செவ்வாய், செப்டம்பர் 30, 2014

இலை இலையாக உதிரத் தொடங்கும் சொல்லின் சருகுகள்..


*
சொல்லை வைத்து ஆடிய சூதில்
ஓர் அவனை வென்றேன்

இழந்த அவனின் வெற்றிடத்தை
அபகரித்துக்கொண்ட சொல்லைக் குறித்து
விசாரிக்கத் தொடங்கினான்
பயண நெடுவழி தோறும்

ஓய்வாய் உட்கார்ந்துவிட்ட மர நிழலில்
பாடலொன்றை பாடியது களைப்புத்தீர
அச்சொல்

குறிப்புகள் எடுத்துக்கொண்டான்

சொல் ஓய்ந்து அயர்ந்தபோது
மரத்தின் இலைகளை எண்ணிக் கொண்டிருந்தான்

தொடர்ந்த பயணத்தில்
தர்க்க வாதம் பண்ணினான் அதனிடம்

நடக்க நடக்க பாதையெங்கும் இலை இலையாக
உதிரத் தொடங்கிய
சொல்லின் சருகுகள் ஒவ்வொன்றும் நிறம் மாறின
வேறு வேறு சொல்லாக

நான் அவனாகிப் போன சூதில்
என்னை வென்ற சொல்
பெருங்காடாகியது

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக