வியாழன், ஜூலை 31, 2014

குளிர்ந்த உடலைக் கடந்து வெப்பத் தீவை அடைதல்

*
தாவரப் பச்சமை சுழிக்கிறது காதல் முத்தமொன்றின் கசந்த உதடுகளின் ஊடே
மலர்களைக் கனவு காண்பதாக புரளும் வேர்களின் ஈரக் கசிவை
இமை தாழ்ந்து மீளும்போது காண முடிந்தது

நறுமணம் நுகர்தல் பிழை என்பாய்

புலன்களின் காதுகளை அடைத்தபடி கேட்கப் பழகிய முனகல் இசை
இரவின் மீது படர்ந்தபடி பசலை வளர்க்கிறது

குளிர்ந்த உடலைக் கடந்துவிட அணைத்துக்கொள்
வெப்பத் தீவை அடையும்வரை படகைச் செலுத்து

படபடக்கும் பாய்மரத்தின் துடிப்பில் கனிகள் காய்க்கின்றன

புசிக்கத் தீண்டும் நாவில் பதியனிட்ட சொற்கள் சுரக்கும் பாலில்
சுவை கூட்டுகிறது முத்தத் திரவத்தின் ஊற்றைப் பிளந்து
கூரையை வெறித்து ஒரு மயக்கம்

அழுந்த பிதுங்கி கிளைப் பரத்தும் விரல்களில் வரைகிறாய்
வேறோர் உலகின் கதவை

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக