திங்கள், டிசம்பர் 13, 2010

இடுப்புயர கரடி பொம்மைகள்..

*

பிறந்த நாள் பரிசாக
குழந்தைகளுக்கு வந்த
இடுப்புயர கரடி பொம்மைகள்
'அழுக்காகி விடும்..!' - என்ற அதட்டலோடு

விளையாட்டு மறுக்கப்பட்டு
பாலிதீன் கவர் சுற்றி
உயரமான ஷோ- கேஸில்
தஞ்சமாகிறது

கால ஓட்டத்தில்
உருமாறும் விளையாட்டுகளோடு
வளர்ந்துவிடும் பிள்ளைகள்

இடம்பற்றாக் குறையுடன்
பைக்கொள்ளா புத்தகங்களோடு
அண்ணாந்து பார்த்துக் கேட்கின்றனர்

'ஏன்ம்மா...குப்பை மாதிரி
இன்னும் பொம்மையெல்லாம்
அடைச்சி வச்சிருக்க..?
காலி பண்ணிக் குடு
நாங்க புக்ஸ் அடுக்கனும்..'

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 28 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12087&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக