செவ்வாய், மே 26, 2009

தளிர் நுனிகளின் ரகசியங்கள்...

*

நண்பர்கள் அற்ற
ஒரு பகலின்
பள்ளத்தாக்கில்..

பாத ரேகைகள்
நசுக்கும்
சிறு பூக்களின்
வாசம்
நுகர்ந்தபடி...

மனசின்
காடு..
சூழ்ந்த
பசுங் கொடிகளை

நினைவின்
சடையாகப் பின்னி

வழித்தடம்..
எழுதிக்கொண்டே..

பனித்துளி
தேடும்போது...

ஈர வேர்களின்...
தளிர் நுனிகளை..
ரகசியமாய்..
இழுத்துக்கொண்டாய்..

உன்னை
கடந்து போய்விட..

என்னை
தவிர்த்தல் பொருட்டு..

****

வெயில் கோடுகள்..

*

அறை
ஜன்னல் கண்ணாடியை
பூசி மெழுகும்
வெயில்..

கம்பி சட்டகத்தை
வரைந்து வைக்கிறது
கோடுகளாய்..

வந்தமர்ந்த ஈயின்
அசைவற்ற
நிழலை..

துரத்தி வந்த
சுவர் பல்லி..

தற்செயலாய்..
நக்க நேர்ந்தது..
வெயிலை..

****

முதுகு கொத்தும் கற்பனை காகங்கள்..

*

சொற்களின்
கூட்டுப் பண்ணையில்

சதுப்பு நில
வாக்கியங்களில்..

அர்த்த எருமைகள்
மேய்கின்றன..

அதன் மீதேறி..
முதுகு கொத்தும்

கற்பனை காகங்கள்..

காயும்
இளவெயில் மின்னும்
கண்களை உருட்டி..

அண்ணாந்து
வானம் பார்க்கின்றன..

சூட்சும நூல்கள்
எங்கிருந்து நீள்கின்றன..

என்பதாக..
கவ்விப் பிடிக்க..

*****

ஒரு எழுத்து..

*

நீர் பட்டு
உப்பிய
காகிதத்தின் பரப்பில்..

ஒரு
எழுத்து மட்டும்
புடைத்திருக்க..

மற்றவை
சும்மா கிடந்தன..!

****

மீனின் புழுக்கள்..

*

மீன் செத்து
மிதக்கும்
நீர்த்தொட்டியில்..

சுதந்திரமாய்
நெளிகின்றன..

உணவுக்கான
புழுக்கள்..!

*****

வெள்ளி, மே 22, 2009

சாவிகள்..

*

வருவதாக
சொல்லி கிளம்பினான்..
நினைவின்
தொலைவிலிருந்து..

வந்து
சேரும்வரை..

காத்திருப்பின்
கதவுகள் தோறும்..
முளைக்கின்றன...

பல நூறு
சாவித் துளைகள்..

மனசின்
அலமாரி முழுக்கத்
தேடி களைத்தும்..

அகப்படவில்லை..
ஒரு சாவி கூட..

வந்தும் விட்டான்..
சொன்னதை விட
விரைவாக..

கை குலுக்கி..
புன்னகைத்தபோது..

கண்டு கொள்ள முடிந்தது
கை நிறைய
அவன்
வைத்திருந்த சாவிகளை..

****

மழைக்கான 'ரீ..ரீ..' - ஒலிக் குறிப்புகள்

*

மழைத்தும்பி ஒன்றின்..
கண்ணாடிச் சிறகு
ரீங்கரிப்பில்...

குழந்தைகள்
அண்ணாந்து பார்க்கின்றன..
கடந்து போகும்
மேகங்களை..

பிஞ்சு கைகளில்..
பிடித்து சுழற்றும்
சிறு துண்டின்
பிசிரிலிருந்தும்
கிளம்புகிறது..

' ரீ..ரீ..' -
ஒலிக் குறிப்புகள்..

தோளுயர
நாணல் கூட்டத்துக்குள்...
ஊடுருவி..

துரத்தும்
சத்தத்தில்...

தும்பிகளின்
ராகம் ஒத்த..

துண்டுகளின்..
இசைக் கம்பிகளை..
முத்தமிட...

காற்றுருகி...
நழுவுகிறது..

ஒற்றை
மழைத் துளி..

****

வார்த்தைகள் யாசிக்கின்றன..

*

கொடியில் காயும்
ஈரத் துணிகளை..
உருவி போவதை போல்

உதறி பார்க்கிறேன்..
எழுதி முடித்த
கவிதைத் தாளை..

பொய்யான
தூறலோடு..
பழிப்பு காட்டி நகரும்
மேகத் துண்டுகள்..

சூரியனை உறிஞ்சும்
ஆவலோடு..
உதடு குவிக்கிறது..

ஆரஞ்சு நிறக்
குழைவில்..
பிசிறடிக்கும் ஓரங்களோடு

கலைக்கும் காற்றை..
ஒத்தடமிடும்..
முயற்சியில்..

வார்த்தைகள்
ஒவ்வொன்றும்..

வானவில்லை
யாசிக்கின்றன...

****

பாலைவன மணல்...சில..!

*

மனசின் ..
நெடிய
பாலைவனத்தின்
முடிவில்
தொடங்கி விடுகிறது..
அடர் காடு..

உள்ளே..
கை விரித்து
அழைக்கிறது..
கடும் இருட்டு..

எரியும்
நினைவின் ஒளியில்
துணை வரக்கூடும்
நிழல் போல்
உன் புன்னகை..

நின்று
உதறும்
பாதங்களில்...
மெல்ல உதிர்கிறது..
பாலைவன மணல் துகள்
சில..

****

கல்..!

*

வாசிக்க
நேர்ந்த
ஒரு கவிதையின்
ஆழத்தில்..

விட்டெறிந்த கல்..

உன்
மௌனம்.

****