*
சிரிப்பதைப் பற்றி பேசத் தொடங்கும் மனிதனோடு
அதன் அடுக்குகள் சரிகின்றன
பளபளக்கும் விளிம்புகளோடு
பிளந்த உதடுகளின் பின்னிருந்து
மேலும் கரைப்படுகிறது காவி நிறப் பொய்கள்
வெளிர் மஞ்சள் பூஞ்சையோடு
வரிசைக் கட்டி நிற்கும் பற்கள்
சிரிப்புக்குரிய சந்தர்ப்பங்களைத்
தன்
இடுக்குகளில் மர்மமாய்
செருகி வைத்திருப்பதாக
குறிப்புகளை
நாக்கில் ஏற்றுகின்றன
சிரிப்பதைப் பற்றி பேசத் தொடங்கும்
மனிதன்
ஒரு அசந்தர்ப்பத்தை
ஒரு அவமானத்தை
ஒரு கையாலாகாத்தனத்தை
ஒரு மோசமான சூழ்நிலையில் தலைத் தூக்கும்
அசௌகரியத்தை
ஒரு இன்னலை
அல்லது
புரிந்துகொள்ள முடியாத
ஒரு மௌனத்தை
ஒரு மாபெரும் இறைஞ்சுதலை
கேள்விக்குள்ளாக்குவதிலிருந்து தொடங்குகிறான்
*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3703
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக