வெள்ளி, ஜூலை 30, 2010

சுழலும் தனிமை அறை..

*
இத்தனிமை அறையில்
மௌன நிழலென
சுழல்வதையே

ஒரு
பழக்கமாக வைத்திருக்கிறது

இந்த
மின்விசிறி..

****

உதிரும் வர்ணங்களில்..

*
பிரியத்தின்
சிதறலில்

உதிரும் வர்ணங்களில்

இழைகிறது
நட்பெனும் ஈரம்..

****

மரணத்தின் ஈரச் சிறகுகளில் சொட்டும் நிழல்த் துளிகள் ..

*
துர்க் கனவொன்றின்
விரல் பிடித்துப் பறந்த இரவில்

மரணத்தின் ஈரச் சிறகுகளில்
சொட்டிய
நிழல் துளிகளைப்
பருகித் திமிறுகிறது

இதுவரை
பாடப்படாத
துக்கத்தின் குரல்..!

****

தனித்து தேங்குதல்..

*
எல்லா அடிக்குறிப்புகளிலும்
தனித்து
தேங்கிவிடுகிறது

கவிதைக்குள்
வடிக்கட்டப்பட்டுவிடும்
ஒரு
படிமம்

****

என்றேன்..என்றாள்..

*
'முடிவாக என்ன சொல்லுகிறாய்..? - என்றாள்

'முடிந்ததாக தெரியவில்லை ' - என்றேன்

'சரி..! இனி எனக்கு கால் பண்ணாதே ' - என்றபடி
ஸ்கூட்டியை கோபமாய் முறுக்கி
வேகமாய் டிராபிக்கில் கலந்துவிட்டாள்..

ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள் மொத்தமும்
அவளாகவே தெரிகிறார்கள்..!

****

காணும்போது..

*
காணும்போது
மலர்வதில்லை மொட்டுக்கள்..
காலையில் சொல்கின்றன
மலர்கள்..

****

உன்னில் காணாத ஒரு வெட்கம்..

*
இதுவரை
உன்னில் காணாத
ஒரு
வெட்கம்
நீ நடக்கையில்
உன்
சேலையில் சிக்குகிறது..!

****

நிழல்கள்..

*
நீல ஒளி படர்ந்த
என்
படுக்கை அறைச் சுவற்றில்..

அசையும் ஜன்னல்திரை நிழலோடு
கை குலுக்கி..
என்
இரவைப் பகிர்ந்து கொள்கிறது
தோட்டத்து நெல்லி மர இலை நிழல்..

***

புரியாத கணக்கு..!

*
வகுப்பின்
கடைசி பெஞ்சில் அமர்ந்து
புரியாத கணக்குக்கு பதில்
தமிழில் கிறுக்கிக் கொண்டிருந்த
ஏதோவுக்கு..

உள்ளங்கையில் பட்டையாய்
ரத்தங்கட்டிக் கொண்ட
வாத்தியாரின் பிரம்பு வரிகளுக்கிடையே..

மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது
எழுத நினைத்த..
அந்த ஏதோ ஒன்று..!

****

உன் புன்னகை வளைந்திருக்கிறது..

*
சாய்வுக் கோணத்தில்
எடுக்கப்பட்ட புகைப்படத்தில்
உன் புன்னகை வளைந்திருக்கிறது..

ஒளியும் இருளும் ஊர்ந்து வந்து
உன்னை அடைந்ததாகவே
தீர்மானிக்கத் தூண்டுகிறது

கண்ணசைத்துவிடாமல் நிற்க நேர்ந்த
அந்தவொரு நொடியில்
உன் கண்களில்...
எல்லைக் கோடமைத்த கண்ணீருக்கு
யாதொரு அர்த்தமும் இல்லை தானே..!

****