திங்கள், நவம்பர் 22, 2010

சின்னஞ்சிறிய ஊற்றுக் கண்

*
உன் வார்த்தைகளின் ரசவாதம்
என்னை
உன் கனவுகளின் சதுப்பில்
கொஞ்சங்கொஞ்சமாக
ஊற்றிக் கொண்டிருக்கிறது

நீயுன் வலுவற்ற வார்த்தைகளை
என்னை நோக்கி நீட்டி
பற்றிக் கொள்ளும்படி செய்கிறாய்

ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும்
இடையில் நீ வெட்டி வைக்கும் பள்ளத்தைக்
கடந்து வர ஒரு பயணம் தேவையாகிறது

அது
உன் பாதங்களின் வழியே என்னை செலுத்தி
என் திசைகளை என்னிடமிருந்து
பிடுங்கி தொலைவில் எறிகிறது

உன் கவிதையின்
சின்னஞ்சிறிய ஊற்றுக் கண்ணுக்குள்
நுழையும் முன்பு தெரிவதில்லை
கடலொன்று பேரமைதியோடு
உள்ளே மிதப்பது

நீ
என்னை உன் மனவெளியெங்கும்
முதுகில் சுமந்து
நடந்து நடந்து
பட்டென்று உதிர்த்து விட்டுப் போகிறாய்

அது
தகிக்கும் வார்த்தைகளின் பாலைவனமாக
வரிகளை
நிழல் நிழலாக வரைந்து வைத்திருக்கிறது

அனைத்தும் நீயாக
நான் மட்டும் இன்றும் தனித்து நிற்கிறேன்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3627

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக