சனி, ஜனவரி 29, 2011

கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

*
தெருமுனை வளைவில் கிடைக்கும்
சொற்ப நொடி அவகாசத்தில்
மிகச் சிறிய புன்னகையோடு
திரும்பிப் பார்க்கிறாய்
அப்போது
நான் அங்கு இல்லை..

0

என்ன சொன்னால்
எழுந்து வருவாய் என்கிறாய்
எதைச் சொன்னாலும்
எழுந்து வருவதாக இல்லை
என்
மௌனம்

0

அர்த்தங்களோடு மல்லுக்கட்டும்
அதிகாலையில்
வெப்பம் குறைந்த வெயிலாக
அறைக்குள் பிரவேசிக்கிறாய்
பேச இருந்த
எல்லா வாக்கியங்களுக்கு கீழும்
நிழல் பரவுகிறது

0

நீ
கூப்பிட்டும் கேட்டிராத குரலைப்
பற்றி
கண்ட கனவில்
இதழ்கள்
பூக்களில் கிழிந்து தொங்கின

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 17 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக