சனி, ஜூலை 04, 2009

மேகமென கடந்து போகும்..தேநீர் ஆவிகள்

*

மழை பொழியத் தொடங்கிய போதே..
தெரிந்து கொண்டேன்..
நீ சீக்கிரம் வந்துவிடுவாய்..

சாலையோர சிறு பூக்களிலிருந்து..
புறப்பட்டுக் கொண்டிருந்தது..
மிக அமைதியான..
கேவல் ஒன்று..

அதை..
ஒரு இசைக்குறிப்பென...
சொட்டிக் கொண்டிருந்தது மழை..

நீ..கையோடு கொண்டு வந்த..
வார்த்தைகளை..
உணவக..சிப்பந்தி..தந்து சென்ற..
தேநீர் கோப்பையில்..
கலக்கத் தொடங்கினாய்..

கோப்பை விளிம்பின்..
இளஞ் சூட்டை முத்தமிட்டபடி..
பருகும் உதடுகளை..

தேநீர் ஆவிகள்..மேகமென கடந்து போனதில்..

உதடுகளுக்கு மேலாகவும்..
மூக்கு நுனுயிலும்..
மைக்ரோ புள்ளிகளாய்..
வியர்க்கத் தொடங்கியது
மற்றுமொரு மழை..

ஒலிப்பெருக்கியிலிருந்து..
இழைந்துருகிய.. வயலின்..இசை..
உன் கூந்தலில்..காய்ந்துவிட்ட
மல்லிகைச் சரத்தின்..
உதிரி மிச்சங்களை..

கேவலோடு...அழைத்தபடி..
ஜன்னல்..கடந்து..
தெருவில்..இறங்கி.. நனைகிறது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக