வியாழன், ஜூலை 31, 2014

கருவளையத்தை விட்டு கீழிறங்கித் திறந்து கொள்ளும் இரவு

*
சென்று அடைகிற காயங்களை சுவாசிக்கும் முன்
காத்திருக்கும்படி வந்து சேர்ந்த உத்தரவு அழைப்பை கையில் வைத்திருக்கிறாள்

மனத்தில் இருத்துவதற்குரிய ரகசியங்கள் யாவும் தீர்ந்துவிட்டதை
கடந்துவிட்ட பகல் சாட்சியம் சொல்வதாக ஒப்புக் கொண்டுவிட்டது

அதன் வெப்பச் சூடு கண்களின் கருவளையத்தில் சற்றேனும்
ஓய்ந்து தூங்கட்டும்
என விட்டு வைத்திருக்கிறாள்

சாபத்தின் சிறகுகளில் ஒட்டடை படிந்திருக்கிறது
முக்காலத்தை வலைப்பின்னும் சொற்களின் எட்டுக்கால்களும்
வலுவேறிவிட்டதாக நம்பத் தொடங்கிவிட்டாள்

அறையின் கிழக்கு மூலையில் இரவு திறந்து கொள்கிறது

படியேறி வரும் காலடிச் சத்தங்கள்
இழந்துவிடக்கூடாத நிதானத்தின் கடைசிப் பக்கத்தை
ஒரே ஒரு முறை நினைவுப்படுத்துகிறது

கருவளையத்தை விட்டு கீழிறங்கும் சொற்கள்
சாபத்தின் சர்ப்பப் பறவை பிளந்த நாவிலிருந்து
கொடிய நஞ்சின் இரண்டொரு சொட்டுகளை இரவல் பெற்று
அவள் கையில் திணிக்கிறது

அது ஒரு ஞாபகமூட்டல்
அது ஒரு பரிந்துரை
அது ஒரு போர்த் தந்திரமும் கூட

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக