திங்கள், நவம்பர் 22, 2010

துரோகத்தின் மணல்

*
நுண்ணிய கூர் முனையிலிருந்து
உடைந்து விழுகிறது
துரோகத்தின் மணல்

மனம் நகரும் பாதையெங்கும்
பெருகுகிறது

ஆழப் புதையச் செய்கிறது
எழுதி வைத்த
நினைவின் குறிப்புகளை

வானமற்ற வெளியின்
பரந்த மைதானத்தில்
தனித்து நின்று
கூக்குரலிட்டு அழ நேரும் தருணத்தை
திரளென வழியச் செய்கிறது
மௌனத்தின் கன்னத்தில்

துரோகத்தின் மணல்
பாவங்களை உருட்டும் விரல்களுக்கிடையே
உறுத்துகிறது
பிரார்த்தனையொன்றை முணுமுணுக்கும்
உதடுகளின் நிமிடங்களில்

நயம்படச் சொல்லும் பொய்களில்
குளிர்ந்து கிடக்கும் நெருப்புத் துண்டைப் போல்
நுண்ணிய கூர் முனையிலிருந்து
உடைந்து விழ
அமைதியாகக் காத்திருக்கிறது
ஒரு
துரோகத்தின் மணல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3654

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக