செவ்வாய், செப்டம்பர் 30, 2014

வற்றிவிட்ட இதயத்தின் மரவுரி..


*
ஒளித்துகள் சரியும் பள்ளத்தாக்கில்
துளிர் விடுகிற இரவை பறிக்கிறது
உன் என் அவன் விலா எலும்பு


செரித்த விதைகளின் தோட்டம்
மலரச் செய்கிறது
ரத்தம் ருசிக்கும் கூர் பற்களை
விஷ வால் சுழலும் நைச்சியத்தை பழிக்கிறது
தொடக்கக் கால அசரீரி

குற்றத்தின் முன் மண்டியிடும் பாவங்களை
முகமூடிகளாகத் தயார் செய்து தரும் தச்சன்
எனது தோழன்

அவனுக்கொரு காவியுடையை நெய்து
தருவதாக எழுதி வைத்த சத்தியத்தை
சுவர் மீது தின்று திரிக்கிறது கரையான் கூட்டம்

ஈரப்பதம் வற்றிவிட்ட இதயத்தின் மரவுரியை
தரித்திருப்பினும் ஊடுருவும் குளிர்
குத்துகிறது விலாவை

நூற்றாண்டுகளில் உளுத்துப்போய்
ஒத்துக்கொள்வதாக முனகுகிறது அசரீரி

ஆமென்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக