செவ்வாய், மே 19, 2009

கடல் குதிரைகள்

*

துடுப்பசைத்து
கடல் கிழித்தோடும்
கட்டுமரத்தின்
ஒட்டு நுனியில்..

ஊன்றி நிற்கின்றன
இரவின் கால்கள்..!

அலைகரங்களின்
நுரை நகங்களில்..
கொக்குகள்
போட்டுச் சென்ற
வெண்மை கோடுகளை

நக்கிப் பார்க்கின்றன
சிறு மீன்கள்..!

வெயில்
உருகியோடும்
நீர்வெளியில்..

கடல் குதிரையொன்றின்
மீதேறி..
பயணிக்கிறது..
மீளாத கவிதை..!

****

ஸ்பரிச நாணல்

*

என்
மனக்கரையில்
குழிப் பறிக்கின்றன
உன்
புன்னகை நண்டுகள்..

கனவலை நுரைக்கும்
நீர்க் குமிழ்
ஒன்றில்..

வர்ணமாய்
தெறிக்கின்றன
உன் பெயரின்
ஒவ்வொரு எழுத்தும்..

என்
ஸ்பரிச நாணலின்
செம்பழுப்பு நிறமொத்த
வெம்மையை..

பார்வையால் தீண்டிய
உன்
சில்லிப்பில்..

உறைந்தது
காதலின்
கணம்..!

****

குயிலற்ற கூடு

*

கருகிச் செத்த
பனைமர
அடித்தண்டருகே..

காக்கைக் கூட்டின்
சிடுக்கில்..

அடைகாக்க
காகமற்ற..

குயிலின்
முட்டையொன்று..

உயிர் தளும்ப..
காத்திருக்கிறது..

அகப்படும்
கைகளுக்காக..!

****

இரவின் கார்பன் துகள்கள்..

*

நட்சத்திரங்களை
வாசிக்கச் சொல்லி
ஒரு
பின்னிரவு
எனையெழுப்பி
பாடம் நடத்தினாய்..

அறையின்
மங்கிய விளக்கொளியில்..
நிழலொத்த
ஜன்னல் திரையசைந்து..

அளந்த
நம்
உடலின் கோடுகளை..

விரல் பற்றி..
சுட்டிக் காட்டினாய்..

புரியா லிபியின்
கனவு அடுக்குகளை
பக்கம் பக்கமாய்..
புரட்டியபடி
சிரித்துக்கொண்டிருந்தோம்..

வானில்
அப்பிக் கிடந்த..
இரவின்
கார்பன் துகளெல்லாம்..
பொடித்து உதிரும் வரை..

****

வெள்ளி, மே 15, 2009

மெட்ரோ கவிதைகள் - 10

*
கட்டம் போட்ட
சட்டையணிந்து..

'காம்பினேஷன்' தப்பிய
பேண்ட்டுக்குள் செருகி..

பொருந்தாத
பெல்ட் இறுக்கி..

நிர்ப்பந்த உந்துதலில்
உணவுப் பொட்டலம்
சுமந்து..

ஆபீசுக்கு
போகிறான்
காசு சம்பாதிக்க..!

******

வியாழன், மே 14, 2009

ரசித்தபடி...

*

விரலிடுக்கில்
உட்கார்ந்து கொண்டு..

கவிதையெழுதும்
பேனா..

ரசித்தபடி..
உச்சந்தலையை
அசைத்து அசைத்து..

வியக்கிறது
உவமையை..!

****

என் மாமிசம்..

*

நக்கி பார்க்கிறாய்..
என்
ரோஷத்தை..

நெரிபடும்..
பற்களின் குழிகளில்..
சிக்கிக் கிடக்கிறது

என்
மாமிசம்..

*****

முற்றுப்புள்ளி..

*

ஒவ்வொரு
உரையாடலின்
முடிவிலும்..

உன்
இதழ் முனையின்..
கடைக் குழியில்..

ஊறிக் கிடக்கிறது..
ஒரு
முற்றுப்புள்ளி..

****

பழுத்த தென்றல்..!

*

வீறிட்டலறும்
குழந்தையின்..

குரலதிர்வில்..

அறைக்குள்
புகுந்த..

தென்றலொன்று..

பழுத்து
உதிர்கிறது..

தொட்டிலுக்குள்..!

****

அரூப எறும்புகள்..!

*

நான்
எழுத முயலாத..
ஏதோ
ஒரு கவிதையின்
வார்த்தைகளை..

பிரிந்தலையும்
எழுத்துக்கள்..

என்
அறையெங்கும்..
ஊர்கின்றன..
அரூப
எறும்பாக..!

காலொடிந்த ஒன்று..
என்
பெருவிரலின்
நகக் கண்ணை..
நக்கி நக்கி..

பிடுங்கியெறிய..
துடிக்கிறது..
என்னை
நான்
வாசிக்கும் புத்தகத்திலிருந்து..

பொறுமையிழந்து..
மொன்னை
பல்லால்..
கடித்தும் தின்கிறது..
கொஞ்சங் கொஞ்சமாக..

அது..
தின்று
செரித்தது போக..

மிச்சமிருக்கிறோம்..

நானும்
கை விரல்களும்..
கொஞ்சம் காகிதமும்..
ஒரு
பேனாவும்..

செய்வதறியாது..!

******