புதன், ஜூலை 01, 2009

மெட்ரோ கவிதைகள் - 19

*
சிறுவன்
பேட்டைச் சுழற்றி அடித்த பந்து..

சிக்ஸரென..
ஒத்துக்கொள்ளப்பட்டது..

கட்டிடங்களுக்கிடையே..
உயர்ந்தெழுந்து..
அது...
தரையிறங்கிய இடம்..

பிளாட்பாரத்தில்..
பதியனிட்டு..பூத்திருந்த
கனகாம்பரச் செடியில்..

கிரிக்கெட்டில்
கலந்து கொள்ள முடியாத
தங்கை..

கைத் தட்டி..
சிரிப்போடு பார்த்தபடி
நின்றாள்..
வாயில் பிரஷ்ஷோடு..

'சனியனே..வந்து தொலைங்க..'

உள்ளிருந்து..
வேகமாய் வந்து விழுந்த
அதட்டல் குரல்..
விளையாட்டை..முடித்து வைத்தது..

அடுத்த கால் மணியில்..

பட்டாம்பூச்சிகளிரண்டும் ..
முதுகில் சுமையோடு..

சீருடைச் சிறைக்குள் அகப்பட்டு..
நடக்கின்றன..
சிறைக்கூடம் நோக்கி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக