திங்கள், மார்ச் 21, 2011

சுழியிட்டு அழைக்கும் நீரின் வெம்மை..

*
நதியைக் கடக்கும்படி
கெஞ்சுகிறது
பரிசல்

கரையோரக் கூழாங்கற்கள்
நிலவைப் பூசிச் சிரிக்கிறது

நைந்து நிறமிழந்த கால் பூட்சில்
இரவை உரசி வைத்திருக்கிறது
என் தளர் நடை

பெண்ணொருத்தியின் கனவைப் போல
நெளிந்து நழுவும் நதியைக்
கடக்கும்படி
கெஞ்சுகிறது
இந்தப் பரிசலும்

சுழியிட்டு அழைக்கும் நீரின் வெம்மை 
விரல் நுனியிலிருந்து உருளும்
இந்த அகாலத்தை
குறிப்பெழுதிக் கொண்டிருக்கிறது

எதிர்க் கரையின்
அடர்த்தி மிகு மௌனம்

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக