஞையற்று...
காபியோ..
டீயோ.. கலந்து
குடிக்கிறார்கள்..

இறுதியாக..
மரணங்களுக்கு
போய் வந்தவர்கள்..

****

காதலுக்கான முதல் சரிகை..

*

முன்னெப்போதும்
அறிந்திராத
புன்னகையொன்றை..
ரகசியமாய்
தோட்டத்து கிணற்றுக்கு பின்புறம்
வளர்த்து வருகிறாள்..

பார்வை வண்டுகளின்
இமை ரீங்கரிப்பில்..
அவளின்
வாசலைக் கடக்கும்
தருணங்களிலெல்லாம்..

நுகர முடிகிறது
ஒரு மகரந்தத்தை..

உகுக்கும்
தேன் துளிகளை..
பெருக்கிடும்
ஊற்றுச் சுழியை..
பத்திரமாய்
கன்னத்தில் வைத்திருக்கிறாள்..

வில் வடிவ உதடுகளில்..
பொன்மாலை வெயிலொன்று..
பூசி நகர்கிறது..
காதலுக்கான
முதல் சரிகையை..

என்
சைக்கிள் மணியின்..
ஒலியை.. சேகரித்து..
தலையசைக்கிறது..
எப்போதும்..
அந்த தங்க ஜிமிக்கி...

****

குரு தட்சனை..

*

உயிரற்று விழுந்தது...
நறுக்கப்பட்ட
கட்டைவிரல் மட்டுமல்ல..

ஏகலைவனின்..
மௌனமும் தான்..!

****

நீர்க் குமிழில்..

*

வண்ணங்கள் பூசிக்கொண்டு
பறந்த
சோப்பு நீர்க்குமிழில்..

ஆசையோடு..
சிறிது தூரம் பயணித்தது..

சிறுமியின் மூச்சுக்காற்று..!

****

பார்வை நுனி..

*

பாவனை வண்டுகளை..
பார்வை நுனியிலிருந்து
பறக்க விடுகிறேன்..

தேன் மலர்களை..
தேடும்..
நடிப்போடு..
உன் கூந்தலுக்குள்..
சென்று
ஒளிந்துக் கொள்கின்றன..

****

மெட்ரோ கவிதைகள் - 29

*
மழை பொழியாமல்..
கடந்து போகும் மேகங்களை..
கவலையற்று..
வேடிக்கைப் பார்க்கின்றன..

என்
சின்னஞ்சிறிய பால்கனியிலிருந்து..

நிறமிழந்துவிட்ட
பிளாஸ்டிக் பூக்கள்..

****

நொடி முள்ளின் நகர்தல்..

*

நெடு நாட்களுக்கு பின்பான
பயணத்துக்குரிய
ஏற்பாட்டில்..

நண்பனின் குரலை..
'சாட்டிலைட்' கருவிகள்..
பிரபஞ்சத்தின்
ஆழ் இருளில் மிதக்க விடுகின்றன..

நொடி முள்ளின் நகர்தலில்..
எண்களுக்கு இடையே..
கும்மாளம்..

எப்போதும்
சுற்றிக் கொண்டிருக்கும்
நிமிடங்களுக்கு..
சட்டென்று
அவசரங்களைத் தீர்மானித்தபடி..

உருவாகும் பயணங்கள்..

வாழ்வின்
பிரிவுப் பள்ளங்களை..
இட்டு நிரப்புகின்றன..

அடிவாரங்கள் என..

****

காதல் நிமிடங்கள்..

*

ஹாலில் ..
என்னை.. நீ பார்த்த
நிமிடத்தில்..

உன் கன்னம்
சிவந்து விட்டதாக
நான் சொன்ன பொய்யை..

மேஜையில்..
உன் அம்மா
வைத்துவிட்டுப் போன
ஆப்பிள்கள் நம்பவில்லை..

ஆனால்
நான் வாங்கி வந்த..
செர்ரிப் பழங்கள்
ஒத்துக் கொண்டன..!

****

மென் கதவுகள்..

*

உன்
கன்னத்தில் முத்தமிட
மெல்ல
குனிந்தபோது..

அதுவரை
கைத்தட்டிக் கொண்டிருந்த
இமைகள்..
மென்மையாக
கதவை மூடிக்கொண்டன..!

*****

சொல்ல மறந்தவை..

*

கைப் பிசைந்து..
தவித்திருக்கும்
வராண்டாவில்..

பூப் போல
கையிலேந்திய
குழந்தையோடு..

நடந்து வரும்
' நர்ஸை..'

ஏனோ நாம்..

'தேவதையென்று..'
அழைக்க மறந்துவிடுகிறோம்..

****

வலை பின்னல்...

*

நினைவின்
இடுக்குகளில்..
வலை பின்னும்
சிலந்தி..
எட்டு காலில்
நகர்கிறது..
சுடுகாட்டை நோக்கி.. !

****

மெட்ரோ கவிதைகள் - 28

*
வளர்ந்து விட்ட
மகள்களின்..அதட்டலை..

மறுப்பேதும் சொல்லத் தோன்றாமல்..
காதில் வாங்கியபடியே..

வயதான
அம்மாக்கள்..
பின் தொடர்ந்து நகர்வதுண்டு..

மௌனம்
போர்த்திய
கணங்களாய்..

****

மெட்ரோ கவிதைகள் - 27

*
பின்னிரவில்..
மங்கிய சோடியம் வேப்பர்
விளக்கொளி பூசிய
சாலையில்..

தொய்வான நடையில்
வீடு திரும்பும்
தருணங்களில்..

எப்போதாவது..
கேட்டு விட நேர்கிறது..

ஒதுக்குப் புறமாய்
நிற்கும்.. காருக்கடியிலிருந்தோ..

இருள்படிந்த
குப்பைத் தொட்டிகளின்
மறைவிலிருந்தோ..

இடைவிடாத...
அழைப்போடு ஏங்கும்..
பூனைக்குட்டியின் குரலை..!

*****

தவளையின்..இரவு பாடல்..

*

மின்மினிப் பூச்சிகளை
கண் சிமிட்டி
அழைக்கின்றன..
இரவு நெடுக
விண்மீன்கள்..

கறுத்து மிதக்கும் குளத்தின்
தாமரை இலை மீதமர்ந்து..

அடித்தொண்டை புடைக்க..
' கொர்ரக்.. கொர்ரக்..' - என்று..
புகார் சொல்லிக்கொண்டே..
இருக்கிறது..

ஒரு தவளை..!

****

மெட்ரோ கவிதைகள் - 26

*
பஸ் ஸ்டாப்புகளில்..
ரயிலடிகளில்..
தியேட்டர் வாசல்களில்..
ஸ்வீட் ஸ்டால் ஓரங்களில்..

கையேந்தும் குழந்தைகளின்
கண்களில்..

சாம்பல் பூத்துத் தோன்றும்
வானத்தை..
அழுக்காய் கடக்கும்
மேகங்கள்..

கண்ணீர்த்துளிகளை
முட்டி நகர்ந்துவிடுகிறது..

எப்போதும் போல்
இப்போதும்..!

****

நெம்புக் கோல்...

*

ஆலாய்
பறந்து விடுவதற்கான
முனைப்புகளோடு..
சிறகுகள் முளைக்கப் பணித்தேன்..
சொற்களுக்கு..

ரீங்கரிப்பு உதறலோடு
காதருகே.. அடம்பிடித்தன
வட்டமிட்டபடியே..

துரத்துவதற்கான
வாக்கியத்தைத்
தேடத் தொடங்கியபோது..

எங்கள்
வாதத்தைப் புரட்டிப் போட..
கையிலொரு
நெம்புக் கோலோடு..
வந்து சேர்ந்தான்..
மற்றுமோர் நண்பன்..

****

வண்ண பலூன்கள்..

*

' என்கவுன்ட்டர் ' -
என்றபடி..
சுடுபடும்.. புரட்சியாளன்
முறையற்ற அறிவிப்போடு..
புதைபடுகிறான்..

அவன் மீது
முளைக்கும் புல்வெளியில்..

வண்ண பலூன்களை..
துரத்திப் பிடித்தபடி..
குழந்தைகள்
விளையாடக்கூடும்..

****

நுகரப்படாத வாசனைகள்..

*

புதிய பாடப்புத்தகத்தின்
வாசனையை..
சுமந்து நிற்கிறது
40 -ம் பக்கத்தில்
தாஜ்மஹால்..

மறுபக்கத்தில்..
சிறையில் அடைப்பட்ட..
ஷாஜகானின்..
மரண வாசனையும்..

****

மிதப்பதாகக் கற்பித்துக் கொள்ளும் சொற்கள்..

*

புன்னகைக் குழைவுகளில்..
ஊறியபடி
உள் வழிகிறது..
சொற்களின் சகதி..

மிதப்பதாகக் கற்பித்துக்கொண்டு
பொய்யாகிப் போகின்றன
சொல்லப்படாத
அர்த்தங்கள்..

****

பொடித்து உதிரும் காலம்..!

*

குரல் தொலைந்துவிட்டதாக
புகார் ஒன்று எழுதி
ஒட்டி வைத்திருக்கிறாள்
அன்பின் கதவு மீது..

மரணத்தின் எண்ணிக்கையை
அறிவிப்பதாகவே இருக்கிறது..
இலக்கத்தின்
வட்டச் சுழற்சிக்குள்..
சிக்கி நிற்கும் எண்கள்..

கிரீச்சிடும்
தாழ்ப்பாளின் எச்சரிக்கையை..
பொருட்படுத்துவதில்லை விரல்கள்..

யாராவது..
எப்பவும் - வருவதும் போவதுமாக
துருப்பிடித்துத் திரும்புவார்கள்..

புலன்கள் அறியா வகையில்..
மேற்கூரையிலிருந்து..
பொடித்து உதிரக்கூடும்..
வாழ்வதாக
நம்பும் காலம்..!

****

நிழல் தவிப்பு..

*

உச்சி வெயில் அலையும்..
அகன்ற மைதானத்தில்..

கொடியற்றக் கம்பத்தின்
அடி நிழலை..

தவிப்போடு
சுற்றிக் கொண்டிருக்கிறது
ஒரு
சிறு எறும்பு..!

****

சூட்சமத் துளிகள்..

*

மௌனச் சிலாம்பு ஏறிய..
மனசின்..
ரேகைக் கிளைகளில்..
ஊர்ந்து பரவுகிறது..
சூட்சமத்தின்..
குருதித் துளி..

****

சரிகைப் பின்னல்..

*

என்
அறையில் அடர்ந்த
இரவின் மீது
சரிகைப் பின்னலிடுகிறது..
மெலிந்த கதவின்
இடுக்கினூடே..
இழையும்
தெருவிளக்கின் ஒளி...

****

பருகும் வக்கற்ற.. காலக் குருடன்..!

*

'சல்லிகள் '
பெயர்ந்த புன்னகையின்
குழிகளில்..
தேங்கி விடுகிறது
நிறையவே மௌனம்..!

அதை
அள்ளிப் பருகும்..வக்கற்ற
காலக் குருடனின்..
பாதங்களில் மட்டுமே..

கொஞ்சம் ஈரம்..!

****

வாழ்வின் வேட்டை..

*

முகங் கொள்ளாத் தயக்கங்களோடு..
உன்..
வாசலில் நின்ற தருணத்தை..
' பட் ' டென்று..
ஒரு கதவைப் போல்
அறைந்து சார்த்தினாய்..

முடிவில்லா
என்
பகலை மடித்து..

உன் அயர்ச்சியைத் துடைக்கவே..
பிரியமாய் பயணிக்க நேர்ந்தது..

காலங்களை..
' கவன் ' களில் பொருத்தி
குறி பார்க்கும்
வாழ்வின் வேட்டையில்..

பலியாகிப் போகிறது
ஒவ்வொரு முறையும்
மனசு..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2244

மெட்ரோ கவிதைகள் - 25

*
' அனக்கோண்டாக்கள்.. '
' தேள்கள்.. '
' தேவதைகள்.. '
' டிராகன்கள்.. '
மற்றும் சில -
' ஏலியன்கள்..'

டாட்டூக்களாக..
நெளிகின்றன..

' வீக்-என்ட் ' -
தியேட்டர்களில்..
வெண்ணிறத் தோல்களில்..

தொப்புள்..
காது..
மூக்கு..
கீழ் உதடு..
புருவ முனைகளில்..
தொங்கும் வளையங்களில்..

தாவிப் பிடித்து வித்தைக் காட்ட..
திணறுகிறான்..

நாகரீகக் கோமாளி..!

****

மெட்ரோ கவிதைகள் - 24

*
அலைவரிசை
ஒத்துப் போவதாகவும்...

' டியூன் ' - பண்ணுவதற்கான
' சேனல் ' -
எதுவென்பதாகவும்..

நட்பைத் திருகியபடியே..
நகரத்து வீதிகளில்..
திரிகிறார்கள்..

'நண்பர்கள்' - என..!

****

வட்ட வெயில்..

*

சமையலறை
ஜன்னல் வழியே
ஒழுகும் வெயில்..

வட்டமாய்
காய்ந்துக் கொண்டிருக்கிறது
' நான் - ஸ்டிக்கில் ' -

திருப்பிப் போடுவதற்கான
கரண்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்..
நான்..

****

ஈரம் சொட்டும் வாதங்கள்..

*

நைலான் கொடியில்..
அங்கொன்றும்
இங்கொன்றுமாக..

வெவ்வேறு வண்ணங்களில்..
செருகி நிற்கும்..
' கிளிப்புகள் ' -

அமைதியாக
வேடிக்கைப் பார்க்கின்றன..

ஈரம் சொட்ட
நாங்கள் பிழிந்துக் கொண்டிருக்கும்
எங்கள்..
வாதங்களை..!

****

கிழிபடாத நாட்கள்..!

*

என்னை
உதாசீனப்படுத்தும்
ஜன்னல் காற்று..

தினமும் புரட்டுகிறது..

காலண்டரில்..
கிழிபடாத..
என்
நாட்களை..

****

ஒடை மரத்தின் முட்களுக்கு அப்பால்..

*

சவுன்டியின்
குரலதிர்வில்..

இடுகாட்டு காகங்கள்..
பலகாரங்களை..
கால்களில் கவ்வி..

கரைந்தபடி மறைகின்றன..
ஓடை மரத்தின்
முட்களுக்கு அப்பால்..

****

துளைகளில் வழியும் பந்தம்..

*

மூன்றாம் துளையில்..
பந்தம்..
வழிந்து..
ஊறுகிறது..

பழைய பிணத்தின்..
மிச்ச சாம்பலில்..

****

நூல் சுற்றி..

*
மரணத்தை..
பிணத்தின்..
கால் கட்டை விரல்களில்..
நூல் சுற்றி
கட்டி வைக்கிறார்கள்..

****

உணவுக் கிடங்கு...

*

சிதறிய
வாய்க்கரிசிகளை..
ஓசையின்றி..
இழுத்துச் செல்கின்றன
எறும்புகள்..
தன் உணவுக் கிடங்கு
நோக்கி..!

****

தொகுப்பும் - தீர்மானங்களும்..

*

மனசின்..
நெடிய பயணங்களை..
ஒதுக்கிவிடும்படியான
தீர்மானங்களை..

புத்தகமாய்
தொகுத்து வைத்திருக்கிறேன்..

கள்ளத்தனமாய்
வாசிக்க சிரமப்பட்டு..

உரிமைக்கான மனுவோடு..
கால் வலிக்க..
காத்திருக்கிறது..

வயோதிகம்..!

****

நேற்றிரவின் கவிதை..

*

என்
ஜன்னல் திரையின்.. நுனியை..
மேஜையிலிருந்தபடி..

எட்டிப் பிடிக்க
பிரியப்படுகிறது..

நேற்றிரவு..
எழுதி வைத்த..
கவிதை..!

****

துருவேறிய நினைவின் உலோகம்..

*

கனவின்
குறுக்குவெட்டு
ஓரங்களில்..

பிசிர் முனைகளைக்
கூர் தீட்டுகிறது..

நாட்படத்
துருவேறிய..
நினைவின் உலோகமொன்று..!

****

நடை..

*

யுக மதில்களில்..
சத்தமின்றி..
நடைப் பழகிவிட்டன
சிந்தனைப் பூனைகள்..

****

குரல்களுக்கான திண்ணை..

*

சில குரல்களிலாவது
இருந்து விட்டுப் போகட்டும்..
எப்போதும் போல்
ஒரு சலிப்பு..

நீயும் நானுமாக
சுமந்து திரியும்
' எரிச்சலை ' -
இறக்கி வைப்பதற்கு..

ஒரு
திண்ணையாவது
கிடைக்காமலா போய்விடும்..?

சில குரல்களிலாவது
இருந்து விட்டுப் போகட்டும்...

*****

யாசித்த இரவு...

*

காலாவதியாகி விட்ட
கனவொன்றை
புதிப்பித்துத் தரும்படி
என்
இரவை யாசிக்கிறேன்..

' மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது ' -
என்றபடி..

திரும்பிப் படுத்துக்கொண்டது
அது..!

****

காகிதக் கப்பல்..

*

சாக்கடையாகி ஓடும்
மழை நீரில்..
காகிதக் கப்பல்
கல் இடறி கவிழ்ந்தபோது..
அதில் -
மடிந்து கிடந்த
கவிதையொன்று..

கண்ணீராகி கரைகிறது..

***