செவ்வாய், பிப்ரவரி 10, 2009

மௌனமாகி..



*
கண்களின் மொழிப்பெயர்ப்பில்
தவறாகிப் போன ஒரு கனவை..
காதலென்று நம்பினேன் நான்.
கவிதையென்று சிரிக்கிறாய் நீ.!

ஒவ்வொரு உச்சரிப்பிலும்
அர்த்தமிழக்கும் என் வார்த்தைகளை
உளறல் என்று சாடுகிறாய்.

அடைகாத்து அடைகாத்து..
என் பொறுமைகள் எல்லாம்..
குஞ்சு பொறித்து.. இறக்கை முளைத்து..
பறந்தும் போய் விட்டன.
மிச்சமிருப்பது நான் மட்டுமே.!

மழை பொழியும் இரவுகளில்
நிலவுக்கு குடைப் பிடிக்க..
ஏங்கும் என் இதயத்துக்குள் -
நீ... ஒரு சாரல் போலாவது
எட்டிப் பார்க்கக் கூடாதா?

இப்படி...
சதா மௌனமாய்..
உனக்குள் மூழ்கி.. நீ எதைத் தேடுகிறாயோ..
அதை..
நானல்லவா வைத்திருக்கிறேன்.!

கேட்டால் தராமலா போய்விடுவேன்..?

பிடிமானம் நழுவிய ஒரு கணத்தில்..
உன் புன்னகையின் வளைவில்..
சிக்கிக் கொண்டது என் இதயம்.
நீயோ..! கைக்குட்டையால்
அதைத் துடைக்கப் பார்க்கிறாய்.!

உன்
மீசை முடி ஒவ்வொன்றும்..
சிரமப்பட்டு சிரமப்பட்டு வரைந்ததாகவே..
வெளிப்படுகிறது எப்போதும் உன் புன்னகை.!

அதை
எனக்குப் பரிசாகத் தர..
உனக்கேன் இத்தனைத் தயக்கம்.?

*************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக