*
தெருமுனை வளைவில் கிடைக்கும்
சொற்ப நொடி அவகாசத்தில்
மிகச் சிறிய புன்னகையோடு
திரும்பிப் பார்க்கிறாய்
அப்போது
நான் அங்கு இல்லை..
0
என்ன சொன்னால்
எழுந்து வருவாய் என்கிறாய்
எதைச் சொன்னாலும்
எழுந்து வருவதாக இல்லை
என்
மௌனம்
0
அர்த்தங்களோடு மல்லுக்கட்டும்
அதிகாலையில்
வெப்பம் குறைந்த வெயிலாக
அறைக்குள் பிரவேசிக்கிறாய்
பேச இருந்த
எல்லா வாக்கியங்களுக்கு கீழும்
நிழல் பரவுகிறது
0
நீ
கூப்பிட்டும் கேட்டிராத குரலைப்
பற்றி
கண்ட கனவில்
இதழ்கள்
பூக்களில் கிழிந்து தொங்கின
*****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 17 - 2011 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக