புதன், ஜூன் 30, 2010

காரியக் கண்ணாடியில்..

*
உன்
காரியக் கண்ணாடியில்
விழுந்த விரிசலின் முதல் நொடியில்..

இற்றுப் போயிற்று
நம்
வாசல்..!

****

துணையற்ற இரவில் எரியும் கேண்டில் லைட் டேபிள்..!

*
பிரிவதற்கான
நேர் எதிர் விவாதங்களை
நொறுக்கி
பீங்கான் பிளேட்களில்
கொட்டி வைத்திருக்கிறோம்

கேண்டில் லைட் டேபிளில்
நமக்குத் துணையாக
இரண்டு காலி நாற்காலிகள்
உட்கார்ந்திருக்கின்றன

கோப்பையை
உயர்த்திப்பிடித்து ஏறிடுகிறாய்

நானும்
என் கோப்பையை
உயர்த்துகிறேன்

அவைகளில்

பிரியமில்லாத இரவுகளும்
நம்பிக்கையிழந்த பகல்களும்
பொய்க் கரைசலின் நுரைகளும்
உயிரற்ற வார்த்தைகளின் சடலங்களும்
மிதக்கின்றன

சிவந்து அடர்ந்து புளித்த நிறத்தில்
கைவிடப்பட்ட
நிமிடங்கள் மொத்தமும்
தளும்புகின்றன

இப்போது
கோப்பைகள் மோதிச் சிணுங்கும்
இரண்டொரு நொடிகளில்

வெறும் கோப்பையை மேஜைமேல்
வைத்து விட்டு
ஒரே மூச்சில் கிளம்பிவிட்டாய்

சிணுங்களில் சிதறிய சில துளிகள்
பீங்கான் பிளேட்டிலும்
மேஜை விரிப்பிலும்
மெல்லப் பரவி விரிகிறது

என்னை நோக்கி..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 29 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3100

நினைவுகளைக் கடந்து செல்லுதல்..

*
நிறம் கூடித் தவிக்கிறது
நீ
வந்து சேராத நிமிடங்கள்..

நினைவுகளை
விரைந்து கடந்து செல்லுதல்
சாத்தியமற்றுப் போகிறது
ஒளி மங்கும்
நொடிகளுக்கும்..!

****

திங்கள், ஜூன் 28, 2010

ஊடலின் நவீன ஓவியம்..

*
ஊடலுக்குப் பிறகு
பெறுகிற முத்தத்தில் ..

கொஞ்சம்
கண்ணீரின் சுவையும்
உப்பின் வர்ணமும்
கலந்து
வரைகிறது
ஒரு நவீன ஓவியத்தை..!

****

மரணத்தின் வட்டக் கிணறு..!

*
மரணத்தின்
வட்டக் கிணற்றில்..
சலசலப்பும் இல்லை
அலைகளும் இல்லை

அமைதியாய்
மூழ்கிவிடுகிறது
ஒவ்வொரு நூற்றாண்டும்
ஒரு கல் என..!

****

காதலின் புறவழி..!

*
நள்ளிரவு உகுத்த நிலவொளியில்
காதலின் புறவழியில்

கால் கடுக்கக் காத்து நிற்கின்றன
நட்சத்திரங்கள்..

உதிர இருக்கும்
கவிதையின் சிறகுகளை
வாரிச் செல்ல..!

****

அடையாளமாய்..

*
வாசித்துக் கொண்டிருந்த
புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்தில்..

அடையாளமாய்
செருகிப் போகிறாய்
ஒரு
புன்னகையை..

அவசரமாய்..!

****

விட்டுச் செல்லும் கால் தடங்கள்..

*
நீண்ட
மணல்வெளியில்
விட்டுச் செல்லும்
கால் தடங்களின்
சிறு குழி நிழலுக்குள்..

காலத்தை அள்ளி வீசுகிறது
காற்று..!

****

மௌனமாய் நகரும் நதி..!

*
உயர
மலைச்சரிவின்
தேனடையிலிருந்து நழுவும்
ஒரு துளித் தேனை..

கீழே..

மௌனமாய் நகரும் நதியில்..
வாய்ப் பிளந்து விழுங்குகிறது...
ஒரு
நீர்க் குமிழ்..!

****

இசைக்கப்படாத கிடார் ஒன்றின் புயல் பொழுது..!

*
கிடார் ஒன்று இருக்கிறது என்னிடம்
இசைக்கத் தெரியாது..

பெருமழையுடன் கூடி
புயற் காற்று வீசிய
மாலைப் பொழுதில்..

ஜன்னல்களும் கதவுகளும்
வீடு நனைதல் குறித்த கவலைகளோடு
அடைப்பட்டுக் கொண்டுவிட்ட
தருணமொன்றில்..

கிடாருடன்
மொட்டைமாடியில் தனித்து நின்றேன்..

பலமாய் வீசிய
ஒரு
கடுங்காற்று..

அதன் நரம்பில் மோதி
மீட்டிச் சென்ற இசைக் குறிப்பு..

ஜாஸா..!
ராக்கா..?

****