வெள்ளி, செப்டம்பர் 23, 2011

குரலின் சாயல்..


தொடர்ந்து கேட்கும் குரலின் சாயலை
வரைந்து காட்டுகிறேன்
அடையாளம் தெரியவில்லை உங்களுக்கு

அது
அகாலத்தின் இருளை பூசிக்கொண்டு
ஒரு பறவையின் தொண்டைக்குள்
இறங்கியிருக்கும் என்கிறான் ஒருவன்

பின்ஜாமத்தில்
அழைக்கும் தொழிற்சாலை சங்கொலி தான்
குரலாகிப் போய்விட்டது
என்கிறார்  ஒருவர்

இரவை மையமிட்டு எரியும்
விளக்கின் சுடர் அலைவு தான்
அந்தக் குரல் என்கிறாள்
உடல் சக்கையாகும்  தோழி ஒருத்தி

வீரிட்டழும் ஒரு குழந்தையின் குரலை
கூரையில் பதுங்கி பதுங்கி நகரும்
பூனையொன்று திருடிப் போகிறது

நெஞ்சு விம்மி வெடித்து எழும்
ஓர் ஒப்பாரியில்
பொங்கி வழிகிறது இரவும்
அதன் இருளும்

தொடர்ந்து கேட்கும் குரல்களின் சாயலை
சுண்ணாம்பு உதிர்ந்த
காம்ப்பவுண்ட் சுவரில்
வர்ணங்கள் மங்கிய ஒரு போஸ்டராக
ஒட்டி வைத்திருக்கிறேன்
உங்கள் வாசலில்

அடையாளம் தெரிவதில்லை
உங்களுக்கு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக