புதன், ஜூலை 01, 2009

உறைந்த வெளிகள்..

*

நட்பென
குளிர்ந்து உறைந்த
வெளியில்..

சூரியனொன்று..
தலைக்குப்புற விழுந்து
நொறுங்கியது..

****

மற்றுமொரு உரையாடல்..

*
மது போத்தல்களின்
குறுகிய வாய்களில்..
மிதக்கின்றன..
உதடுகள்..

குழைந்து நெளிந்த
அதன் கழுத்து வளைவில்..
பதியும்..விரல் ரேகைகளில்..

வியர்த்துப் பூக்கின்றன..
போதையின்..
புள்ளிக் குமிழ்கள்..

உருகும்
பனித் துண்டங்களினின்றும்..
ஆவியாய் பிரிகின்றன..

சில்லிட்ட உரையாடல்கள் சில..

எதிர்ப்பட்டு..
பிளந்து கூடும் பிம்பங்களை..
ஊடறுத்து...

சிணுங்கி மோதும்
கண்ணாடி கோப்பைக்குள்..

அசைந்தபடி கொப்பளிக்கிறது..
பொன்னிறத்தில்..
மற்றுமொரு உரையாடல்..

*****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1712

இருளின் அடர்த்தியில் உதிரும் சிறகு..

*
அறையில்
இறுகி கெட்டித்திருக்கும்
இருளின் அடர்த்தியில்..

சிறு வீக்கமாய்
புடைத்திருக்கும்
சுவர் குண்டு விளக்கில்..

வழியும்
ஒளிக் குருதியை
பருகும் தாகத்தோடு..

சுழலும் ஈசலின்..
பார்வை..

பதிவு செய்கிறது..
உதிரும் தன் சிறகை..

பின்..
யாதொன்றும் செய்யவியலா..
கையறு நிலையென..

தரையில் ஊர்ந்து..
மௌனமாய்..
அறையை விட்டகலும்..

என்னிடம்...
சொல்லிக்கொள்ள மறந்தபடி..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1712

மெட்ரோ கவிதைகள் - 19

*
சிறுவன்
பேட்டைச் சுழற்றி அடித்த பந்து..

சிக்ஸரென..
ஒத்துக்கொள்ளப்பட்டது..

கட்டிடங்களுக்கிடையே..
உயர்ந்தெழுந்து..
அது...
தரையிறங்கிய இடம்..

பிளாட்பாரத்தில்..
பதியனிட்டு..பூத்திருந்த
கனகாம்பரச் செடியில்..

கிரிக்கெட்டில்
கலந்து கொள்ள முடியாத
தங்கை..

கைத் தட்டி..
சிரிப்போடு பார்த்தபடி
நின்றாள்..
வாயில் பிரஷ்ஷோடு..

'சனியனே..வந்து தொலைங்க..'

உள்ளிருந்து..
வேகமாய் வந்து விழுந்த
அதட்டல் குரல்..
விளையாட்டை..முடித்து வைத்தது..

அடுத்த கால் மணியில்..

பட்டாம்பூச்சிகளிரண்டும் ..
முதுகில் சுமையோடு..

சீருடைச் சிறைக்குள் அகப்பட்டு..
நடக்கின்றன..
சிறைக்கூடம் நோக்கி..

****

உந்துதல்..

*
கீழ்மையின் கனம்
தாங்கவொண்ணா..
பதற்ற நீட்சியை..

செதில்கலென
நினைவிற் செருகி..

நிரந்தர
பகிர்வுக்கான இழைகளை
அறுபட..
நிர்பந்திக்கும் பொருட்டு..

மனசின்
புறவாசலில்..
மண்டும்
விஷக் கொடிப் புதர்களை..
வேரோடு பிடுங்கி..தீயிலிட்ட
சாம்பலின் மிச்சங்கள்..

வாயகற்றி கொட்டுகிறது..
தனிமையின் உந்துதலை..

புறக்கணிக்கும்..
வக்கற்ற
கற்பனாயுத வெளியொன்று..
இனத்தின் சுவடுகளை தூசுகளாய்..

காற்றில் கிளப்பி..

தாங்கவொண்ணா
பதற்ற நீட்சியின் கீழ்மையின் கனம்
யுக யுகமாய் அலைகிறது..

*****

காகத்துடனான பகல்..

*

கா..கா - வென்று மட்டுமல்லாமல்..
'காவ்..காவ்..'
'க்வ்வாவ்..க்வ்வாவ்..' -
என்பதான..

மூன்று ஒலிக்குறிப்புகளை..
கலைத்து கலைத்து
புனைகின்றன..

இனத்துக்கான செய்திகளாகவுமின்றி..
நமக்கான சங்கேதமாகவும்..

நிலவை
ஒளித்து வைப்பதான
இரவுக்குரிய
பகல் பொழுதுகளை..
காகங்கள் கொண்டாடுகின்றன..

குழந்தைகளுக்கான
நிலாச் சோறு
உருண்டைகளாக வெய்யிலில் காய்வதை..

கான்க்ரீட் மாடியிலோ..
ஓட்டுக் கூரையிலோ..

அலகு பிளந்து..
ஆச்சரியமாய்..
வேடிக்கைப் பார்க்கின்றன..

தனக்கினையென
மனிதர்கள்
கூவும் ஒலியலைகளை..
மொழிப்பெயர்க்கும் பொருட்டு..

விழிகளில்..
உருண்டபடி இருக்கிறது..
பிரபஞ்ச இருள்..!

*****



பாட்டன் விந்து..

*
அசுர னெனவும்
அரக்கனாவும்
வரைந்து கொடுத்தீர்..

என்
பாட்டனின் பாட்டன் விந்தை..

புத்தாடைகளும்..
பட்டாசுகளுமாக
வெடிக்கின்றன..

ஆண்டுதோறும்..
அவன் மாமிசம்..

வெட்கமின்றி - பிரக்ஞையற்று..
வாழ்த்துக்களும்
சொல்லித் திரிகிறேன்..
பாட்டன்களின்
சாவு குறித்த துக்கம்
அறியும் திறனற்று..

குழந்தைகளை மட்டுமே..
மன்னிக்கக் கூடும்..

வெடிப்புகையில்..
மூச்சுத் திணறும்..
அவன் ஆன்மா..!

*****

நீர்நிலைப் பாலைவனம்..

*
நேற்றிரவு குடித்த
மதுவை..
துப்பிவிட..

ஆட்காட்டி விரலைத்
தொண்டைக்குழிக்குள்.. இறக்கி..

ஒக்காலமிட்ட நொடியில்..

கையில்.. பிசுப்பிசுப்பாய்..
வந்து விழுந்தது
கவிதையொன்று..

உள்ளங்கையில்..ஏந்தியபடி..
நீர்நிலையைத்
தேடி அலைகிறேன்..

மனம்
முழுக்க..
பாலைவனத்தைக்
கொட்டி வைத்திருக்கும்..
உன்னைத் திட்டியபடி..

*****

செந்நிற நதி..

*
சொல்லிவிடத் துடிக்கும் நாவில்..
குதிரைகளாகி உட்புறம் ஓடுகின்றன சொற்கள்..

நாளங்கள் இழுத்துப் போகும்
செந்நிற நதியில்..
பழுத்த இலையென பயணிக்கும்..தவிப்பை..

பின்மூளையின்..
'செரிபல'.. கரையில்..
ஒதுக்கி..

தொடர்ந்தோடுகிறது..
உடலெங்கும் விரியும்.. கடலை நோக்கி..
கலந்துவிடும் முனைப்போடு..

முடிந்தவரை..
சொற்களின் குளம்போசைகள்..
இதயத்தில் தேங்குகின்றன..
வாழ்வதாக பொய் சொல்லி..!

*****

நுண்ணுனர் செல்களின் தட்டாமாலை...

*
பிறிதோர் முயங்குதலில்..
உடல் வேட்கையின் பரந்த வெளியில்..
முகர்ந்தலையும் மிருகத்தின்..
மென்வெப்ப மூச்சுக் காற்றில்..
பிசிரெனப் பறந்தது காமத் துகள்..

சொட்டுத் திரவத்தின் சொற்ப பொழிதலில்..
கெட்டித்து விட்ட அங்குல.. படுகையில்...
வெடித்துக் கிளை பரப்பும்..இச்சை வேர் முனையும்..

நுண்ணுனர் செல்களின்.. தட்டாமாலையில்..
இறுகப் பற்றுதலாய் புடைக்கும் நரம்புகளும்..

ஊர்ந்து கிறங்கும் உடலின் வாய்க்காலில்..
கால் நனைந்தலையும் உயிரின் இலக்குகளும்..

உச்சம் நோக்கி ஏகும் பாய்ச்சலின் பொருட்டு..
ஊர் - பெயர் - இடம் அகன்று..
செத்து பிறப்பதாக..

பகிர்தலற்று புரண்டு படுப்பதில்..
முடியலாம் இரவு..

*****