வியாழன், டிசம்பர் 22, 2011

தலைகீழ் தொங்கும் வௌவால்களின் மெல்லிய இலைகள்..

*
மாற்றி விடும்படி நெருக்குகிறது இரவு
பரிச்சயமற்ற பனிப் பொழிவை
புறங்கையில் உணர நேர்ந்த
பால்கனி கைப்பிடியில்
புள்ளிகளைப் பூக்கின்றது ஈரம்

இழுத்து விட்ட சிகரெட் பெருமூச்சில்
வெளியேறுகிறது புகையிலைத் தோட்டம்

மங்கிய நட்சத்திர வெளிச்சம்
ஆசுவாசம் ஏற்படுத்தவில்லை
கரிய நிழலாகிப் போன மரத்தின் நிச்சலனம்
எதை உறுதி செய்கிறது

தலைகீழ் தொங்கும் வௌவால்களின்
சுருங்கிய இறக்கைக்குள்
அடங்க மறுக்கின்றன மெல்லிய இலைகள்

விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு துயரம்

அத்துயரத்தைச் சொல்லும் சொற்களை
மாற்றி விடும்படி நெருக்குகிறது இவ்விரவு

ஓர் எளிமையான நிராகரிப்பின் மூலமாக
அந்தச் சொற்களை எழுத்திலும் ஊன்றி
அழுத்தும்போதே முளைக்கிறது

இரவுக்குப் பிறகான
ஒரு 
வெம்மைப் பகல்


*****

2 கருத்துகள்: