வியாழன், ஜூலை 29, 2010

நீல நிறம் படர்த்தும் வளைவுகள் தோறும்..

*
தாழ்வார ஈரத்தில்
மேலும் சில சுவடுகளைச் சொட்டுகிறது
எனக்குப் பிரியமான மழை..

நீயில்லாத இரவோடு கைக் கோர்த்து
ஜன்னல் வழியே கசிந்து வெளியேறுகிறது
உனக்குப் பிடித்த இசை..

அசைவுறும்
ஒவ்வொரு சிறு பொருளும்
காற்றில் எழுதுகிறது
இந்த அறையின் வெறுமையை..

மெல்லிய நீல நிறத்தைப் படர்த்தும்
விளக்கொளி..
வளைவுகள் தோறும் ஒளிர்ந்து..

உன் நினைவை மீட்டு..

வரைய முயல்கிறது
ஓர்
ஓவியமாய்..!

****

அனல் நெளியும் புகையூடே..

*
அடுப்பின்
அனல் நெளியும்
புகையூடே
உன்
புன்னகை
மேலும் நவீனமாகிறது..!

****

மெட்ரோ கவிதைகள் - 73

*
கான்க்ரீட் கட்டிடத்தின்
பக்கவாட்டில் தொங்கும்
கேபிள் வயரில்..

மழைத் தூறல் சேகரமாகி
துளித் துளியாய்
சரிந்திறங்குவதில்
உருண்டு வழியும்
வானில்..

நீல நிறமில்லை..!

****

மௌனத் துகளொன்று..

*
மௌனத் துகளொன்று
என்
பிரபஞ்ச வெளியில் பருப்பொருளாகி
வெடிக்கும் முன்..

சிவந்து
அச்சுறுத்துகிறது

யாவற்றையும்..

****

தருணங்களின் சூழல்..!

*
தருணங்களை
இரண்டு வகைகளில்
குறிப்பெழுத
அவா கொள்கிறது என் சூழல்..

உன்
கை நழுவுதலை
வேடிக்கைப் பார்ப்பது

உன்
வேடிக்கையிலிருந்து நழுவி
கையசைப்பது..!

****

மேகத்திலிருந்து கழன்ற ஒரு புன்னகை..!

*
எத்தனையோ
கிலோ மீட்டர்கள் பயணித்து
மேகத்திலிருந்து கழன்ற ஒரு மழைத் துளி

உன்
முன்நெற்றி வகிட்டில்
மோதிச் சிதறியபோது

நீ
அண்ணாந்து வானம் பார்த்தது சிரித்ததை
கண்ணடித்து ரசிக்கிறது
ஒரு
மின்னல்..!

****

மரணத்துக்குரிய நிழல்..

*
ஒரு
மரணத்தைச் சுமந்து செல்கிறது
எறும்புக் கூட்டம்..

பிணத்தை
வெயில் சுடாமல்
நிழல் பிடிக்கின்றன
பாவைக் கொடி இலைகள்..!

****

பேய் மழை..!

*
' பேய் மழை ' -
என்றான் நண்பன்..

தலை விரித்தாடியது மரம்..

உண்மை தான் போலும்..!

***

தூயோன்..!

*
மனதின்
அதள பாதாளத்தில்
தளும்புகிறது பாலுணர்ச்சி

புளித்தபடி நாவின் நுனியில் குவியும் வேட்கையும்
நெரிபடும் பற்களை மறைக்கும் சாதுரியமும்
கண்களுக்குப் பழக்கமென வெளிப்படும் தூயோன்

இது ஒரு
கண்ணாமூச்சி..
கண்ணை மூடித் தொலைத்ததை
வேறெங்கே போய் தேட..?

வக்கற்று கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை..!

****

தனிமைக் குளத்தில்..

*
அளவற்று மூழ்கும்
தனிமைக் குளத்தில்

நகர்ந்து விரிகிறது

அலையோடு
ஒரு கேவல்

****