வியாழன், ஏப்ரல் 26, 2012

ஆளற்ற கப்பலின் பாலை வெளி..

*
உதிர்ந்து விடுதல் குறித்து
தலைக் குடைந்து நீண்ட இரவை
உள்ளங்கையில் கட்டைவிரல் கொண்டு தேய்த்தபடி
அழியும் ரேகை நூலில்
ஆளற்ற ஒரு கப்பல் நின்றது

காற்று எழுதிய நெளி அலைகள் நிரம்பிய நிழல் மணல் வெளி
ஒட்டகக் கால் தடங்கள் குழிந்து குழிந்து
மனக் கிடங்கு வரை இழுத்துப் போயிற்று

துருவேறிச் சிவந்த இரும்புச் சுவர்களோடு
நின்ற கப்பலின் உள்ளே வெற்றிடமிருக்கிறது

தவிர
நினைவை ரீங்கரிக்கும் ஓர் ஈயும்

அதன்
மென் கண்ணாடிச் சருகின் இறகை ஊடுருவும் வெயிலென
பரவுகிறேன் அப்பாலையெங்கும்
உதிரும் பொருட்டு

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 17 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19426&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக