வியாழன், ஜூலை 31, 2014

தவளையின் குரலாகிப் பெருகும் இரவின் நிறம்..

*
இரவை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த
தவளையொன்றை கண்டேன்

அசைந்துத் துடிக்கிற அதன் தாடை வேகங்கண்டு
அதிரத் தொடங்கியது மழை பெய்து தேங்கிய
நிலத்தின் நீரில் மிதக்கும் உதிர்ந்த வேப்பம் பூக்கள்

வசப்பட்டுவிட்ட இருளின் அர்த்தங்கள் மின்னும்
அதன் கண்களில் பரவுகிற வெளிர் மஞ்சள் நிற பிம்பமானேன்
அரைக் கணம்

எனது கைவிரல்களும் இதயத்துடிப்பும் சொற்களாய் உருமாற்றமாகி
தவளையின் குரலாகப் பெருகிய நொடியில்
கனத்து விழுந்த ஒற்றை மழைத்துளி
உச்சந்தலையில் மோதிச் சிதறியது

சிதறலின் மைக்ரோ நீர்ப்புள்ளி கிரீட நுனிகள்
பிரதிபலித்தன எண்ணற்ற தவளைக் கண்களை

ஏந்திய கை நிறைய காளானாக முளைத்துவிட்ட
சொற் குடைகளின் வனத்தை தவளையிடம் காண்பித்தேன்

அது தன் பசையுள்ள நாவை நொடியிழையில் நீட்டி
காளான்களை அபகரித்துக் கொண்டபடி
தொடர்ந்து
மொழிபெயர்க்கிறது இந்த இரவை

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக