வியாழன், அக்டோபர் 28, 2010

மெட்ரோ கவிதைகள் - 87

*
அண்ணாந்து வாய் பார்க்கும்
குரங்குக் குட்டி
தாளமடிப்பவனின்
சேஷ்டைகளை
பசியோடு பட்டியலிடுகிறது

தலையில் தட்டை ஏந்தி
சலாம் வைத்து
கூட்டத்தை வலம் வந்து
சிதறும் காசுப் பொறுக்கி இளிக்கிறது..
நகரம் புரியாமல்

***

கனவுகள் வரைகின்றவனின் விரலொன்று..

*
ரகசியக் கனவுகள் வரைகின்றவனின்
விரலொன்று
அடர்ந்த இருளின் சதுப்புக்குள்
புதைந்து கிடக்கிறது

அதில் அசையும் பிம்பங்கள்
ஒளிர்கின்றன
வர்ணங்களற்ற தூக்கத்தில்

உதிரும் சிறகுகளின் இழைகளை
ஒரு சேரப் பிழிந்துத்
தொட்டுத் தர வழியற்று

புதைந்து கிடக்கிறது
விரலொன்று..

****

முற்றத்து மழை ஈர மணல்..

*
சின்னஞ்சிறு தாளச் சிதறலில்
முற்றத்து மழை
ஈர மணல்துகளை
வாரி இறைக்கிறது

எழுதிக் கொண்டிருக்கும்
கவிதை முழுதும்

அதிலொன்று
முற்றுப் புள்ளியாய் விழுந்து உப்புகிறது..!

***

கூர்மையான வார்த்தையின் இரவு..

*
மௌனத்தை விட வலிமையான
ஒரு திரையை
நீயேன்
நமக்கிடையில்
இழுத்துக் கட்டுகிறாய்

அதைக் கிழித்தெறிய
கூர்மையான
வார்த்தையொன்றை
இரவெல்லாம் சானைப் பிடிக்கிறேன்

கண்ணீர்ப் பட்டு
துருவேறுகிறது
அதன் அர்த்தம்

****

சாத்தானின் நாக்கு..

*
கடவுளின் சடை நுனியில்
சாத்தானின் முகம் வளர்கிறது

கூப்பும் கைகளுக்குள்
நடுங்கி உதிர்கிறது மந்திரம்

பிரார்த்திக்கும் உதடுகளுக்குள்
விஷம் சுழற்றுகிறது
சாத்தானின் நாக்கு

எளிய நம்பிக்கைகளின்
கர்ப்பகிரகத்துக்குள்
தீண்டப்படாத சர்ப்பம் போல்
சயனித்து கிடக்கிறது பொய்..

****

எலும்புகளால் முடையப்பட்ட உடல்..

*
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
வெளியே விழுகிறது
நிறமிழந்த கிருமி

எலும்புகளால் முடையப்பட்ட
உடலுக்குள்
நீண்ட பயணமாகி நீந்துகிறது
உயிர்

ஒரு
வெண் தேவதை
தன் ஸ்டெதாஸ் கரங்கள் கொண்டு
சோதித்துச் சபிக்கிறாள்

சென்றடையும் தூரத்தை
விரல்
விட்டு எண்ணத் தொடங்கும்படி
கட்டளையிடுகிறாள்

மரணத்தின் வாசல் வெகு அருகில்
என்கிறாள்

அவள் எழுதித் தரும்
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
உள்ளேயே விழுகிறது
நிறமிழந்த கிருமி

****

இலை நிழல்கள்..

*
படிகளில் உடைந்து உருளும்
சின்னச் சின்ன
இலை நிழல்களை
கையில் ஏந்திப்
பரவுகிறது வெயில்..!

****

சனி, செப்டம்பர் 25, 2010

கொஞ்சமாக..

*
நீண்டு
வெறிச்சோடிய
ஆஸ்பத்திரி மொசைக் வராண்டாவில்

பாலிதீன் உறையொன்று
வேகமாய் விரட்டி
இறுதி மூலையில்
தன்னுள் அடைத்துக் கொள்கிறது

கொஞ்சமாக
கொஞ்சம் காற்றை..!

****

விசித்திரத் தோட்டத்தின் புல்வெளி..

*
விசித்திரத் தோட்டத்தின்
புல்வெளியில்
என்
சிரிப்பொலிக்கு
ஒரு சிறகு முளைக்கிறது

அது
தன் கீச்சிடும் சப்தத்தோடு
கிளைக்குக் கிளைத் தாவி
இலை நரம்புகளின்
நதியோட்டத்தில்
சுழியிடுகிறது தனிமையின் இசையை

விசித்திரத் தோட்டத்தின்
எண்ணற்ற மலர்களில் கண்ணீர்த் ததும்புகிறது
அதை
உறிஞ்சு மயக்கங் கொள்ள

என்
சிரிப்பொலியின் சிறகு
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
மௌனம் போர்த்திய
புல்வெளியில்

****

சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

*
நமக்கிடையில்
வலுவிழந்து நழுவுகிறது
ஒவ்வொரு எழுத்தும்

சொல்லிக் கொண்டிருக்கும்போதே
வெளியேறுகிறது
உன்
உரையாடல்

சுவர் முழுக்க
கிளைப் பரப்பித் திரித்தேறுகிறது
நீ
என் தனிமையோடு விட்டுச் செல்லும்
உன்
அர்த்தங்கள் மொத்தமும்...

****