புதன், மே 18, 2011

பார்த்தலில் பதிவாகும் காந்த முள்..

*
நாட்களின் புதைவெளியில்
கணுக்கால் அழுந்தும் சதுப்பைப் போல்
ஈரமாய் பிசுபிசுக்கின்றன பகிராத வார்த்தைகள்

திசைக்காட்டத் தவறிய காந்த முள்ளாகிறது
கடந்து கொண்டிருக்கும் நிமிடம்

பற்றுதலுக்குரிய கரங்களின் ரேகை
இறுகக் குலுக்குகையில்
கசிந்து வழிகிறது புறங்கை நரம்பில்

நீர்மை வற்றிவிடும் பார்த்தலில் பதிவாகும்
பிம்பங்களின் நகர்தல்
உதிரி இழையென பிரிந்தவிழ்ந்து
சொற்பமாய் பதிவாகிறது
நினைவுக் கோப்பின் பிழை ஆவணமாய்

பிசகிய நடன அசைவை ஒத்திருக்கிறது
நிகழும் தடுமாற்றங்கள்

தாளம் தப்பி அடிக்கப்படும் கைத்தட்டல்கள்
விரல்களின் உதிர்தலோடு
முடித்துக் கொள்கிறது
நம்
அரங்கேறாத காட்சிகளை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 2 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4271

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக