வெள்ளி, செப்டம்பர் 23, 2011

மந்திரச் சொல்லோடு வந்த வழிப்போக்கன்

*
ஒரு மந்திரச் சொல்லோடு
வந்து சேர்ந்தான்
உன்னைக் கடந்து வந்த
உன் வழிப்போக்கன்

அது கதவுகளற்ற அறையின்
சுவர்களிலிருந்து புறப்பட்ட
குரலின் ரகசியமென்றான்

நூற்றாண்டு ஒட்டடைகள் படிந்த
பரணிலிருந்து
மனிதக் கவுச்சியோடு நழுவி விழுந்த
வரலாற்றுக் குறிப்பு என்றான்

கடவுளும் சாத்தானும்
கைக் குலுக்க நேர்ந்த கணத்தில்
இணைந்த ரேகைகளின் ஒப்பந்தம் என்றான்

தெருவோர இருளில் பதுங்கும்
பசித்த வயிற்றின் சுருக்கங்களிலிருந்து
இறங்கி வந்த உச்சரிப்பு என்றான்

ஒரு மந்திரச் சொல்லோடு
வந்து சேர்ந்தவனின் உதடுகள்
இறுதியாகப்
பூட்டப்பட்டிருந்தது

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 12 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4778

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக