செவ்வாய், நவம்பர் 30, 2010

சொற்ப வெப்பத் தீண்டல்..

*
தனித்து எரியும்
ஒற்றை பல்பைச் சுற்றி
அடத்தோடு
மொய்த்துக் கொண்டிருக்கிறது
மழைத் தும்பி

இரவின் வழித் தப்பி
பணியின் ஈரத்தில் ஏமாந்து
சொற்ப வெப்பத் தீண்டலில்
தொடர்ந்து ரீங்கரித்து
கண்ணாடிச் சருகு இறகின் அழைப்போடு

எங்கிருந்தோ வால் துடிக்க
நாவை சுழற்றுகிறது பல்லியின் நிழல்

****

ஞாயிறு, நவம்பர் 28, 2010

அனைத்தையும்..

*
காற்றில் குரல் கிழிக்கிறாள்
விரலால் யுகம் எழுதுகிறாள்

அளக்காமல் வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
குலுங்குகிறது நிலம்

கொலுசொலியில்
அதிர்கிறது காண்டீபம்

மழலைச் சிரிப்பில்
அனைத்தையும் கலைத்துவிடுகிறாள்
அது ஒரு நொடி..

****

காட்சி நினைவுத் திரள்..

*
பாரபட்சங்கள் இல்லாத கனவுகளின் நிறம்
சாம்பல் தோய்ந்து நெளிகிறது

கண் கூசும் ஒளிப் பாய்ச்சலில்
உலர்வதான பாவனையில்
ஈரம் காய்ந்து அசைவுகளை மூடிக் கொள்ளும்
இமைகளின் திரட்சி
ஒரு காட்சியை நினைவுத் திரளில்
அடுக்கித் தொகுக்கிறது

பின்வரும் நாட்களின் தேவைக் கருதி

விழிப்பில் நசுங்கும் எண்ணங்களின் விலா எலும்பில்
உறுத்தலோடு விரல் நிமிண்டும் நிமிடங்கள்
பிறந்தும் இறந்துமாக
எழுந்து அமரும் படுக்கையில் கிடத்தப்படுகிறது

கனவின் துர்மரணத்தை நொந்தபடி..

****

வெள்ளி, நவம்பர் 26, 2010

வெயில் ஒழுகும் ஓசை..

*
கிளைகளில் பூசிய
வெயில் ஒழுகும்
மதிய இடைவெளியில்

பூட்டிய பிறகான
யாருமற்ற பூங்காவில்

ஓசையற்று
உதிர்கிறது
பழுப்பு நிற இலைகள்

காய்ந்த சருகுகளூடே
ஓடித் திரியும் அணில்கள்
ஒரு கணம் நின்று
பின்
மரத்திலேறுகின்றன..

****

தூது..

*
நம் விருந்தினர்களுக்காக
பால்கனியில்
தூது சொல்ல வரும்
காகத்தின் அலகில்

மரணத்தின் மாம்ச வாடை
மிச்சமாகிறது

பசிப் போக்கிய
எலியின் குடல் சரிவைப் போல்

****

தெருப் புழுதிகள்..

*
தயங்கியபடி
கழற்றப்படும் செருப்பு

தெருப் புழுதிகளை உதறும் மனமற்று
தன்னை விடுத்து
உள்ளே நுழையும் மனிதனின்

பணிவையோ
குழைவையோ

வேடிக்கைப் பார்க்கிறது
யாதொரு சலனமற்று..

****

ஏதோ ஒன்று..

*
பிரிக்கப்படாத
காகித உறைக்குள்

ஒரு
மனக்கசப்போ
ஒரு
வாக்குவாதமோ
ஒரு
குறை சுட்டிக் காட்டப்படுதலோ
ஓர்
அச்சமோ
ஒரு
துன்புறுத்தலோ
ஒரு
கவனப் பிசகான
உறவு முறிப்போ

ஏதோ ஒன்று
தயக்கத்தோடு காத்திருக்கிறது

****

நிலம் நோக்கி..

*
ஏக்கத்தோடு
வயிறு சரிய உட்காரும்
பூனையின் கண்கள்

தாழ்ந்து நிலம் நோக்கி
விடும் பெருமூச்சில்

குட்டி குட்டித் தலைகள்
உருள்கின்றன
அங்குமிங்கும்

****

அசையும் இரவு

*
பின்னிரவின்
மின்விசிறிக் காற்றில்
சுவரைக் கீறி அசையும்
மாதக் காலண்டர்

பொறுமையாக
ஆடிக் கொண்டிருக்கிறது
விடியலில்
நிற்கப் போகும் இரவுக்காக

****

சிருஷ்டி

*
கொடி சுற்றிக் கொள்ளும் சொற்கள்
நினப் பெருக்கோடு
குடம் உடைந்து
மூச்சுத் திணறுகின்றன
எப்படியாவது
இந்த உலகைக் கண்டுவிட

****

இதழ் பூட்டு..

*
தளிர் இலையின்
சிவந்த கூர்நுனியில்
இதழ்
பூட்டுகிறாய்

நரம்புகள் மொத்தமும்
திறந்துக் கொள்ள

புன்னகையொன்று
சாவியாகிறது

****

வார்த்தைகளின் கிளை..

*
ஆழமற்று நீந்தும் நினைவில்
ஒரு மென் சுழி உருவாகி
அழைக்கிறது

மனதின் கரையோரம்
ஓங்கி வளர்ந்த வார்த்தைகளின்
கிளையில்

பழுத்துத் தொங்கும்
ஒற்றை
இலையை

****

நிழலை மட்டும் விட்டுப் போகிறாய்..

*
சின்னஞ்சிறு புள்ளியில்
புன்னகை ஒன்று
குவிந்து கிடந்தது

மெல்ல நடந்து
அருகே வருகிறாய்
குனிந்து
எடுத்துக் கொள்கிறாய்

உன்
நிழலை மட்டும்
விட்டுப் போகிறாய்

பசியோடு விழுங்கத்
தொடங்குகிறது
இரவு

தெரு விளக்குகள்
மினுக்கி மினுக்கி பூக்கின்றன
ஆரஞ்சு நிற வர்ணம் குழைந்து
பாதையெங்கும் கசிகிறது

இனி நீ வரப்போவதில்லை
என்றபடி
அவிழ்ந்து கீழிறங்குகிறது
ஒரு
கனத்த மழைத் துளி

****

நத்தையின் நிழல்..

*
கைவிடப் படும்
ஒரு தருணத்தின் ஓரப் பிசிறுகள்
கொஞ்சம் கூர்மையாகிறது

அது ஒரு
பூ வேலைப்பாடு அல்ல
பிடித்தமான கைக்குட்டையில்
வரைந்து வைத்துக் கொள்ள

வலி..

வானம் கிழிந்து மின்னல் அறுந்து
பூமி மீது பற்றி எரியும்
மரக் கிளையில்
ஊர்ந்து கடக்கும் நத்தையின் நிழல்
அந்தக் கூர்மை

****

வாக்குறுதியின் நிழல்

*
அது
ஒரு வெளியேற்றம்

ஓயாத பேச்சிலிருந்து
மௌனத்துக்கு

வாக்குறுதியின் நிழலிருந்து
பொய்யின் வெளிச்சத்துக்கு

மரணத்தின் மழையிலிருந்து
வாழ்தலின் கூரைக்கு

****

தீண்டல்..

*
நீங்குதல் குறித்து
வாதிக்கின்றன நாவுகள்

தீயின் தீண்டலில்
சாம்பலாகிறது
உரையாடல்

ஒழுகியோடும்
நினப் பிசுபிசுப்பில்

பெயர் கருகி சாகிறது
மாமிசம்

****

இன்னும் கொஞ்சம் காதல்..

*
அப்படிச் சொல்ல வேண்டாம்
நான் அதை
நம்பப் போவதில்லை

தழலென எரிந்து
மிச்சமாகும்
சாம்பலில் உயிர்த்தெழ

கைவசமிருக்கிறது
இன்னும் கொஞ்சம் காதல்

எனவே..

அப்படிச் சொல்ல வேண்டாம்
நான் மட்டுமல்ல
நீங்களும்
அதை நம்பப் போவதில்லை

****

வானெங்கும் மலர்கள் உதிரத் தொடங்கிய கணம்..

*
ஒரு
கனவை வடிக்கட்டுவதற்கு
இந்த இரவின்
மறு நுனியை இழுத்துப் பிடிக்க
உன் ஒருத்தியை மட்டுமே
அழைத்திருந்தேன்

நீயுன்
பால்கனி தொட்டியில் பூப்பதற்கு
குளிர் மேவும் இருளில்
குவிந்து காத்துக் கிடக்கிறாய்

பிறகு..

என் வானெங்கும்
மலர்கள் உதிரத் தொடங்கிய
கணம் முதல்
இந்தத் தனிமைப்
படுக்கையறை முழுதும்

மெல்லப் பரவுகிறது
உன்
முத்த வாசம்..

****

திங்கள், நவம்பர் 22, 2010

பாதையோர நீள் இருக்கை..

*
சார்புகளற்று நீளும்
இந்தச் சாலையில்

வெகுதூரப் பயணக் களைப்போடு
இளைப்பாறத் தோன்றும்
ஒரு புள்ளியில்

ஓய்வெடுக்க விரும்பும்
பாதையோர
நீள் இருக்கையை
விவாத மேடையாக்கும்
பொருட்டு

இடம் பிடித்து
காத்திருக்கிறீர்கள்..

****

பட்டறை

*
என் எழுது விரலின்
நகத்தை
உங்கள் பட்டறையில் சானைப் பிடித்த
வார்த்தை இடுக்கிக் கொண்டு
பிய்த்து எடுத்தீர்கள்

இனி கவிதைகளைத்
தொட்டுத் திருப்புவது சாத்தியமில்லை

இந்த
சித்திரவதையை
எப்போது வரைந்தீர்கள்

****

பருகுவதற்குரிய வெற்றிடங்கள்

*
ஒரு காலி தண்ணீர் பாட்டில்
காத்திருக்கிறது
மீண்டும் நிரப்பப்படுவதற்கு

பெருகும் நிராசைகளை
குமிழ் விட்டு
ததும்பும் ஏக்கங்களோடு

பகல்களை குளிரூட்டவும்
சில்லிடும் தனிமை இரவுகளை
வெப்பமேற்றவும்

பருகுவதற்குரிய
வெற்றிடங்களை
நிரப்புவதற்கு
காத்திருக்கிறது

எப்போதுமே
ஒரு
காலி மது பாட்டிலும்

****

வாக்குறுதியின் அபத்தம்

*
அத்தனை நிச்சயமாக
உனக்கு சொல்ல முடிந்ததில்லை
இந்த வாக்குறுதியின்
அபத்தம் பற்றி

உனக்கொரு மெயில்
அனுப்பவே திட்டமிட்டிருந்தேன்
நீ
எப்போதோ கைவிட்டு விட்ட
உன் பழைய
மின்னஞ்சல் முகவரிக்கு

****

ஆலங்கட்டி..

*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே

பிசுபிசுக்கும்
உன் கண்ணீர் குரலாய்
ஆலங்கட்டிக் கொள்கிறது

இந்த உரையாடல்..

****

பொத்தல்..

*
நீயுன் சகவாசத்தை
விட்டொழிக்க வேண்டும்

நான் டீ குடிக்கப்
பழகிவிட்ட பகல் பொழுதுகளை
உன் சிகரெட் கொண்டு
பொசுக்குகிறாய்

ஆடைக் கட்டிக் கொள்ளும்
நம் உரையாடல்களில்
கருகும் வாசனையுடன்
விழும் பொத்தல்களை
நான்
விரும்பவில்லை

****

மெல்ல..மெல்ல..

*
ஒரு
தற்கொலைக்கு முன்பு
எழுதப்படும் குறிப்பு

மெல்ல மெல்ல
தன்னைத் தானே
எழுதிக் கொள்கிறது

தன் இறுதி வடிவத்தின்
கடைசிப் புள்ளியை
தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை
அது
தொடும்போது

எல்லாம் முடிந்து விடுகிறது

****

அப்படியே விடு..

*
காதறுந்த பை நிறைய
பொய்க் கொண்டு
வருகிறாய்

பிடி நழுவ
சிதற விடுகிறாய்
என் அறையெங்கும்

பொறுக்காதே அப்படியே விடு..

கதவை
அதிராமல் சார்த்தி விட்டுப் போ..!

****

சக்கையாகும் பசுங் கானகம்..

*
மத யானையின்
துதிக் கை ஒன்று
துலாவுகிறது மரணத்தை..

அகப்பட்டதும்
விசிறியடிக்கிறது

சக்கையாகிப் பெருகும்
பசுங் கானகத்தை
அங்குசத்தில் ஏன் செருகினாய்
பாகா..!

****

இன்னுமோர் உரையாடல்..

*
நம்
உரையாடல்
தொலைந்துப் போய்விட்டதாக
வந்து நிற்கிறாய்

இன்னுமோர்
உரையாடலுக்கு
இங்கே அவகாசம் இல்லை

தொலைந்ததைக் கண்டு பிடிக்க
நீயும் தொலைந்து போ..!

****

வட்டமென வியர்த்திருக்கிறது உன் மழை..

*
நீ
கன்னஞ்சுழிய ஏறிப் போன
பேருந்தின்
ஜன்னல் கண்ணாடியெங்கும்
பொட்டுப் பொட்டாய்
வியர்த்திருக்கிறது
மழைக்கும்

உன் வெட்கத்தை
வட்டமென ஒளிர்கிறது
எல்லோரும் கடக்கக் காத்திருக்கும்
இந்த சிக்னல்

***

மழைக் கப்பல்..

*
மழைச் சகதிக்குள் விரையும்
சிறுமியின்
கப்பலை நிறுத்திவிட

மூழ்குகிறது

பாதத்தில் பழசாகிவிட்ட
செருப்பொன்று

****

உன்னைச் சார்ந்திருத்தல்..

*
காத்திருந்த வரையில்
எதுவும்
தோன்றவில்லை

உன்னைச் சார்ந்திருத்தல்
எனக்கு
ஒரு குடையல்ல

உன் பொழிதலில்
எல்லாம் நிகழ்கிறது

யாதொரு சமரசமும்
முளைவிடும் பொருட்டு
காத்திருப்பதில்லை உனக்காக

காத்திருந்த வரையில்
எதுவும்
தோன்றவில்லை


****

இரவின் ரகசிய கூடுகள்..

*
ஜன்னல் கம்பிகளை
இந்த நிலா வெளிச்சம்
ஏன்
கோடுகளாக்குகிறது..

முருங்கை மரத்தின்
இலை நிழல்களும் சேர்ந்து
கும்மாளமடிக்கிறது

காற்று உலுக்கும் தன்
சிறு மஞ்சள் மலர்களைப் பற்றி
என் ஜன்னல் திண்டில்
அவை தூவும் புகார்களை

விடியலில் வரும் வாடிக்கை அணில்கள்
கவர்ந்து போகின்றன
தம் ரகசிய கூடுகளுக்கு

கிளையில் அமர்ந்து
இந்த ஜன்னல் வழியே
என்
அறை சுவற்றின்
கடிகார நொடி முள்ளின் நகர்தலை
பின் ஜாமம் வரை வேடிக்கைப் பார்த்து விட்டு

பறந்து விடுகிறது
ஓர் ஆந்தை

என்
ஜன்னல் கம்பிகளை
இந்த நிலா வெளிச்சம்
ஏன்
கோடுகளாக்குகிறது..!?

****

அவர்கள்..

*
அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை

ஒரு மௌனத்தை உடைத்து
நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு

ஒரு கோரிக்கையை
கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு

ஒரு புன்னகையின்
அகால மரணத்துக்குரிய
ஈமக் காரியங்களுக்கு பிறகு

கனவின் கூச்சல்களை
மொழிபெயர்த்து வாசித்துக் காட்டிய
மனப் பிறழ்வுக்கு பிறகு

ஒவ்வொன்றின் உதிர்விலும்
தடயமற்று போவதிலும்
இருந்த அவர்கள்

அதன் பிறகு
வரவேயில்லை..

****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ நவம்பர் - 28 - 2010 ]

http://navinavirutcham.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B

தவறவிட்ட தருணங்களின் மறு வருகை..

*
உன் தனிப்பார்வைக்கு
அனுப்பப்படும்
துயரங்கள் மொத்தமும்
என்னுடையவை அல்ல

நீ கேட்டுப் பழகிய சாயலை
அவை ஒத்திருக்கின்றன

அது
தற்செயல் அல்ல

கனவு கலைந்து எழும்
ஒரு தனிமை இரவின்
நிழலைப் போல்
உன் இருப்போடு இணைந்தவை

நீ தவறவிட்ட
தருணங்களின் மறு வருகை

உன் சூழ்ச்சிகளின் ரகசியங்களை
ஒரு
வாக்குமூலம் போல
உன்னிடம் ஒப்பித்துக் காட்ட
உனக்காக
அவை காத்திருக்கின்றன

மொத்தத்தையும்
ஒரே மூச்சில்
ஒரே இரவில் படித்துவிட வேண்டும்
என்றெந்த நிபந்தனையும்
இல்லை

பிரியப்பட்டால்
அவைகளை நீ பிரிக்காமல்
உன்
மேஜையின்
ஓர் ஓரத்தில் அப்படியே
விட்டும் விடலாம்

****

அது என்ற ஒன்று..

*
ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள்
அது
உங்களின் ஒரு பகுதி என்பதை
நம்ப மறுப்பீர்கள்

அதை
ஏற்றுக் கொள்வதில் இருக்கும்
அசௌகரியத்தை
வாதிட்டு வென்று விடுவீர்கள்

பாதுகாப்பைக் கோரும்
ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல்
அது
உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி
அலைவதை
கவனிக்க மறந்து விடுவீர்கள்

உங்கள் துயரத்தின் பாடலை
அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும்

உங்கள் தோல்வியின் குறிப்புகளை
அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து
எழுதிக் கொண்டிருக்கும்

உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத
முனகல்களை
இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும்

அது ஒரு
சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும்
உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக
உங்கள் மீதான ஒரு புகாருக்காக
நீங்கள் தான் உங்களின் அவமானம்
என்பதை உரைப்பதற்காக

அது
காத்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் தவற விடும்
அந்த ஒன்று
உங்களின் ஒரு பகுதி என்பதை
இப்போதும்
நம்ப மறுப்பீர்கள்..!

*****

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ நவம்பர் - 21 - 2010 ]

http://navinavirutcham.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B

என்னொருவனைத் தவிர..

*
எருதின் பலத்து வீசும்
பெருமூச்சில்
சிதறிப் பறக்கிறது
மனப்புழுதி

மரணக் கடிதம்
கூரியரில் வந்தபோது
வழியனுப்பி வைக்க பரபரப்பாகிறது
சுற்றமும் நட்பும்

என்னொருவனைத் தவிர
எல்லோராலும் வாசிக்கப்பட்ட நான்
ஹாலில் கிடத்தப்படுகிறேன்

பலத்து வெளியேறிய
ஒரு
பெருமூச்சு மட்டுமே
நினைவிலிருக்கிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3721

சிரிப்பதைப் பற்றிப் பேசத் தொடங்கும் மனிதன்

*
சிரிப்பதைப் பற்றி பேசத் தொடங்கும் மனிதனோடு
அதன் அடுக்குகள் சரிகின்றன

பளபளக்கும் விளிம்புகளோடு
பிளந்த உதடுகளின் பின்னிருந்து
மேலும் கரைப்படுகிறது காவி நிறப் பொய்கள்

வெளிர் மஞ்சள் பூஞ்சையோடு
வரிசைக் கட்டி நிற்கும் பற்கள்
சிரிப்புக்குரிய சந்தர்ப்பங்களைத்
தன்
இடுக்குகளில் மர்மமாய்
செருகி வைத்திருப்பதாக
குறிப்புகளை
நாக்கில் ஏற்றுகின்றன

சிரிப்பதைப் பற்றி பேசத் தொடங்கும்
மனிதன்

ஒரு அசந்தர்ப்பத்தை
ஒரு அவமானத்தை
ஒரு கையாலாகாத்தனத்தை
ஒரு மோசமான சூழ்நிலையில் தலைத் தூக்கும்
அசௌகரியத்தை
ஒரு இன்னலை

அல்லது

புரிந்துகொள்ள முடியாத
ஒரு மௌனத்தை
ஒரு மாபெரும் இறைஞ்சுதலை
கேள்விக்குள்ளாக்குவதிலிருந்து தொடங்குகிறான்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3703

துரோகத்தின் மணல்

*
நுண்ணிய கூர் முனையிலிருந்து
உடைந்து விழுகிறது
துரோகத்தின் மணல்

மனம் நகரும் பாதையெங்கும்
பெருகுகிறது

ஆழப் புதையச் செய்கிறது
எழுதி வைத்த
நினைவின் குறிப்புகளை

வானமற்ற வெளியின்
பரந்த மைதானத்தில்
தனித்து நின்று
கூக்குரலிட்டு அழ நேரும் தருணத்தை
திரளென வழியச் செய்கிறது
மௌனத்தின் கன்னத்தில்

துரோகத்தின் மணல்
பாவங்களை உருட்டும் விரல்களுக்கிடையே
உறுத்துகிறது
பிரார்த்தனையொன்றை முணுமுணுக்கும்
உதடுகளின் நிமிடங்களில்

நயம்படச் சொல்லும் பொய்களில்
குளிர்ந்து கிடக்கும் நெருப்புத் துண்டைப் போல்
நுண்ணிய கூர் முனையிலிருந்து
உடைந்து விழ
அமைதியாகக் காத்திருக்கிறது
ஒரு
துரோகத்தின் மணல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3654

சின்னஞ்சிறிய ஊற்றுக் கண்

*
உன் வார்த்தைகளின் ரசவாதம்
என்னை
உன் கனவுகளின் சதுப்பில்
கொஞ்சங்கொஞ்சமாக
ஊற்றிக் கொண்டிருக்கிறது

நீயுன் வலுவற்ற வார்த்தைகளை
என்னை நோக்கி நீட்டி
பற்றிக் கொள்ளும்படி செய்கிறாய்

ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும்
இடையில் நீ வெட்டி வைக்கும் பள்ளத்தைக்
கடந்து வர ஒரு பயணம் தேவையாகிறது

அது
உன் பாதங்களின் வழியே என்னை செலுத்தி
என் திசைகளை என்னிடமிருந்து
பிடுங்கி தொலைவில் எறிகிறது

உன் கவிதையின்
சின்னஞ்சிறிய ஊற்றுக் கண்ணுக்குள்
நுழையும் முன்பு தெரிவதில்லை
கடலொன்று பேரமைதியோடு
உள்ளே மிதப்பது

நீ
என்னை உன் மனவெளியெங்கும்
முதுகில் சுமந்து
நடந்து நடந்து
பட்டென்று உதிர்த்து விட்டுப் போகிறாய்

அது
தகிக்கும் வார்த்தைகளின் பாலைவனமாக
வரிகளை
நிழல் நிழலாக வரைந்து வைத்திருக்கிறது

அனைத்தும் நீயாக
நான் மட்டும் இன்றும் தனித்து நிற்கிறேன்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3627

நிறமிழக்கும் பொழுதில் எல்லா இரவுகளும்..

*
மனம்
மெல்ல நகர்கிறது
அவமானத்தின் முள் துடித்து

ஒரு எளிய நம்பிக்கை
நிறமிழக்கும் பொழுதில்
எல்லா இரவுகளும்
தம் புறவாசலில்
சிறுநீர் ஓடையை அனுமதிக்கின்றன

கொஞ்சமேனும் பற்றிக் கொள்ளும்
யாதொரு பிடிப்பிலும்
கல்லெறியும் சாதுர்ய புன்னகை
நறுவிசாய் உடைத்துப் போகிறது
ஒட்டுமொத்த சொற்களையும்

தன் முறைக்கென நிற்கும்
நீண்ட வரிசையில்
கை நழுவிப் போகிறது
இதுவரை
சொல்லப்பட்டிருந்த
எல்லாக் கட்டுமானங்களும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3604

புன்னகை இழந்து..நாட்கள் அனலாடும் தருணம்..

*
ஒரு முறையாவது சொல்லிப் போ
தீயில் எரியும் என் கனவின் கதவில்
உன் இலக்கம் எத்தனை..

வானம் கிழிந்து
நிலவு வழிந்தத் தடத்தில் உன் காலடிச் சுவடு எது..

புன்னகை இழந்து..நாட்கள் அனலாடும் தருணம்
சிறகு உதிரப் பறத்தல்
வாய்ப்பதில்லை

எழுதுகிற குறிப்பின் நிழலில் மறைகிறது
கால் புள்ளி - அரைப் புள்ளி -
மற்றுமொரு முற்றுப்புள்ளி

நீயற்றுப் போகும் இடைவெளியில்
எல்லாம் எரிகிறது..

சொல்லிப் போ
உன் இலக்கம் எத்தனை..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11644&Itemid=139

விஷம் துளிர்க்கும் காம்பு..

*
இருள் கிழிய
சிவந்த டிராகனின் முதுகுச் செதில்
நெளிகிறது
முதுகில்

பச்சைப் பாம்பு விழுங்க விம்மும்
கனியின் விஷம் துளிர்க்கும்
காம்பில்

முடிவுற்று நீளும்
முதல் பாவம்
காமத் தோட்டத்து
கறுத்தப் புதர்களில் சுருள்கிறது

முனையெது நுனியெது..

குழம்பும் களிப்பை
சக்கையாக்கி செரிக்கிறது
கண்கொத்தி இரவு..

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 19 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11489&Itemid=139

இலையொன்று உதிர்ந்து பூமி தொடும் அவகாசம்..

*
அசலான ஒரு நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

பிரிவின் துயரை
நகம் கடித்துத் துப்பிவிட
முடிகிறது உன்னால்

இலையொன்று உதிர்ந்து
பூமி தொடும் அவகாசத்தில்
முடிவுகள் எடுக்கிறாய்

மென்மை விரிசலில்
உடையக் காத்திருப்பது கண்ணாடியல்ல
இது நெடுக
இரவுகளில்
நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்கள்

கோபத்தில் துடிக்கும் உன் உதடுகளில்
எனக்காக
நீ வாசித்துக் காட்டிய
கவிதைகளின் ஈரம்
கொஞ்சமாவது மிச்சமிருக்கும்

ஆனால்
அடம் பிடிக்கிறாய்

என்
அசலான நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

ஒரு வருடமாவது
சேர்ந்து வாழ வேண்டுமென..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 17 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11432&Itemid=139

வியாழன், நவம்பர் 18, 2010

கண் திறக்கும் தருணம்

*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
கவிதை

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 16 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11409&Itemid=139

நீலப் பூக்களின் மகரந்தத் துகள்..

*

அகப்பட்டுக் கொள்ளும்
தடயங்களோடு தான்
உனது எல்லைகளைக் கடக்கிறேன்

நீலம் சொரியும் பூக்களின்
மகரந்தத் துகள்களின்
மஞ்சள் பூசி
வெட்கம் சிவக்கவே
உனது வேர்களில் ஈரமாகிறேன்

என்னைப் பறிக்க நீளும்
விரல் நகங்களின் வெண்ணிறக் கோடுகளில்
நுணுக்கமாக எழுதி வை
என்
பிரியத்தை..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 15 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11369&Itemid=139

நட்சத்திரங்கள்..

*
சோடியம் வேப்பர் விளக்கிலிருந்து
மஞ்சள் ஒளிரும்
ட்ராபிக் நேர இரவுச் சாலை..

முன் செல்லும்
பைக் பில்லியனில் உட்கார்ந்திருக்கும்
அம்மாவின் மடியிலிருந்து
குட்டி பாப்பா..

தன்
ஒரு கை மட்டும் வான் நோக்கி நீட்டி
ஐந்து விரல்களை
அகல விரித்து விரித்து மூடி..

நட்சத்திரங்களுக்குக் காட்டுகிறாள்

தன்
ஒற்றை நட்சத்திரம்
இதுவென..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 14 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11349&Itemid=139

பார்வையாளர் இல்லாத மேடையின் திரைச்சீலை..

*
சொல்லிப் பிரியும் சொல்லில்
திரித்துக் கட்டப்படுகிறது
நைந்த பிரியத்தின் இழைகள்

தனித்த சாலையின்
நினைவுச் சில்லிடல்
இரவின் குளிரை அனுப்பிவைக்கிறது
வாசல் வரை

அகாலத்தின் மௌனத்தில்
மனம் முணுமுணுக்கும்
மொழியில்
பார்வையாளர் இல்லாத மேடையின்
திரைச்சீலையாக
மடிந்து மடிந்து கீழிறங்குகிறது
சொல்லிப் பிரிந்த
சொல்லின் பிரியம்

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 7 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11275&Itemid=139

மெட்ரோ..

*
கானல் நீரை
அரைத்துக் கருகி கசிகிறது
டயரின் வாசம் குப்பென்று

அவசரமாய் போட்ட பிரேக்கை மீறி
ஒருவன்
மண்டை உடைந்தும்
இன்னொருவன்
வயிறு சிதைந்தும் உயிரிழந்தான்..

பீக்-அவர் டிராபிக் ஸ்தம்பித்த
சில நிமிடங்கள்

விபத்துக்குள்ளான வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டது
பிணங்கள் அப்புறப்படுத்தப்பட்டன

தார்ச் சாலையோடு உருகிய
இரண்டு ரத்தங்களை
தாகத்தோடு உறிஞ்சும்
வெயிலுக்கு போட்டியாக..

மேலும் டயர்கள்
மேலும் பல டயர்கள்

பச்சை விளக்கும் ஹாரன் ஒலியும்
கூடவே
மேலும் பல டயர்கள்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 2 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11227&Itemid=139

எதிர்ப்படும் கையகல நீர்மை..

*
வார்த்தைகளின் பிரதேசத்தில்
கால் ஓய நடந்த பின்னும்
சிக்கவில்லை
ஓர் எழுத்தும்

எதிர்ப்பட்ட
வாக்கியக் குட்டையின்
கையகல நீர்மைக்குள்

நெடுநாளாய் எவர் வரவுமற்று
குழப்பத்துடன்
நீந்திக் கொண்டிருக்கிறது

ஒரு
மௌன மீன் குஞ்சு..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 28 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011283&format=html

வினோத மலரொன்றின் இதழ் நுனி..

*
வினோத மலரொன்றின்
இதழ் நுனிப் பற்றி ஊசலாடுகிறான்

மணற் புயல் போல்
பூவினுள்ளிருந்து பலமாய் வீசுகிறது
மகரந்தத் துகள்

மஞ்சள் அடர்ந்து
முகத்தில் படர
மூர்ச்சையாகி மண்ணில் குழைகிறான்

இன்னொரு வசந்தத்தில்
செடியின்
மற்றுமோர் தளிர் கிளையில்
பெயரற்ற வினோத மலராய்ப் பூக்கிறான்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 21 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112114&format=html

பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..

*
நிர்ப்பந்தித்து உருள்கிறது
வார்த்தைகளுக்கான சரிவில்
மொழியின் திரள்

சிறுப் பள்ளங்களில் கொஞ்சமேனும்
தேங்குகிறது
நம் உரையாடல்

ஒரு சில சொட்டுகளில்
வடிந்தும் விடுகிறது
நேற்றைய இரவு

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 14 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011145&format=html

மீட்சியற்ற வனத்தின் கானல்

*
எங்கிருந்தாவது என்னைத் தொடங்கு
என்பதாகத் தான் எனது பிரார்த்தனை
உன்னை நோக்கி நீள்கிறது

நீ உனது கருணையற்ற பார்வையால்
எனது இரவின் அகாலத்தைக் கொளுத்திப் போடுகிறாய்

என் கனவுகள் பசித்திருப்பதை ரட்சிக்கிறாய்
மீட்சியற்ற வனத்தின் கானல் குட்டையில்
சிவந்து மூழ்கும் மௌனங்களென நெளிகிறாய்

ஒவ்வொன்றாக அடுக்கி பின்
குலையும் சந்திப்புகளை
ஒரு விசிறியைப் போல் விரித்து
கையில் கொடுத்துச் செல்கிறாய்

எங்கிருந்தாவது என்னைத் தொடங்கு
என்பதாகத் தான் எனது பிரார்த்தனை
தனித்து உட்கார்ந்திருக்கிறது
உன்
ஆலயத்தின் நீளமான படிக்கட்டுகளில்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 7 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110719&format=html

மடங்கி நீளும் சொற்ப நிழல்..

*
மற்றுமொரு காயத்தை
நேற்று கொண்டு வந்து சேர்ப்பித்தாய்

இன்றிரவின் உரையாடல் முழுக்க
அதன் துர்வாடை.

அதனால் என்ன..

பிரிவது என்ற தீர்மானங்களுக்கு முன்
இந்த மேஜையில்
எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்தாலும்
கவலையற்றுப் போகிறோம்

இந்தக் குறைந்த வெளிச்சத்தில்
மடங்கி நீளும்
சொற்ப நிழலுக்குள்
முன்பொரு முறை பரிமாறிக்கொண்ட
முத்த வெப்பத்தின்
அண்மை..
உடலுக்குள் மட்டுமல்லாமல்

நினைவின்
பிரதேசமெங்கும்
கொடிச் சுற்றிப் பின்னுகிறது
வலியை அடையாளமிட்டு..

அதனால் என்ன..

மற்றுமொரு காயத்தை
நாளையும் கொண்டு வருவாய்..

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர்- 1 - 2011 ) http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110117&format=html